செய்திகள்

18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் விரைவில் குதிரை பேரம் ஆரம்பிக்கும்- அர்ஜுன் சம்பத்

Published On 2018-10-23 06:35 GMT   |   Update On 2018-10-23 06:35 GMT
18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கூவத்தூர் கலாச்சாரம் தொடர்வதால் குதிரை பேரம் விரைவாக ஆரம்பிக்கும் என்றும் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். #MLAsDisqualificationCase #ArjunSampath
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

144 வருடங்களுக்கு பிறகு நடைபெறும் தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு பல லட்சம் மக்கள் வருவார்கள் என்று தெரிந்தும் அரசும், அறநிலையத்துறையும் ஒத்துழைக்கவில்லை. போக்குவரத்து வசதி, ரெயில் வசதி, பெண்கள் உடை மாற்றும் அறைகள் எல்லாம் சரி செய்து தரப்படவில்லை. புஷ்கர விழாவில் 40 லட்சம் மக்கள் புனித நீராடி இருக்கிறார்கள்.

18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கூவத்தூர் கலாச்சாரம் தொடர்கிறது. இதனால் குதிரை பேரம் விரைவாக ஆரம்பிக்கும். இதற்கு மாற்று அரசியல் கண்டிப்பாக வரவேண்டும். அ.தி.மு.க., தி.மு.க. இருக்கும் வரை இது போன்ற அரசியல் நடக்கும் என்றார். இதற்காகத்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் ஆரம்பித்திருக்கிறார். ஆன்மீக அரசியல் கண்டிப்பாக வெற்றி பெறும்.

வருகிற 26-ந் தேதி சென்னையில் மீ டூ விவகாரம் குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பொதுவாக பாலியல் விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். அது பொய்யென்றால் புகார் அளித்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுபோன்ற வி‌ஷயங்களில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும்.

எச்.ராஜா மீது தொடர்ந்து மீம்ஸ் மூலம் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கூறப்பட்டுள்ளதால் அவர் பதவி விலக வேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும். இதை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #MLAsDisqualificationCase  #ArjunSampath
Tags:    

Similar News