மெஸ்ஸி, ரோகித் வரிசையில் உலக கோப்பையுடன் தூங்கிய இந்திய மகளிர் அணி கேப்டன்
- தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
- ஹர்மன்ப்ரீத் கவுர், உலக கோப்பையுடன் தூங்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.
299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.
45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், உலக கோப்பையுடன் தூங்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அப்புகைப்படத்தில் ஹர்மன்ப்ரீத் கவுரின் டி சர்ட்டில் கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு மட்டுமல்ல , அனைவருக்குமான விளையாட்டு" என்று எழுதப்பட்டுள்ளது.
முன்னதாக கால்பந்து உலக கோப்பையை வென்ற மெஸ்ஸி, டி20 உலக கோப்பையை வென்ற ரோகித் ஆகியோர் உலக கோப்பையுடன் தூங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.