செய்திகள்

அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு மோடி ஆட்சி நடத்துகிறார்- இல.கணேசன் பேட்டி

Published On 2018-11-18 11:31 GMT   |   Update On 2018-11-18 11:31 GMT
தேர்தலை கருத்தில் கொள்ளாமல் அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு மோடி ஆட்சி நடத்துகிறார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று இல.கணேசன் கூறினார். #pmmodi #ilaganesan

மதுரை:

பாரதீய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒருவர் தமிழ் பற்றாளராக இருந்தால் அவர் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் தேசிய இயக்கங்களை சேர்ந்தவர்கள், தமிழ் பற்றாளர்கள் அல்ல என்றும் தவறான கருத்து நிலவி வந்தது.

அதனை மாற்றத்தக்க வகையில் செயல்பட்டவர் வ.உ.சி. அவரது நினைவு நாளை அனுசரிப்பதன் வாயிலாக தேச நலனுக்காக பாடுபடும் இளைய தலை முறையினரிடம் ஊக்கம், உற்சாகத்தை ஏற்படுத்த முடியும்.

தமிழக அரசு கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியது. அதுபோல் எதிர்க்கட்சிகள், கட்சி பேதங்களை மறந்து முதல் முறையாக தமிழக அரசுக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளன. அவர்களுக்கும் என் பாராட்டு தல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசு கஜா புயல் விவகாரத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எத்தகைய வேகத்துடன் மேற்கொண்டதோ, அதேபோல் நிவாரண உதவி வழங்குவதிலும் வேகமாக செயல்பட வேண்டும்.


நரேந்திர மோடி பிரதமராக உள்ளார் என்பதையும் மறந்து ராகுல் காந்தி தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார். காந்தி, காமராஜர் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி இன்றைக்கு இல்லை. நெருக்கடி நிலையின்போது அது கலைக்கப்பட்டு விட்டது.

தற்போதுள்ளது இந்திரா காங்கிரஸ் கட்சி. அதில் இருக்கும் ‘ஐ’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அகங்காரம் என்று பொருள்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், கம்யூனிஸ்டு கட்சியின் பிரதிநிதியாக செயல்படக்கூடாது. சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்தியே தீருவேன் என்ற பிடிவாதத்துடன் செயல்பட்டு வருகிறார். இதனால் மக்கள் கொதித்துப் போய் உள்ளனர்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வி‌ஷயத்தில் தேவசம் போர்டு, சுப்ரீம் கோர்ட்டில் காலஅவகாசம் கோரியிருப்பது ஆறுதல் தருகிறது. சுப்ரீம் கோர்ட்டு இனிமேலாவது இந்து மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். இதற்கு அய்யப்பன் அவர்களுக்கு நல்ல புத்திய தர வேண்டும்.

தமிழகத்தில் 20 தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட பா.ஜனதா தயாராக உள்ளது. இதற்காக ஆங்காங்கே பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எங்களைப் பொறுத்தவரை யார் வேட்பாளர், எந்த கூட்டணி என்பது முக்கியமல்ல.

பிரதமர் மோடி 4½ ஆண்டு காலம் ஊழலற்ற ஆட்சி தந்துள்ளார். அடுத்த தேர்தலை கருத்தில் கொள்ளாமல் அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை மோடி நிறைவேற்றி விட்டார். இன்னும் ஒரு சில நிலுவையில் உள்ளன. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதனை நிறைவேற்றுவோம். 2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #pmmodi #ilaganesan

Tags:    

Similar News