அம்பேத்கர் பற்றிய பேச்சு- அமித் ஷாவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
- நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் அறைகூவல் விடுத்திருக்கிறது.
- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும் நேரு பூங்கா அருகே மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பாராளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித் ஷா பதவி விலக வேண்டும், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் அறைகூவல் விடுத்திருக்கிறது. அதன்படி சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் இன்று மாலை 3 மணிக்கு அண்ணாசாலை தர்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், அசன் மவுலானா, மாவட்ட தலைவர்கள் சிவராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், முத்தழகன், அடையாறு துரை ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
அதேபோல அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தியாவிற்கு அரசமைப்புச் சட்டத்தை வழங்கி 140 கோடி மக்களும் ஜனநாயக உரிமையோடு வாழ்வதற்கு அடித்தளம் அமைத்த அம்பேத்கரை இழிவுபடுத்துகிற பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டவர்களின் முயற்சிகளை முறியடிக்க காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும் நேரு பூங்கா அருகே மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.