தை கிருத்திகை - திருப்போரூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
- சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- கிருத்திகை மற்றும் செவ்வாய்க்கிழமை ஒருசேர வந்ததால் கோவில் வளாகத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
திருப்போரூர்:
தை கிருத்திகை விழாவையொட்டி இன்று திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து மாட வீதியில் வலம் வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
மேலும் முடிக்காணிக்கை செய்த பக்தர்கள் சரவணப் பொய்கையில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கிருத்திகை மற்றும் செவ்வாய்க்கிழமை ஒருசேர வந்ததால் கோவில் வளாகத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கோவில் வளாகம் முழுவதும் கடும் நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் உற்சவர் சன்னதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டு சென்றனர்.
முன்னதாக நேற்று இரவு திருப்போரூர் முருகன் கோவிலுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு வந்தார். அவர் கோவில் அருகில் வடக்கு மாடவீதியில் உள்ள மண்டபத்தில் தங்கியிருந்து இன்று அதிகாலை முருகப் பெருமானை அர்ச்சனை செய்து வழிபட்டார்.
தை கிருத்திகையையொட்டி கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் திருத்தணி முருகன்கோவிலிலும் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.