search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக்தி கிடைக்கும்"

    • கலியுகத்தில் கல்மலையாகவும் தோன்றி அருளாட்சி புரிந்து வருகிறார்.
    • நினைக்க முக்தி தரும் தெய்வீக திருத்தலம் திருவண்ணாமலை ஆகும்.

    நினைக்க முக்தி தரும் தெய்வீக திருத்தலம் திருவண்ணாமலை ஆகும். சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலாயத்திற்கு நிகரான பேறு பெற்ற ஆலயம் திருவண்ணா மலை. முக்தி தலங்கள் ஐந்தினுள் அண்ணாமலை அப்பனே என அவரவர் இருந்த இடத்தில் இருந்தவாரே மனமுருகி நினைத்தவுடனே முக்தி அளிக்க வல்ல சிறப்புக்குரியது.

    மகா சிவராத்திரி தோன்றிட காரணமாக திகழ்ந்ததும், தமது உடலில் பாதியை அன்னை பார்வதி தேவிக்கு அருளி உமையொரு பாகனாக காட்சியளித்த பெருமைக்குரியதும் இத்திருத்தலமே. முக்திபுரி, சிவலோகம், தலேச்சுரம், சுத்த நகரம், கவுரி நகரம், சோணாச்சலம், சோணாத்திரி, அருணாத்திரி, அருணாசலம், அக்னிகிரி, திருவருணை, திருவண்ணாமலை இப்படி பல திருநாமங்களை தாங்கி நிற்கும் தவபூமி.

    இப்புண்ணிய சேத்திரத்தின் புராதன புனித பெயர் அண்ணா. இந்நகரை சுற்றியிருந்த பகுதிகளை சேர்த்து அக்காலத்தில் இதனை அண்ணாநாடு என மக்கள் அழைத்து வந்தனர். இதன் காரணமாகவே இங்குள்ள மலையும் அண்ணாமலை என்றும், இறையனார் வீற்றிருந்து அருள் பாலிக்கும் அருளாட்சி பூமி என்பதால் திருவண்ணாமலை எனவும் வழங்கப்படுகிறது.

    கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், இக்கலியுகத்தில் கல்மலையாகவும் தோன்றி அருளாட்சி புரிந்து வருகிறார்.

    • எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான்.
    • அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூதத் தலங்களுள் அக்னி தலமாகும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூதத் தலங்களுள் அக்னி தலமாகும். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான்.

    பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத்தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால் உலகப் புகழ்பெற்ற தலம்.

    ஐந்து முகமாக காட்சி அளிக்கும் திருவண்ணாமலை மலையை சுற்றி வரும்போது முதலில் ஓர் முகமாக காட்சியளித்து இறைவன் ஒருவனே என்ற தத்துவத்தையும், அடுத்து இரண்டு முகமாக (அர்த்தநாரீஸ்வரராக) ஆண், பெண் சமமே என்ற தத் துவத்தையும் விளக்குகிறது. சூல முகமாக (மூன்று முகம்) காட்சி தந்து மும்மூர்த்தியாக விளங்கி படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. சதுர்முக (நான்கு முகம்) மலையாக காட்சியளித்து வேதங்கள் நான்கு என்பதை விளக்குகிறது. பஞ்ச முகமாக தரிசனம் தந்து பஞ்ச பூதங்கள் கொண்ட மலை என்பதை உணர்த்தும் வகையில் அமைந் துள்ளது திருவண்ணமலை.

    பிரச்சினைகள் நீங்கும்

    மலையின் மையப்பகுதியில் கந்தாஸ்ரமம், விருபாட்சி குகை, குகை நமச்சிவாயர் ஆலயம், மாமரத்துக்குகை, சடைச்சாமி குகை, அருட்பால் குகை, ஆலமரத்துக் குகை, ரமண மகரிஷி குகை என பல்வேறு குகைகள் இருக்கின்றன.

    அண்ணாமலையார் லிங்க வடிவில் இருப்பதாலும், சித்தர்கள் சூட்சும வடிவில் இங்கே உலா வருவதாலும், மலையை கிரிவலம் வரும் பக்தர்களின் பிரச்சினைகளும், நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். மலையை சுற்றி அமைந்திருக்கும் 14 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிரிவலப்பாதையை ஒவ்வொரு பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவது சிறப்பு வாய்ந்தது.

