சீனிவாசமங்காபுரம் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
- 8-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
- கருட வாகன வீதிஉலா மார்ச் 4-ந்தேதி நடக்கிறது.
திருமலை:
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி நேற்று அதிகாலை மூலவரை துயிலெழுப்பி சுப்ரபாதம், கொலு, பஞ்சாங்க சிரவணம், மாலை அங்குரார்ப்பணம் நடந்தது.
மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை புண்யாஹவச்சனம், மிருதங்கரஹணம், சேனாதிபதி உற்சவம் நடந்ததும், சிறப்புப்பூஜைகள் செய்து புற்று மண் எடுத்து வந்து முளைப்பாரிக்காக விதைகள் விதைப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிகளில் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, உதவி அதிகாரி கோபிநாத், கண்காணிப்பாளர் செங்கல்ராயுலு, கோவில் ஆய்வாளர் கிரண்குமார் ரெட்டி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 8.40 மணியில் இருந்து 9 மணிக்குள் மீன லக்னத்தில் பாரம்பரிய முறைப்படி பிரம்மோற்சவ விழா `கருட' கொடியேற்றம் நடக்கிறது.
முன்னதாக இன்று காலை 6.30 மணியில் இருந்து 8.30 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை ஊஞ்சல் சேவை, இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடக்கிறது. வாகன சேவைகள் தினமும் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரையிலும், மீண்டும் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் நடக்கிறது.
வாகனங்களில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பிரம்மோற்சவ விழாவின் `சிகர' நிகழ்ச்சியாக கருடவாகன வீதிஉலா (கருட சேவை) மார்ச் 4-ந்தேதி நடக்கிறது.
விழாவையொட்டி கோவில் வளாகம், நான்கு மாடவீதிகள் முழுவதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்காக கோவில் புஷ்கரணி சுத்தம் செய்து தூய புனிதநீர் நிரப்பப்பட்டுள்ளது.