'உலகம் அழியும்' எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்திய கானா நாட்டு 'தீர்க்கத்தரிசி' கைது!
- 2025 டிசம்பர் 25-ந்தேதி முதல் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் உலகம் அழியும் என கூறினார்.
- தீர்க்கத்தரிசி என்று கூறிய எபோ நபோ திடீரென தனது பேச்சை மாற்றிக்கொண்டார்.
கானா நாட்டைச் சேர்ந்த 30 வயதான எபோ நோவா என்ற நபர் தன்னைத்தானே தீர்க்கத்தரிசி என்று கூறிக்கொள்கிறார். அவர் சாக்கு உடை அணிந்து கொண்டு மக்களுக்காக உண்ணாவிரதம், பிரார்த்தனை மேற்கொள்வதாக கூறிக்கொண்டு வரவிருக்கும் பேரழிவு குறித்து எச்சரிப்பதாக இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், 2025 டிசம்பர் 25-ந்தேதி முதல் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் உலகம் அழியப்போகிறது. உலகம் அழியும்போது மக்களைக் காப்பாற்ற கடவுளின் உத்தரவின் பேரில், பைபிளில் வருவது போல 8 பெரிய கப்பல்களை (பேழைகளை) கட்டி வருவதாக கூறினார்.
இவரது பேச்சைக் கேட்ட மக்கள் அதை நம்பி, பேழைகளைக் கட்டுவதற்கு பலர் தங்கள் உடைமைகளை விற்று பணத்தை அவருக்குக் கொடுத்துள்ளனர். மேலும் அந்த பேழையில் இடம் பிடிக்க அவரை தேடிச் செல்லவும் தொடங்கினர்.
இந்த நிலையில் தான், தன்னை தீர்க்கத்தரிசி என்று கூறிய எபோ நபோ திடீரென தனது பேச்சை மாற்றிக்கொண்டார். அதாவது, அவர் கடவுளிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ததால், அதனை ஏற்றுக்கொண்ட கடவுள் உலக அழிவை தற்காலிகமாக தள்ளிவைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.
இந்நிலையில், டிசம்பர் 25-ம் தேதி உலகம் அழியப்போகிறது" என்று கூறி மக்களிடையே பீதியை ஏற்படுத்திய எபோ நோவா என்பவரை கானா நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர்.
எபோ நோவா மழுப்பலாக வீடியோ வெளியிட்ட நிலையில், அவரை பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகக்கூறி காவல்துறை கைது செய்தது.