சென்னை வந்த நட்டாவை ஓ.பி.எஸ். சந்திக்காதது ஏன்?
- வெளியூரில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அவசரம் அவசரமாக புறப்பட்டு சென்னைக்கு வந்திருந்தார்.
- பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வை இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது.
சென்னை:
பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் நட்டா நேற்று சென்னை வந்தார். தங்கசாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அதன் பிறகு அவர் டெல்லி புறப்படும் முன்பு தோழமைக்கட்சி தலைவர்களை சந்தித்து பேசுவார் என்று தகவல் வெளியாகி இருந்தது. குறிப்பாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்காகவே வெளியூரில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அவசரம் அவசரமாக புறப்பட்டு சென்னைக்கு வந்திருந்தார். நட்டாவை சந்திக்க அவர் தயார் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரை நட்டா அழைக்கவில்லை.
பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வை இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. மேலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முழுமை பெறவில்லை.
இந்த நிலையில் ஓ.பி.எஸ்.சை சந்தித்து பேசினால் தொகுதி பங்கீடு உள்ளிட்ட அடுத்தடுத்த பேச்சுவார்த்தைக்கு இடையூறு ஏற்படலாம் என்று கருதப்பட்டது. இதனால்தான் ஓ.பன்னீர்செல்வத்தை நட்டா சந்திக்காமல் சென்றார் என்று கூறப்படுகிறது.