INDW vs AUSW | மகளிர் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் 198 ரன்னில் சுருண்டது இந்தியா
- ஜெமிமா ரோட்ரிக்ஸ் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
- ஷபாலி வர்மா 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்கான ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய மகளிர் அணி கைப்பற்றியது. அதன்பின் நடைபெற்ற 50 ஒவர் தொடரை ஆஸ்திரேலியா வென்றது.
இந்த நிலையில் ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் டே-நைட் போட்டியாக பெர்த்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் களம் இறங்கியது.
ஸ்மிரிதி மந்தனா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷபாலி வர்மா 35 ரன்கள் சேர்த்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பிரதிகா ராவல் (18), ஹர்மன்ப்ரீத் கவுர் (19), தீப்தி சர்மா (7), ரிச்கா கோஷ் (11) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய மகளிர் அணி முதல் இன்னிங்சில் 198 ரன்னில் சுருண்டது.
பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா பேட்டர்களும் திணறினர்.
ஜார்ஜியா வோல் 2 ரன்னிலும், லிட்ச்பீல்டு 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் அலிசா ஹீலி 13 ரன்னில் வெளியேறினார். ஆனால் எலிஸ் பெர்ரி நிலைத்து நின்று விளையாடினார். அவருக்கு சுதர்லேண்டு ஆதரவாக விளையாடினார். இதனால் முதல்நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்கவில்லை.
ஆஸ்திரேலியா மகளிர் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. பெர்ரி 43 ரன்களுடனும், சுதர்லேண்டு 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.