செய்திகள்

பீகார் சிறுமியர் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமை - விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றம்

Published On 2018-07-29 13:07 GMT   |   Update On 2018-07-29 13:07 GMT
பீகார் மாநிலத்தில் அரசு நிதியுதவி பெறும் சிறுமியர் காப்பகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணை இன்று மத்திய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது. #CBIinvestigation #abuseofminorgirls #MuzaffarpurShelterHome
பாட்னா:

பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சாஹூ சாலையில் அரசு நிதியுதவி பெறும் சிறுமியர் காப்பகம் ஒன்றுள்ளது. இங்கு சுமார் 40 சிறுமியர் தங்கியுள்ளனர். இந்த காப்பகத்தின் நிர்வாகிகள் சிறுமிகளை கற்பழித்ததாகவும், ஒரு பெண்ணை அடித்துக் கொன்று காப்பக வளாகத்துக்குள் புதைத்து விட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இதைதொடர்ந்து, இங்குள்ள சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தபோது அவர்களில் பெரும்பாலானோர் ஏதோ ஒரு காலகட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது.

காப்பகத்தில் உள்ள இரு சிறுமிகள் அளித்த தகவலின் அடிப்படையில் மோப்ப நாய்களுடன் வந்த போலீசார் காப்பக வளாகத்தில் புதைக்கப்பட்ட பிணைத்தை கைப்பற்றுவதற்காக தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனைக்கு மறுப்பு தெரிவித்த காப்பகத்தை சேர்ந்த சுமார் பத்து பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது என சமூக ஆர்வலர்கள் கருதினர். இதே கருத்தை முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் மகனான தேஜஸ்வி யாதவ் நேற்று வலியுறுத்தினார்.

இந்நிலையில், இந்த காப்பகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணை இன்று மத்திய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பீகார் மாநில அரசின் பரிந்துரையை ஏற்று இந்த காப்பகத்தில் உள்ள சிறுமியர்களுக்கு மனதளவிலும், உடல்ரீதியாகவும் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை தொடர்பாக காப்பக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்க தொடங்கி உள்ளனர். #CBIinvestigation #abuseofminorgirls #MuzaffarpurShelterHome
Tags:    

Similar News