    நோய் தீர்க்கும் தீர்த்தங்கள்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் மலைப் பகுதியில் சக்கர தீர்த்தம், அக்னி தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், பாலி தீர்த்தம், சிம்மத் தீர்த்தம், எம தீர்த்தம், சோண நதி, உண்ணாமுலை தீர்த்தம், வருண தீர்த்தம், கட்க தீர்த்தம், பாத தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்கள் காணப்படுகின்றன. அதனால் தீர்த்தங்கள் நிறைந்த ஆலயமாக இது திகழ்கிறது.

    இவற்றுள் சிவகங்கை தீர்த்தமும், பிரம்ம தீர்த்தமுமே பிரதான தீர்த்தங்களாக இருக்கின்றன. துர்க்கையம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கட்க தீர்த்தம், அன்னை பார்வதி உருவாக்கி வணங்கிய தீர்த்தமாக போற்றப்படுகிறது. அனைத்து தீர்த்தங்களுமே நோய் தீர்க்கும் தீர்த்தங்களாகவே இருப்பது சிறப்பு.

    • ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் கார்த்திகை நீராடுவது சிறப்பு.
    • கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடியவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும்

    தட்சன் தன் மகள் தாட்சாயணியைச் சிவனுக்கு திருமணம் முடித்துக் கொடுக்க மறுத்த நிலையில் சிவன்-தாட்சாயணி திருமணம் நடந்தது. இதனால் கோபம் கொண்ட தட்சன் சிவனை அழைக்காமல் வேள்விக்கு ஏற்பாடு செய்தான். அவன் சிவனுக்கு கொடுக்க வேண்டிய பிரசாதத்தையும் தரவில்லை. ஆனால் பிரம்மா சிவனின் பிரசாதத்தை நந்திக்கு கொடுத்து விட்டார். இதை அறிந்து கோபம் கொண்ட தட்சன் மேரு மலையின் வடக்கே புதிய யாகம் ஒன்றைத் தொடங்கினான். சிவனைத் தவிர மற்ற அனைத்துத் தேவர்களும், ரிஷிகளும் கலந்துக்கொண்டனர்.

    சிவனுக்கு அவிர்பாகம் அளிக்காமல் யாகம் நடத்துவது தவறு என்று தந்தைக்குச் சுட்டிக்காட்ட தாட்சாயணி முடிவு செய்தாள். சிவன் தடுத்தும் சென்ற தாட்சாயணியை தட்சன் அவமதித்தான். கோபம் கொண்ட தாட்சாயணி தட்சனின் யாகத்திற்கு வந்த தேவர்கள், முனிவர்கள் மற்றும் தட்சனும் விரைவில் அழிந்து போகச் சாபம் கொடுத்து யாகத் தீயில் விழுந்து மாண்டாள். அப்போது ஆங்காரத்துடன், ஆங்கார சக்தி வெளிப்பட்டது. தாட்சாயணி உயிர் துறந்ததை அறிந்த சிவன் கடும் கோபம் கொண்டு பெரும் பலம் கொண்ட வீரபத்திரனை அனுப்பி யாகத்தை அழிக்க சொன்னார்.

    வீரபத்திரனும் தன் கணங்கள் சூழ யாகசாலை அடைந்து அனைத்தையும் அழித்தார். அனைவரையும் அடித்து நொறுக்கி இல்லாமல் செய்தார். இந்திரன், சந்திரன், விஷ்ணு, எமன், அக்னி, வாயு, குபேரன், வருணன் என்று அனைவரையும் வதம் செய்தார். சூரியனின் கன்னத்தில் அறைய சூரியனின் பற்களெல்லாம் கீழே கொட்டின. இறுதியில் மகா விஷ்ணுவின் வேண்டுதல் பேரில் கோபம் குறைந்தார் வீரபத்திரர். அப்போது அங்கு தோன்றிய சிவன், தவறு செய்தவர்களை மன்னித்து உயிர் பிச்சை கொடுத்தார்.

