இந்தியா

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்: ராகுல் காந்தி பேச்சு

Published On 2024-03-02 14:07 GMT   |   Update On 2024-03-02 14:07 GMT
  • பா.ஜ.க. மக்களை ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கிறது.
  • காங்கிரஸ் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றார் ராகுல் காந்தி.

போபால்:

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தற்போது மத்திய பிரதேசத்தை அடைந்துள்ளது. இங்கு மொரேனா பகுதியில் இன்று நடந்த யாத்திரையில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டின் விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தித் துறை ஆகிய அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து செல்வங்களும் ஒரு சில தொழிலதிபர்கள் கையில் உள்ளது.

நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறை பரவுவதற்கு என்ன காரணம் என மக்களிடம் கேட்டேன். அதற்குக் காரணம் அநீதி என அனைவரும் பதிலளித்தனர். நாட்டில் மக்களுக்கு பல்வேறு வழிகளில் அநீதி இழைக்கப்படுகிறது. அதனால்தான் இந்தியாவில் வெறுப்பு பரவுகிறது.

ஒரு பக்கம் ஜாதி, மதத்தின் பெயரால் மக்களை பா.ஜ.க. பிரிக்கிறது. மறுபுறம் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. யாத்திரை மத்தியப் பிரதேசத்தின் புனித பூமிக்குள் நுழைந்துள்ளது.

நாட்டில் 50 சதவீதம் ஓபிசி, 15 சதவீதம் தலித் மற்றும் 8 சதவீதம் பழங்குடி மக்கள் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 73 சதவீதம் ஆகும். நாட்டின் பெரிய நிறுவனங்களில் ஓபிசி, தலித் அல்லது பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக்கூட காணமுடியாது.

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை காங்கிரஸ் சட்டப்பூர்வமாக வழங்கும் என குறிப்பிட்டார்.

Tags:    

Similar News