இந்தியா

இஸ்லாமிய பெண் வாக்காளர்களை சோதித்த பாஜக வேட்பாளர் மாதவி லதா- ரேவந்த் ரெட்டி கண்டனம்

Published On 2024-05-13 14:36 IST   |   Update On 2024-05-13 14:44:00 IST
  • வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை பர்தாவை தூக்கச் சொல்லி.. முகத்தை காட்டு என மிரட்டியதாக கூறப்படுகிறது.
  • இந்த செயல்கள் அனைத்தும் பாஜகவுக்குப் பயனளிக்கப் போவதில்லை, மாற்றாக அசாதுதீன் ஒவைசிக்கு உதவப் போகிறது

தெலுங்கானா மாநிலத்தில் இன்று 4வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

ஹைதராபாத் தொகுதியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஆதார் கார்டை கேட்டு பா.ஜ.க. வேட்பாளர் மாதவி லதா சரிபார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை பர்தாவை தூக்கச் சொல்லி.. முகத்தை காட்டு என மிரட்டியதாக கூறப்படுகிறது.

அவர்களை மிரட்டி முகத்தைப் பார்த்த பின்னரே வாக்களிக்க மாதவி லதா அனுமதித்தார். இதை போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் வேடிக்கை பார்த்துள்ளனர்.

இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வாக்களிக்க வந்த இஸ்லாமியப் பெண்களின் ஆதார் கார்டை சரிபார்த்த பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் நடவடிக்கை தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அவர், "நான் அந்த வீடியோவை பார்க்கவில்லை, ஆனால் பாஜக திட்டமிட்டு முஸ்லிம் வாக்குகளைச் சிதைக்க முயற்சிக்கிறது, ஆனால் இந்த செயல்கள் அனைத்தும் பாஜகவுக்குப் பயனளிக்கப் போவதில்லை, மாற்றாக அசாதுதீன் ஒவைசிக்கு உதவப் போகிறது" என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹைதராபாத் மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

மாதவி லதா தேர்தல் பிரசாரத்தின்போது மசூதியைப் பார்த்து அம்பு எய்வதுபோல் சைகை காட்டி சர்ச்சைக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News