    பற்கள் இழந்த சூரியனின் பாவம் தீர ஸ்ரீ வாஞ்சியத்தில் நீராடி, கார்த்திகை மாதம் முழுவதும் வழிபட்டால் பலன் கிடைக்கும். சிவத்துரோகத்தால் வந்த பாவம் போகும் என்று சிவன் வழி சொன்னார். அவ்வாறே ஸ்ரீவாஞ்சியம் சென்று முனி தீர்த்தம் என்ற குப்த கங்கையில் நீராடி கார்த்திகை மாதம் முழுவதும் தவம் செய்து இறைவனை சூரியன் வணங்கினார். இதனால் மகிழ்ந்த சிவன் அவர் முன் தோன்றி, பாவம் நீக்கி, பழைய ஒளியைத் தந்தார். அத்தோடு கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடியவர்களின் பஞ்சமாபாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் அருள்புரிந்தார். அன்று முதல் ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் கார்த்திகை நீராடுவது சிறப்பாக கருதப்படுகிறது.

    குறிப்பாக கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி அதிக பலன் பெற முடியும் என்று கூறப்படுகிறது. கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி பலன் பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

    கார்த்திகை முதல் ஞாயிறு:

    ஐந்தக்னிபுரன் என்ற ஊரில் பாரிபத்ரன் என்பவ ரின் மகன் விஸ்வபத்திரன் செல்லமாக வளர்க்கப்பட்ட பிள்ளை காரணத்தால் மிகவும் கெட்டவனாக வளர்ந்தான். பெண்கள் மீது மிகுந்த ஆசை கொண்டான். அவனை அவனது தந்தை கண்டித்தார். இதனால் கோபம் அடைந்த அவன் தந்தையை கொன்றான். பிரம்ம கத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு வருந்திய அவன் குப்த கங்கையில் நீராடி தோஷம் நீங்கப் பெற்றான்.

    கார்த்திகை இரண்டாம் ஞாயிறு:

    கங்கைக் கரையில் மிருத்யுஞ்சய நகரில் வசித்த பாஷ்களன் என்பவருக்கும் அவரது மனைவி போகநாதாவுக்கும் ஐந்து மகன்கள் பிறந்தனர். துயுமணி, மணி, சின்மணி, மாயா நரசமணி, தரணி ஆகிய ஐவரில் மூத்தவன் துயுமணி ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினான். ஒழுக்கத்தில் சிறந்த இவன் தலயாத்திரை செய்கையில் ஒரு நாள் காய்ச்சல் வந்து அவஸ்தைப்பட்டான். ஒரு வீட்டில் நீர் கேட்க தாதி பெண் கள்ளை கொடுத்துவிட அதை தெரியாமல் குடித்தார். சுரம் தீர்ந்தாலும் கள் குடித்ததை அறிந்து என்ன இழிசெயல் புரிந்தோம் என மனம் வருத்தி உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தான். அப்போது சிவன் தோன்றி கார்த்திகை மாதம் 2-ம் ஞாயிறன்று ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள முனி தீர்த்தத்தில் நீராடி பாவம் ேபாக்கிக் கொள் என்றார். அதன்படி நீராடி பாவம் போக்கினார்.

    கார்த்திகை 3-ம் ஞாயிறு:

    வங்க தேசத்தில் மாகதம் எனும் கிராமத்தில் வசித்து வந்த சிறந்த அந்தணன் ககோளன். இவன் மழை பெய்து இடிந்து கிடந்த ஒரு வீட்டு சுவற்றில் புதையல் ஒன்று இருப்பதை கண்டு அதனை எடுத்து தானதர்மங்கள் செய்தார். அப்போது அங்கே வந்த துருவாச முனிவரை விருந்துக்கு அழைக்க நீ திருடிப்பெற்ற பொருளில் உணவு உண்ண மாட்டேன் என்றார். இதனால் அந்தணன் துன்பம் தாங்காமல் உயிர்விட துணிந்தான். தேவர்களை துதிக்க ஆகாய வானவர் அசரீரி யாக ஸ்ரீவாஞ்சிய புண்ணிய புஸ்கரணியில் கார்த்திகை 3-ம் ஞாயிறு நீராடு என்றார். அதன்படி அங்கு நீராடி பாவம் போக்கினார்.

