தமிழ்நாடு

ஓட்டுக்காக மத வெறுப்புடன் பேசுவது மோடி வகிக்கும் பிரதமர் பதவிக்கே இழுக்கு- மனோ தங்கராஜ்

Published On 2024-04-22 15:01 GMT   |   Update On 2024-04-22 15:01 GMT
  • காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பார்த்து "இது முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை போல் உள்ளது" எனக் கூறினார் மோடி
  • காஷ்மீரில் தாவர உணவு சாப்பிடுகின்ற மக்கள் மத்தியில் பேசும்போது மாமிச உணவு சாப்பிடுபவர்களை பற்றி கொச்சையாக விமர்சித்தார் மோடி

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?. நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளுடன் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.

அவர்களின் மங்களசூத்திரத்தின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவரின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?

இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், "தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா? இல்லை, கல்லறைக்குள் சென்று விட்டதா?

 தேர்தல் பிரச்சாரங்களில்:

- காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பார்த்து "இது முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை போல் உள்ளது" எனக் கூறினார் மோடி.

- காஷ்மீரில் தாவர உணவு சாப்பிடுகின்ற மக்கள் மத்தியில் பேசும்போது மாமிச உணவு சாப்பிடுபவர்களை பற்றி கொச்சையாக விமர்சித்தார் மோடி.

- நேற்று ராஜஸ்தானில் "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கழுத்தில் இருக்கும் தாலி கூட மிஞ்சாது, உங்கள் சொத்துக்களையும், பொருட்கள் அனைத்தையும் இஸ்லாமியர்களுக்கு பங்கு போட்டு கொடுத்து விடுவார்கள்" என்று கூறியுள்ளார் மோடி.

இதிலிருந்து மோடியின் பேச்சில் தோல்வி பயமும், விரக்தியும் வெளிப்படையாகவே தெரிகிறது. ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் ஓட்டுக்காக மக்களை பிரிக்கும் முயற்சியாக இப்படி மத வெறுப்புடன் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கே இழுக்கு" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News