உலக இதய தினம்... இதய நோய்களை தவிர்க்கும் வழிமுறைகள்
- அதிகமான உடல் எடை காரணமாக இதயம் பாதிக்கப்படாமல் இருக்க உணவு மீதான அக்கறை அவசியம்.
- இதயத்தின் செயல்திறனை சீராக்கி, அதில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
உலக இதய தினத்தை நாம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ந்தேதி கொண்டாடுகிறோம்.
இதயம் மனித உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும், அதன் செயலிழப்பு மரணத்திற்கு வழிவகுக்கும், எனவே அனைவரும் இதய ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம்.
இதயநோய் வராமலும், வந்து சிகிச்சை பெறுபவர்களும் இதய நலனை பாதுகாக்க சில வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்வது நல்லது. அதன்மூலம் வாழ்நாளை நீட்டிக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.
அந்த வகையில்,
• சீரான உடல் எடை பராமரிப்பு
• முறையான உணவுப் பழக்கம்
• அன்றாட உடற்பயிற்சிகள்
• மதுப்பழக்கம் தவிர்த்தல்
• புகைப் பழக்கம் தவிர்த்தல்
• மன அழுத்தமில்லா வாழ்க்கை
ஆகியவற்றை அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
இன்றைய சூழலில் அவரவர் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை பராமரிக்க முடியாமல் போகும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஒரு காரணமாக அமைகிறது. உடலின் சீரான எடையை பராமரிப்பதற்கு தினசரி உடற்பயிற்சி, முறையான உணவுப் பழக்கம் ஆகியவை அவசியம்.
மருத்துவ ரீதியாக உடல் எடை அதிகரிப்பதற்கு பல்வேறு ஹார்மோன்கள் காரணமாக உள்ளன. அவற்றுக்கெல்லாம் முறையான மருத்துவ சிகிச்சைகள் செய்துகொண்டால் உடல் எடையை தவிர்க்க முடியும். ஒருவருடைய உயரத்திற்கேற்ப இருக்க வேண்டிய உடல் எடையைவிட 10 சதவீதம் அதிகமாக இருந்தால், உடல் எடை அதிகம் என்றும், 20 சதவீதம் அதிகமாக இருந்தால் உடற்பருமன் என்றும் குறிப்பிடப்படுகிறது.
அதிகமான உடல் எடை காரணமாக இதயம் பாதிக்கப்படாமல் இருக்க உணவு மீதான அக்கறை அவசியம். அதிகக் கலோரி நிறைந்த உணவு, அதிக உப்பு, சர்க்கரை முதலியன இதய இரத்த நாள நோய்களைத் தூண்டக் கூடியவை. அவ்வகையில், இறைச்சி, வெண்ணெய், பாலாடை, தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய், வனஸ்பதி போன்ற தாவர எண்ணெய் வகைகளில் கொலஸ்ட்ரால் மிகுந்துள்ளது. அது, ரத்த நாளங்களில் படிந்து மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுத்தும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.
அதிகமாக இனிப்பு சாப்பிடுவது இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து தடித்து விட வழிவகுக்கிறது. அதே போல, அதிக உப்பு சேர்த்துக் கொள்வதும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படச் செய்கிறது. அதனால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் உருவாகின்றன. அன்றாடம் மனித உடலுக்கு 5 கிராம் உப்பே போதுமானது. ஆனால், நம் நாட்டில் ஒவ்வொருவரும் தினமும் 12 முதல் 15 கிராம் அளவு வரை உப்பை உணவு மூலம் பெறுகின்றனர்.
பாஸ்ட் புட் கலாச்சாரமும் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அந்த உணவு வகைகளில் அதிகப்படியான கொழுப்பும், உப்பும் இருப்பதால் தான் உடலுக்கு தேவையான கலோரி மிக அதிகமாக கிடைத்து இதய நோய்களை உருவாக்குகிறது. மேலும் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால் பாஸ்ட் புட் வகைகளில் நார்ச்சத்து பெரிதாக இருப்பதில்லை. அதுவும் ஜீரண கோளாறுகளை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாகும்.
வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை உட்கொள்வது ரத்தத்தில் கொலஸ்ட்ரால், கொழுப்பு அளவு அதிகரிக்காமலும், இரத்தம் உறைந்து விடாமலும் பாதுகாக்கிறது. எனவே, தினமும் அவற்றை உணவில் காய்கறிகளோடு சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயமும், வெள்ளைப் பூண்டும் இதய சம்பந்தமான பாதிப்புகளை தடுக்கும் திறன் பெற்றவை என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், அவை இதயத்தின் இயக்கத்துக்கு நன்மை ஏற்படுத்துவது உண்மை.
இதயத்தின் செயல்திறனை சீராக்கி, அதில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். மேலும், வாரத்தில் 5 நாட்கள் என ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் ஏரோபிக் வகை பயிற்சிகளான நடத்தல், ஓடுதல், படியேறுதல் உள்ளிட்ட இதர உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம். அதன் மூலம், உடலில் உள்ள நல்ல கொழுப்பான எச்.டி.எல் அளவை இரண்டு மாதங்களுக்குள் 5 சதவீதம் வரை உயர்த்த முடியும் என மருத்துவ தெரிவித்துள்ளார்கள்.
ஒவ்வொரு முறையும் உடல் எடையில் 2.5 கிலோ குறையும்போது நல்ல கொலஸ்டிராலின் அளவு உயர்கிறது. நல்ல கொலஸ்ட்ரால் உள்ள உணவை உட்கொள்வதும் மேற்கூறிய அளவு உடல் எடை குறைவதற்கு உதவும். அத்துடன், புகைப்பிடிப்பதை தவிர்ப்பதன் மூமாகவும், நல்ல கொலஸ்ட்ரால் அளவை கூட்ட முடியும். ஏனென்றால், புகைக்கும் போது உடலில் சேரும் ரசாயனம் நல்ல கொழுப்பின் அளவை குறைக்கிறது. புகைப்பழக்கத்தை தவிர்ப்பதாலும் எச்.டி.எல் அளவு சுமார் 10 சதவீதம் அதிகமாகும்.