தமிழ்நாடு செய்திகள்

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 'வெற்றிவேல் வீரவேல்' ஆபரேஷன் நடத்தப்படும்- நயினார் நாகேந்திரன்

Published On 2025-05-07 13:08 IST   |   Update On 2025-05-07 13:08:00 IST
  • தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. என எந்த கட்சியாக இருந்தாலும் தேச உணர்வு இருக்க வேண்டும்.
  • நீட் தேர்வு எழுதும் மாணவிகளை தலைவிரி கோலமாக அனுப்புவது தேவையில்லாத ஒன்று.

நெல்லை:

நெல்லை மண்டலத்திற்குட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட தலைவர்களின் கூட்டம் நெல்லையில் உள்ள மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் நடைபெற்றது.

முன்னதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா சுதந்திரம் அடைந்த போது ஏற்பட்ட சந்தோஷத்தை விட, இன்று சந்தோஷம் மிகுந்த மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளது. காஷ்மீர் பயங்கரவாத சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்களின் ஆன்மா சாந்தி அடையும்.

பிரதமர் மோடி தனி நபர் அல்ல, 140 கோடி இந்தியர்களின் சிகரமாக விளங்குகிறார். பாகிஸ்தானில் 9 இடங்களில் உள்ள தீவிரவாதிகளின் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தெலுங்கானா காங்கிரஸ் முதல்-மந்திரியாக இருக்கக்கூடிய ரேவந்த் ரெட்டி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறியதற்காகவும், தேச ஒற்றுமை பிரச்சனை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசியதற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலுக்கு எந்த நாடு வருத்தம் அடைந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.

இந்தியாவின் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயர் வைக்க காரணம் கணவனை இழந்த பெண்கள் செந்தூரம் அதாவது குங்குமத்தை வைக்க முடியாது. அதனால் அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. என எந்த கட்சியாக இருந்தாலும் தேச உணர்வு இருக்க வேண்டும்.

தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில் 177-வது வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தவில்லை. இது போன்ற வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ளது. எனவே விரைவில் கூட்டணியை முடிவு செய்து ஆபரேஷன் சிந்தூர் போல 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் 'வெற்றிவேல் வீரவேல்' எனும் ஆபரேஷனை தொடங்குவோம்.

பா.ஜ.க.வில் இருந்து திருமாவளவனுக்கு நான் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கவில்லை. அவர் என்னுடைய நெருங்கிய நண்பர். மற்றவர்கள் யாரும் பேசினார்களா என தெரியவில்லை. நீட் தேர்வு எழுதும் மாணவிகளை தலைவிரி கோலமாக அனுப்புவது தேவையில்லாத ஒன்று.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்றுள்ளீர்கள். நீங்கள் போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளீர்களா? என கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில்,

நான் தமிழக முதலமைச்சரை பெரிதும் மதிக்கிறேன். நயினார் நாகேந்திரனுக்கு எதற்கு பாதுகாப்பு. அவர் தான் எல்லோருக்கும் பாதுகாப்பு வழங்க கூடியவர் என அவர் நினைத்திருக்கலாம் என கூறினார்.

பின்னர் மத்திய அரசால் வழங்கப்படும் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு கேட்டுள்ளீர்களா? என கேட்டதற்கு, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு எனக்கு தேவையில்லை என்று கூறினார்.

Tags:    

Similar News