search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகை எக்ஸ்பிரஸ்"

    • அச்சமடைந்த பயணிகள் சம்பவம் குறித்து ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • சுமார் 10 நிமிட காலதாமதமாக ரெயில் புறப்பட்டுச்சென்றது.

    செங்கல்பட்டு:

    சென்னை எழும்பூரில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டு சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட கரும்புகையால் பரபரப்பு ஏற்பட்டது.

    தாம்பரம் அடுத்த செங்கல்பட்டை நோக்கி சென்று கொண்டிருந்த ரெயிலில் டி1 பெட்டியில் பயணித்த பயணி ஒருவர் சார்ஜ் போட்டபோது கரும்புகை வெளியேறியது.

    இதனால் அச்சமடைந்த பயணிகள் சம்பவம் குறித்து ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து ரெயில் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு கரும்புகையானது அணைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 10 நிமிட காலதாமதமாக ரெயில் புறப்பட்டுச்சென்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவை-மயிலாடுதுறை ஜன் சதாப்தி விரைவு ரெயில் இரு மார்க்கவும், வருகிற 30, 31-ந் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
    • மாதா வைஷ்ணவி தேவி காட்ரா-திருநெல்வேலி விரைவு ரெயில் நாளை முதல் வருகிற 30-ந்தேதி வரை கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.

    திண்டுக்கல்:

    தென்னக ரெயில்வே சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்ட் 1-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை 7.10 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. கோவை-மயிலாடுதுறை ஜன் சதாப்தி விரைவு ரெயில் இரு மார்க்கவும், வருகிற 30, 31-ந் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. திருச்சியில் இருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, திண்டுக்கல்லுக்கு இயக்கப்படும் பல்வேறு ரெயில்கள் இன்று முதல் வருகிற 1-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

    நாகர்கோவில்-மும்பை விரைவு ரெயில் ஆகஸ்ட் 30-ந்தேதி திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும். ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி காட்ரா-திருநெல்வேலி விரைவு ரெயில் நாளை முதல் வருகிற 30-ந்தேதி வரை கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.

    சென்னை எழும்பூர்-குருவாயூர் விரைவு ரெயில் வருகிற 30-ந்தேதி பெரம்பூர், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல் வழியாகவும், ஆகஸ்ட் 1-ந்தேதி விருத்தாச்சலம், சேலம், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இன்று 45-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • அலங்கரிக்கப்பட்டு வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பயணிகள் சூடம் ஏற்றி ஆரத்தி எடுத்தனர். பின்னர் கேக் வெட்டி பயணிகள் அனைவருக்கும் வழங்கினர்.

    திண்டுக்கல்:

    1977-ம் ஆண்டு மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரெயிலாக தொடங்கப்பட்டது வைகை எக்ஸ்பிரஸ். ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று தொடங்கப்பட்ட இந்த ரெயில் சேவை இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.

    பெரும்பாலும் இரவு நேர ரெயில்களே சென்னைக்கு உள்ள நிலையில் பகல் நேரத்தில் அதிக வேகத்தில் செல்லும் எக்ஸ்பிரஸ் என்பதால் வைகை ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

    காலை 7.10 மணிக்கு மதுரையில் புறப்படும் இந்த ரெயில் மதியம் 2.30 மணிக்கு சென்னையை சென்றடையும். சென்னையில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மதுரையை சென்றடையும்.

    குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் ரெயில் பயணம் செய்பவர்களுக்கு வைகை எக்ஸ்பிரஸ் மிகச்சிறந்த வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இரவு நேரங்களில் ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால் அதனை சமாளிப்பது கஷ்டம் என்பதால் பகல் நேர ரெயிலான வைகை எக்ஸ்பிரசில் பெரும்பாலானோர் பயணம் மேற்கொள்வது இருந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று 45-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அலங்கரிக்கப்பட்டு வந்த ரெயிலுக்கு பயணிகள் சூடம் ஏற்றி ஆரத்தி எடுத்தனர். பின்னர் கேக் வெட்டி பயணிகள் அனைவருக்கும் வழங்கினர். இந்த சேவை மேலும் பல ஆண்டுகள் தொடர வேண்டும் எனவும் ரெயில்வே பயணிகள் விருப்பம் தெரிவித்தனர்.

    ×