காங்கிரஸ் கட்சி கூட்டத்தை 3வது முறையாக புறக்கணித்த சசி தரூர்
- சமீப காலமாக சசி தரூர் பிரதமர் மோடியையும், பா.ஜ.க.வையும் புகழ்ந்து வருகிறார்.
- இது காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
புதுடெல்லி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் மக்களவை தொகுதி எம்.பி.யுமான சசி தரூர், சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ.க.வையும் புகழ்ந்து வருகிறார். இது காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்து கட்சி குழு கூட்டத்தில் சசி தரூர் இடம்பெற்றார்.
இதற்கிடையே, மத்திய அரசின் பல்வேறு செயல்பாடுகளை பாராட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ள சசி தரூர், காங்கிரஸ் தலைமை நிர்வாகிகளை சந்திப்பதை தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில், நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்துள்ளார். சசி தரூர் 3வது முறையாக ஆலோசனைக் கூட்டத்தை தவிர்த்திருப்பது காங்கிரஸ் கட்சி மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே சோனியா தலைமையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் மற்றும் கடந்த மாதம் எஸ்.ஐ.ஆர். குறித்த விவாதத்தையும் அவர் புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.