    கார்த்திகை 4-ம் ஞாயிறு:

    வங்க தேசத்தில் சந்திரிகை என்னும் நகரத்தில் யக்ஞபக்தன் குமுதவதி ஆகியோருக்கு பிறந்தவன் துர்போதன். அவன் பிறந்ததும் தந்தை இறந்துவிட்டான். பின்னர் பஞ்சம் ஏற்பட்டு பிரத்யாகை சென்றார். அங்கு காம மயக்கத்தில் குருவின் மனைவியிடம் தவறாக நடந்து கொண்டான். தெளிந்தபின் மனம் வருத்தி அவிமுக்தம் என்ற திருத்தலம் சென்று மணிகர்ணிகை என்னும் தீர்த்தத்தில் நீராடி மூன்று வருடம் விஸ்வேஸ்ரரை துதிக்க மனம் மகிழ்ந்த சிவன் பிரசன்னமாகி ஸ்ரீவாஞ்சிய பெருமையையும் கூறி அங்கு நீராடு உன் பாவம் நீங்கும் என்றார். அவனும் ஸ்ரீவாஞ்சியம் வந்து குப்த கங்கையில் நீராடி தன் பாவம் நீங்கப் பெற்று சிவபாதம் அடைந்தான்.

    கார்த்திகை 5-ம் ஞாயிறு:

    நர்மதைக்கரையில் ஸ்தபகம் என்ற ஊரில் வசித்தவர் காலஜித். இவன் மூவுலகம் சென்று வரும் ஆற்றல் கொண்டவன். தூய வாழ்க்கை வாழ்ந்த இவனுக்கு குழந்தைகள் நான்கு பேர். பிள்ளை களிடத்து பற்று கொண்ட காலஜித் அவர்கள் தீயவழி செல்வதனை கண்டிக்காமல் விட அதனால் சம்சார்க்கம் என்னும் பாவம் அவனை சேர்ந்தது. அதனால் அவன் தவ வலிமை குன்றி மூவுலகு செல்லும் ஆற்றல் நீங்கியது. அப்போது அசரீரி உரைத்தபடி வசிட்டரை வணங்கி குருவருள் பெற்று இங்கு வந்து கார்த்திகை 5-ம் ஞாயிறு நீராடி இறைவனை வணங்கிப் பாவத்திலிருந்து விடுபட்டு பல காலம் இங்கே தங்கி அநேக இன்பங்கள் அனுபவித்து பின் முக்தியடைந்தான்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகிலேயே புண்ணியத்தை அதிகம் வழங்கும் இடம் காசி.
    • ஸ்ரீவாஞ்சியம் வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்குகிறது.

    இந்துவாகப் பிறந்தவர்கள் மட்டுமல்லாது, எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் எந்த உயிரினமாக இருந்தாலும் காசிக்கு சென்று விஸ்வநாதரை தரிசனம் செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். காசியில் இறந்தால் அடுத்த பிறவி என்பது இல்லாமல் முக்தி கிடைத்து இறைவனுடன் ஐக்கியமாகி விடுவார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் தான் காசிக்கு சென்று விஸ்வநாதரை தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதிலும் இருந்து பயணிகள் வந்து செல்கின்றனர்.

    தமிழகத்தில் இருந்து `காசி' மிக நீண்ட தொலைதூரத்தில் இருப்பதால், மிகுந்த பொருட்செலவு செய்து பெரும்பாலானவர்கள் செல்வது இல்லை. மேலும் கால விரயம் ஆவதால் காசிக்கு எல்லோராலும் செல்ல முடிவதில்லை. இந்தநிலையில் காசிக்கு சென்ற புண்ணியத்தை அதிலும் 100 முறை காசிக்கு சென்ற பலனை தமிழகத்தில் உள்ள ஒரு தலத்திற்கு சென்றால் பெறலாம் என்று பல்வேறு முனிவர்கள் கூறியுள்ளனர். சிறப்புக்குரிய அந்த தலம் ஸ்ரீ வாஞ்சியம் தலமாகும்.

    உலகிலேயே புண்ணியத்தை அதிகம் வழங்கும் இடமாக `காசி' தலம் கருதப்படுகிறது. அத்தகைய மகத்துவம் வாய்ந்த 'காசி' திருத்தலத்திற்கு 100 முறை சென்று வந்த பலனை தமிழகத்தில் கும்பகோணத்திற்கு அருகே உள்ள "ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி" கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தால் கிடைக்கும் என்று பிரமாண்ட புராணம் கூறுகிறது.

