search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய ரெயில்வே"

    • விபத்தில் பாதிக்கப்பட்டு உள்ள சில ரயில் பயனாளிகள் ரயில்வே மீட்பு குழுவினர் தாமதமாக வந்ததாக தெரிவித்து உள்ளனர்.
    • சென்னை-கல்கத்தா ரயில் மார்க்கம் மிக அதிக அளவு பயன்படுத்தப்படும் மார்க்கமாகும்.

    ராயபுரம்:

    வடசென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்வுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :

    ஒரு இந்தியக் குடிமகனாகவும், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்னும் நிலையிலும் பல உயிர்களை இழந்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்று, துயரமுடன் இருக்கும் இந்த வேளையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் விபத்தினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்த பேரிடரால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்திலும் பங்கேற்கின்றேன்.

    இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தாலும் செய்ய தயாராக உள்ளேன். வழக்கம் போல, இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, மாநில அரசும், விபத்து ஏற்பட்ட பகுதி வாழ் கிராமங்களும் ஓடோடி வந்து முதலில் உதவிகரங்கள் நீட்டி உள்ளனர்.

    இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு உள்ள சில ரயில் பயனாளிகள் ரயில்வே மீட்பு குழுவினர் தாமதமாக வந்ததாக தெரிவித்து உள்ளனர்.

    இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, விரைந்து செயல்படுவது எப்படி என்று மீட்புக்குழு வினருக்கு, ரயில்வே துறையின் வழிகாட்டுதல் முறைப்படி, அவர்களுக்கு தக்க பயிற்சிகள் காலமுறைப்படி வழங்கப்பட்டுள்ளதா, என்பதை தாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஒரு வேளை இல்லையெனில், அவர்களுக்கு தக்க பயிற்சிகள் வழங்க ஆணையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை-கல்கத்தா ரயில் மார்க்கம் மிக அதிக அளவு பயன்படுத்தப்படும் மார்க்கமாகும். அதிக மக்கள் பயணம் செய்வதால், இந்த மார்க்கத்தில் உள்கட்டமைப்பை உடனடியாக வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். மேலும் பயனாளிகள், கோரமண்டல் விரைவு ரயிலில் வருவதால், அதிகப்படியான பயனாளிகள் முன்பதிவு செய்வதாலும், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் அதிகமான அளவில் பயனாளிகள் பயணிப்பதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இந்த மார்க்கத்தில் மேலும் சில புதிய ரயில்களை விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய ரெயில்வே வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பேசினர்.
    • தென் மாவட்டங்களில் இருந்து ஹைதராபாத்துக்கு தினசரி நேரடி ரெயில் சேவை இல்லை.

    மதுரை:

    மதுரையில் இன்று தென்னக ரெயில்வே வளர்ச்சி ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில் ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். எம்.பி.க்கள் வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருது நகர்), ரவீந்திரநாத்குமார் (தேனி), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), திருநாவுக்கரசர் (திருச்சி), வேலுச்சாமி (திண்டுக்கல்), சண்முக சுந்தரம் (பொள்ளாச்சி), தனுஷ்குமார் (தென்காசி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய ரெயில்வே வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பேசினர். இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. பேசியதாவது:

    மதுரை கோட்டத்தில் விருதுநகர்-செங்கோட்டை இடையே அகல ரெயில் பாதை மாற்றப்பட்டபோது, கரிவலம் வந்தநல்லூர், சோழபுரம் ஆகிய 2 ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே மேற்கண்ட 2 ரெயில் நிலையங்களையும் திறக்க வேண்டும்.

    தெற்கு ரெயில்வேயின் சென்னை, திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை கோட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு திருவனந்தபுரம் ரெயில்வே தேர்வு வாரியம் ஆட்களைத் தேர்வு செய்கிறது. அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    நெல்லை-சென்னை எழும்பூர் இடையே இரட்டை ரெயில் பாதை பணி முடிந்துவிட்டது. எனவே கோவில்பட்டி மற்றும் திண்டுக்கல் இடையே முக்கியமான வர்த்தக நகரங்களை இணைக்கும் வகையில் 4 ஜோடி ரெயில்களை இயக்க வேண்டும். அதனை சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான் மற்றும் கொடை ரோடு வழியாக இயக்கினால் பயணிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன் அடைவர்.

    நெல்லை-மும்பை இடையே கொங்கன் ரெயில்வே வழியாக வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. அதனை தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்ற வேண்டும். சேரன்மகாதேவி, கல்லிடை க்குறிச்சி, அம்பாசமுத்திரம், கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ஆகிய பகுதிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். எனவே நெல்லையில் இருந்து தென்காசி வழியாக சென்னைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலை அறிமுகப்படுத்த வேண்டும். செங்கோட்டையில் இருந்து பெங்களூருவுக்கு நேரடி ரெயில் இயக்க வேண்டும்.

    சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், சிவகாசியில் நிற்பது இல்லை. அங்கு நிறுத்தம் கொண்டு வர வேண்டும். நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சாத்தூரில் நின்று செல்ல வேண்டும், பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு இரு மார்க்கங்களிலும் திருமங்கலத்தில் நிறுத்தம் கொண்டு வர வேண்டும்.

    சென்னை-ஐதராபாத் இடையே 3 ஜோடி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் தென் மாவட்டங்களில் இருந்து ஹைதராபாத்துக்கு தினசரி நேரடி ரெயில் சேவை இல்லை. எனவே மேற்கண்ட ரயில் சேவையை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து வெங்கடேசன் எம்.பி. பேசுகையில், மும்பை-புனே சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, பயணிகளுக்கு சீசன் டிக்கெட் அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதே போல மதுரை-திருச்சி, மதுரை-நெல்லை ஆகிய பகுதிகளை சிறப்பு மண்டலமாக அறிவித்து, பயணிகளுக்கு சீசன் டிக்கெட் வழங்க வேண்டும். மேட்டுப்பாளையம்-மதுரை வழியாக தூத்துக்குடிக்கு வாரம் 3 நாட்கள் ரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    ×