செய்திகள்
கோப்புப்படம்

ஆட்சியில் இருந்த போது ஊழல் குற்றச்சாட்டில் தி.மு.க.வினர் பதவி விலகினார்களா?- தமிழிசை கேள்வி

Published On 2018-10-13 11:23 GMT   |   Update On 2018-10-13 11:23 GMT
தி.மு.க. போன்ற கட்சிகள் மத்திய அரசுடன் இணைந்து ஆட்சியில் இருக்கும் போது ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகினார்களா? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார். #BJP #Tamilisaisoundararajan
கோவை:

கோவை விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை மேல் முறையீடு செய்ய உள்ளதாக அவர்கள் கூறி உள்ளனர். ஆகவே அவர்கள் சட்ட ரீதியாக எப்படி அணுகுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

யார் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும், அது விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் குற்றச்சாட்டு வந்ததினால் பதவி விலக வேண்டும் என்று சிலர் சொல்வது தவறு.

தி.மு.க. போன்ற கட்சிகள் மத்திய அரசுடன் இணைந்து ஆட்சியில் இருக்கும் போது ஊழல் குற்றச்சாட்டு வந்தது. அப்போது அவர்கள் பதவி விலகினார்களா? இல்லை.

எனவே ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் எந்த விதத்திலும் ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. அது நிச்சயமாக விசாரிக்கப்பட வேண்டும். சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். துணை வேந்தர்கள் நியமனத்தில் எழுந்துள்ள ஊழல்கள் குறித்து கவர்னர் மறுக்கவில்லை. அவர் பல கல்வியாளர்களை சந்திக்கும் போது தான் எனக்கு இப்படிப்பட்ட தகவல்கள் கிடைத்தது என்று தான் கூறினார்.

ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை சம்பந்தமாக சட்ட விதிகளுக்கு உட்பட்டு கவர்னர் நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் சேலத்தில் இன்று நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டு சென்றார். #BJP #Tamilisaisoundararajan
Tags:    

Similar News