இந்தியா

பா.ஜனதா உத்தவ் தாக்கரேக்கு பயப்படுகிறது: சஞ்சய் ராவத்

Published On 2023-06-12 03:55 GMT   |   Update On 2023-06-12 05:10 GMT
  • பா.ஜனதா அதன் சொந்த வலையில் சிக்கி உள்ளது.
  • உத்தவ் தாக்கரே மற்றும் உண்மையான சிவசேனா மீதான பயம் போகவில்லை.

மும்பை :

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் வந்து இருந்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், உத்தவ் தாக்கரேவிடம் பேச நானும், தேவேந்திர பட்னாவிசும் சென்றோம். அப்போது அவர் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக ஒத்துக்கொண்டார். ஆனால் தேர்தல் முடிவு வந்தவுடன் உத்தவ் தாக்கரே கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை. காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சோ்ந்து கொண்டார். ஆட்சியை கவிழ்த்ததாக எங்களை குற்றம் சாட்டுகிறாா்கள். நாங்கள் ஆட்சியை கவிழ்க்கவில்லை.

உங்களின் நாடகத்தால் விரக்தி அடைந்த சிவசேனா தொண்டர்கள் தான் ஆட்சியை கவிழ்த்தனர். அவர்கள் தேசியவாத காங்கிரசுடன் இருக்க விரும்பவில்லை, எனவே விலகி வந்தனர், என பேசியிருந்தார்

இந்தநிலையில் அவரது பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் பா.ஜனதா உத்தவ் தாக்கரேக்கு பயப்படுவதாக சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சமூகவலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

"பா.ஜனதா உத்தவ் தாக்கரேக்கு பயப்படுவது நல்லது தான். அவர்கள் கட்சியை உடைத்தனர், கட்சியின் சின்னத்தையும், பெயரையும் துரோகிகளுக்கு கொடுத்தனர். தற்போதும் கூட அவர்களுக்கு உத்தவ் தாக்கரே மற்றும் உண்மையான சிவசேனா மீதான பயம் போகவில்லை.

அமித்ஷா 20 நிமிடங்கள் பேசியுள்ளார். இதில் 7 நிமிடங்கள் அவர் உத்தவ் தாக்கரே பற்றி தான் பேசியுள்ளார். அவரது பேச்சு வேடிக்கையாக இருந்தது.

அந்த கூட்டம் பா.ஜனதா மகா சம்பர்க் அபியானுக்காக நடந்ததா அல்லது உத்தவ் தாக்கரேயை விமர்சிக்க நடந்ததா என ஆச்சரியமாக உள்ளது. உத்தவ் தாக்கரேவிடம் கேட்ட கேள்விகளை பா.ஜனதா தங்களுக்குள் கேட்டு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பா.ஜனதா அதன் சொந்த வலையில் சிக்கி உள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இதேபோல பரூக் அப்துல்லா, மெபூபா முப்தி, நிதிஷ்குமார், மாயாவதி, ஓம் பிரகாஷ் சவுதாலா ஆகியோருடன் பா.ஜனதா கூட்டணி வைத்த போது, இந்துத்வா எங்கு போனது என அமித்ஷாவுக்கு உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சியின் சட்டமேல் சபை எதிர்க்கட்சி தலைவர் அம்பாதாஸ் தன்வே கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags:    

Similar News