    தல வரலாறு

    உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் அதன் இறுதி காலத்தில் பறிக்கும் போது தனக்கு அவப்பெயர் ஏற்படுவதாக எமதர்மராஜா மிகவும் வருந்தினார். அதனால் `திருவாரூர் தியாகராஜரிடம்' சென்று தனது குறையை தெரிவித்தார். அதற்கு இறைவனும், ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரியாக கூறினார்.

    அதன்படி எமதர்மன் `ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி" கோவிலுக்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். எமதர்மனின் தவத்தில் மகிழ்ந்த இறைவன் மாசி மாதம், பரணி நட்சத்திரத்தில் காட்சியளித்து எமதர்மனுக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.

    எமதர்மனும் இறைவா அனைத்து உயிர்களையும் பறிக்கும் பதவியால் எல்லோரும் என்னை கண்டு பயந்து திட்டுகின்றனர். உயிர்களை பறிப்பதால் "பிரம்மஹத்தி தோஷம்" பிடித்து என்னை வாட்டுகிறது. எனவே அதிலிருந்து நீங்கும் வரம் வேண்டும் என்றார்.

    எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன் எமதர்மா இனிமேல் யாரும் எமன் உயிரை பறித்து விட்டான் என கூற மாட்டார்கள். நோய் வந்ததால், வயதாகி விட்டதால், விபத்து ஏற்பட்டு இறந்தான் என்றே கூறுவார்கள். அதனால் உனக்கு எந்த பழியும் பாவமும் ஏற்படாது.

    மேலும் நீ தவம் செய்த இந்த இடத்திற்கு புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்க வேண்டும். இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தலத்தின் ஷேத்திர பாலகனாக நீ விளங்குவாய்.

    இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்பு என்னை தரிசிப்பார்கள் என்று கூறினார். அதன்படி இங்கு எமதர்மராஜனுக்கு முதல் வழிபாடு நடைபெறுகிறது.

    யோக நிலையில் எமதர்மன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்குகிறது. காசியில் இறப்பதால் எம பயமில்லாது போனாலும் ஒரு நாழிகையாவது பைரவரின் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

    ஆனால் ஸ்ரீவாஞ்சியத்தில் இறந்தவருக்கு எமபயம், பைரவ தண்டனை எதுவுமே கிடையாது. இங்கு பைரவரும் யோக நிலையில் இறைவனை வணங்கி கொண்டு இருக்கிறார். எனவே எமதர்மன் பைரவர் இருவருக்குமே அதிகாரம் இல்லாத இத்தலம் காசியை காட்டிலும் 100 மடங்கு உயர்ந்தது என்று முனிவர்கள் கூறுகின்றனர்.

    ஸ்ரீவாஞ்சியத்தின் சிறப்பு குறித்து பிரமாண்ட புராணத்திலும் கூறப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கங்கையில் குளித்து தங்களது பாவத்தை தீர்ப்பதால் கங்காதேவியிடம் பாவம் சேர்ந்து விட்டது. அதனால் தன்னிடம் சேர்ந்த பாவத்தை போக்க வேண்டும் என்று `கங்காதேவி' சிவபெருமானிடம் சென்று முறையிட்டாள். அதற்கு சிவபெருமான் பதில் கூறுகையில் உயிர்களைப் பறிக்கும் எமதர்மனுக்கு பாவம் விமோசனம் அளித்த ஸ்ரீவாஞ்சியதிற்கு சென்று வணங்கினால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும் என்று கூறினார்.

    அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதியுள்ள 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் வந்திருப்பதாக ஐதீகம். அதனால் `குப்த கங்கை தீர்த்தம்' என்று அழைக்கப்பட்ட இங்கு உள்ள தீர்த்தம் தற்போது 'முனி தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.

    எனவே காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது மாசி மகத்தன்று இத்தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது. மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரக்காரர்கள், மேஷம், சிம்மம், கும்பம் ராசி மற்றும் லக்னக்காரர்கள் தங்கள் தோஷங்கள் நீங்குவதற்கு இங்கு வந்து பரிகாரம் செய்து வழிபடலாம். பதவி இழந்தவர்கள், பணி மாற்றம் விரும்புபவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் குப்த கங்கையில் குளித்து வாஞ்சிநாதரை வழிபடுவது சிறந்தது.

