இந்தியர்கள் 3 குழந்தை பெத்துக்கணும்.. ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்துக்கு வலுக்கும் கண்டனம்
- குழந்தைப் பிறப்பு விகிதம் 2.1 க்கும் கீழ் குறைவாக உள்ள சமூகங்கள் அழிந்துவிடும்
- சீனாவை பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் மக்கள்தொகை 142 கோடியாக அதிகரித்துள்ளது.
மக்கள் தொகை குறைந்த சமூகம் அழிந்துவிடும் என்பதால் இந்தியர்கள் குறைந்தது 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியைப் பேசிய அவர், ஒவ்வொரு குடும்பமும் சமூகத்தின் ஓர் அங்கம். சமூகத்தின் வளர்ச்சிக்கு குடும்பங்களின் பங்கு அவசியம். தற்போது மக்கள் தொகை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயம். மக்கள் தொகை குறைந்து வருவதால் பல மொழி, கலாச்சாரமும் ஏற்கனவே அழிந்து விட்டன.
குழந்தைப் பிறப்பு விகிதம் 2.1 க்கும் கீழ் குறைவாக உள்ள சமூகங்கள் அழிந்துவிடும் என மக்கள் தொகை அறிவியல் காட்டுகிறது. 1998 அல்லது 2022ல் உருவாக்கப்பட்ட நம் நாட்டின் மக்கள்தொகை கொள்கையும் மொத்த பிறப்பு விகிதம் 2.1க்கு கீழே இருக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறது.
மக்கள் தொகை குறைந்த சமூகத்தை அதை வேறு யாரும் அழிக்க வேண்டாம். அது தானாகவே அழிந்து விடும். எனவே ஒவ்வொரு தம்பதியும் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்று கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சீனாவை பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் மக்கள்தொகை 142 கோடியாக அதிகரித்துள்ள நிலையில் மோகன் பகவத்தின் கருத்து விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
இந்நிலையில் மோகன் பகவத் கருத்தை காட்டமாக விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி, "நாங்கள் (பெண்கள்) தொடர்ந்து இனப்பெருக்கம் செய்யும் முயல்களா? வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள இந்த நேரத்தில் ஏன் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று மோகன் பகவத் சொல்ல வேண்டும். மக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுத்தால், பள்ளிக் கட்டணம், விமானக் கட்டணங்கள் மற்றும் பள்ளிக் கல்விச் செலவுகளை அரசாங்கம் குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய சிவசேனா (உத்தவ் தாக்கரே) தலைவர் சஞ்சய் ராவத், "முதலில் உங்கள் பாஜக உறுப்பினர்களுக்கு இந்த அறிவுரையை சொல்லுங்கள். உங்கள் அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த விரும்புகிறது. அதே சமயம் குழந்தை பிறப்பை அதிகரிப்பது பற்றி ஆர்.எஸ்.எஸ். பேசுகிறது. இது ஒரு பாசாங்குத்தனமான கொள்கை. ஆர்எஸ்எஸ் தலைவர் ஏன் பெண்கள் பாதுகாப்பு போன்ற இந்த விஷயங்களைப் பற்றி பேசவில்லை?" என்று தெரிவித்தார்.
மோகன் பகவத் கருத்துக்கு எதிர்வினை ஆற்றிய ஐதராபாத் எம்.பி. ஒவைசி, "நான் மோகன் பகவத்திடம் கேட்க விரும்புகிறேன். அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்கும் மக்களுக்கு அவர் என்ன கொடுப்பார். அதிக குழந்தைகளைப் பெற்றவர்களின் வங்கிக் கணக்கில் ₹1500 கொடுப்பாரா? இதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்துவாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.