செய்திகள்

மதுரையில் எய்ம்ஸ் அமைவது தொடர்பான வழக்கு: மத்திய-மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு

Published On 2018-10-09 11:15 GMT   |   Update On 2018-10-09 11:15 GMT
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #AIIMS
மதுரை:

மதுரையை சேர்ந்த ரமேஷ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம், தோப்பூர் பகுதியில் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதால் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதமே மத்திய அரசு அறிவித்தது. ஆனால் எந்த இடத்தில் அமைய உள்ளது என்பதை 3 ஆண்டுகள் கழித்து அறிவித்துள்ளனர்.

பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டவுடன், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. ஆனால் மதுரை தோப்பூரில் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை.

எனவே தமிழகத்தில் மதுரை மாவட்டம், தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்று அரசிதழில் மத்திய அரசு வெளியிட வேண்டும்.

மேலும் அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற வேண்டும். கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தை விரைவுபடுத்தவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்து மனு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் இந்த பிரச்சனை குறித்து விளக்கம் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.  #AIIMS
Tags:    

Similar News