    • தொண்டை மானுக்கு ஏழுமலையான் மீது பற்றும், பாசமும் அதிகம்.
    • தினமும் பொன்மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான்.

    ஏழுமலையானுக்கு புரட்டாசி சனிக்கிழமைதான் உகந்த நாள் என்பதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. அந்த கதை வருமாறு:-

    மன்னன் தொண்டை மானுக்கு ஏழுமலையான் மீது பற்றும், பாசமும் அதிகம். எனவே திருவேங்கடவனுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன்மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான். அதன்படியே பூஜையும் செய்து வந்தான். ஒருநாள் பூஜையின்போது பொன்மலர்களுக்கிடையே மண்மலர்களும் வந்து விழுவதைக் கண்டான். திடுக்கிட்ட அவன், அவை மண்மலர்கள்தானா எனக் கூர்ந்து நோக்கினான்.

    அவை மண்மலர்கள்தான் என்பதை மீண்டும் மீண்டும் பூஜையில் வந்து விழுந்த மலர்கள் சந்தேகமே இல்லாமல் நிரூபித்தன. கதவுகள் அனைத்தையும் மூடி விட்டு மன்னன் மீண்டும் பூஜையைத் தொடர்ந்தபோதும் அவ்வாறே நிகழ்ந்தது. மன்னனின் மனம் குழப்பத்துக்கு உள்ளாகியது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான்.

    குருவை என்ற கிராமம் ஒன்றில் பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பிறவியிலேயே அவனுக்கு கால் ஊனம். தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் ஏழுமலையான் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும் அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார்.

    பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள், புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம். பீமய்யாவும், தனது கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன்பின்னர் மண்ணால் ஏழுமலையானின் உருவத்தை வடித்து, மலர்கள் தூவி வழிபட்டு வந்தான். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யன், பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான்.

    இவ்விதம் தொழில் செய்து கொண்டிருக்கும் போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான். அச்சமயங்களில்தான் என்ன செய்கிறோம் என்பதை அறியா நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களி மண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான். காலப்போக்கில் இதுவே அவனது அன்றாட அலுவலாகவும் ஆகி விட்டது. இது இப்படியிருக்க, குழப்பத்திலிருந்த தொண்டைமான் ஒருநாள் அபூர்வக் கனவொன்றைக் கண்டான்.

    அக்கனவில் வேங்கடநாதன் தோன்றி, `தமது பக்தன் பீமய்யன் செய்யும் பூஜையே தமக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும், அந்தப் பூஜையை நீயும் செய்து பார், அப்போது உண்மை விளங்கும்' என்று கூறி மறைந்தார். தொண்டைமானும் திருமால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பீமய்யன் செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனித்தான்.

    தினமும் செய்வது போலவே, பீமய்யன் தான் வடிவமைத்திருந்த வேங்கடவனின் சிலை அருகே அமர்ந்து மண்பாண்டங்களை செய்து கொண்டே, கண்மூடி மண் மலர்களைத் தூவி இறை வனை வழிபடு வதை கண்டான் தொண்டைமன்னன். உடனே பீமய்யனைச் சென்று கட்டித் தழுவிய தொண்டைமான் அவனிடம், `உன் பக்தி உயர்வான பக்தி.

    உனது வழிபாட்டைத் திருமால் ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன்' என்றான். இதற்கிடையில் அந்தப் பரந்தாமன் பீமய்யனின் கனவிலும் தோன்றி, `உன் பக்தி யின் பெருமையை என்று பிறர்கூற அறிகின் றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுந்தத்துக்கு அழைத்துக் கொள்வேன்' எனக் கூறியிருந்தார்.

    அதன்படியே தொண்டைமான், பீமய்யனின் பக்தியை பாராட்டியதைக் கேட்ட மறுகணமே அவனுக்கு முக்தி கிடைத்தது. எனவே புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம். புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு மகத்துவம் இருக்கிறது.

    ×