search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரவி எடுப்பு திருவிழா"

    • வல்லாளபட்டியில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
    • கொட்டும் மழையில் சேம குதிரை, நேர்த்திக்கடன் குதிரைகளுடன் பொதுமக்கள், பக்தர்கள், கிராம இளைஞர்கள், ஊர்வலமாக சென்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வவல்லாளப்பட்டியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் புரவி எடுப்பு விழா நடந்தது. 18 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 10-ந் தேதி திருவிழா தொடங்கியது. 11-ந் தேதி சாமி சிலைகளை தலையில் ஏந்தியபடி ஆற்றுக்காலில் அமைந்துள்ள வட முகத்து கருப்பு கோவிலுக்கு சென்று வழிபட்டனர். 4-வது நாளில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு களரி எடுத்துச் சென்றனர்.

    தொடர்ந்து வல்லாளப்பட்டி நடுவளவு மந்தையிலிருந்து அரிட்டாபட்டியில் உள்ள பெரியகுளத்து கண்மாய் கரையில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலுக்கு பெண்கள் பழைய பாரம்பரிய முறைப்படி பொங்கல் பானையை தலையில் சுமந்து சென்றனர். 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம், மாவிளக்கு எடுத்து நடுவளவு கோவிலில் இருந்து புறப்பட்டு அரிட்டாபட்டிக்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து காமாட்சியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து, சாமியாட்டம் நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் 5-வது நாளில் செகுட்டு அய்யனார் கோவிலுக்கு புரவி எடுப்பு விழா நடைபெற்றது. கொட்டும் மழையில் சேம குதிரை, நேர்த்திக்கடன் குதிரைகளுடன் பொதுமக்கள், பக்தர்கள், கிராம இளைஞர்கள், ஊர்வலமாக சென்றனர்.

    • பெண்கள் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது

    சாயல்குடி சிறை மீட்ட நிறைகுளத்து அய்யனார் வன்னியராய சுவாமி கருப்பணசாமி கோவில் புரவி எடுப்பு பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன் தலைமை தாங்கினார். சாயல்குடி யாதவ மகாசபை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

    நேற்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்த பெண்களும் ஆண்களும் சாயல்குடி ராமநாதபுரம் சாலை வழியாக ஊர்வலமாக குதிரை மற்றும் தவளும் பிள்ளை உள்ளிட்ட களிமண்ணால் செய்யப்பட்ட சுவாமி பொம்மைகளை எடுத்து நகர் வலமாக வந்து அய்யனார் கோவிலை வந்தடைந்தனர். பின்பு வாணவேடிக்கையுடன் பொங்கல் பானை எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்று பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள், சாயல்குடி யாதவ மகா சபை நிர்வாகிகள் மற்றும் சாயல்குடி யாதவ இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

    • மேளதாளங்கள் முழங்க புரவிகள் எடுத்து வரப்பட்டன.
    • பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள்.

    சிங்கம்புணரி அருகே சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட எம்.சூரக்குடி ஊராட்சி கோவில்பட்டியில் செகுட்டு அய்யனார் மற்றும் சூரக்குடியில் அமைந்துள்ள சிறைமீட்ட அய்யனார் மற்றும் படைத்தலைவி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சேவகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்ட விழா முடிந்ததும் புரவி எடுப்பு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு புரவி எடுப்பு விழா நடைபெற்றது. முன்னதாக புரவி தயாரிக்கும் பணி கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி வேளார் வம்சாவளி குயவர்களிடம் பிடி மண் வழங்கப்பட்டது. 40-க்கும் மேற்பட்டோர் விரதம் இருந்து எம்.சூரக்குடி வேளார் வம்சாவளி மண்டபத்திலும் குதிரை பொட்டலிலும் 289 புரவிகள் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    பல்வேறு நேர்த்தி கடனுக்காக 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோவிலுக்கு புரவி செய்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்று கோவிலுக்கு வழங்குவது வழக்கம். குதிரை பொட்டலில் தயாராக இருந்த அரண்மனை புரவிகள் இரண்டுடன் நேர்த்திக் கடனுக்காக சுமார் 289 புரவிகள் நேற்று முன்தினம் குதிரை பொட்டலில் இருந்து எம்.சூரக்குடி மையப்பகுதியான கச்சேரி திடலிற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் நேற்று மாலை சுவாமி அழைத்து புரவிகள் புறப்பட தயாரானது.

    மேளதாளங்கள் முழங்க புரவிகள் எடுத்து வரப்பட்டன. எம்.சூரக்குடிலிருந்து கோவில்பட்டிக்கு சுமார் 5 கிலோமீட்டர் தூரம் இரண்டு மணி நேரத்தில் புரவிகள் கோவில் சென்றடைந்தது. புரவிகள் அனைத்தும் கோவில் அருகில் அடர்ந்த செடி கொடிகளுக்கு மத்தியிலும் கோவிலை சுற்றி வளாக பகுதியிலும் இறக்கி வைத்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். மேலும் நேற்று மாலை கச்சேரி திடல் அருகில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    முன்னதாக புரவி எடுப்பு விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே ரெங்கநாதன் காந்திமதி டிரஸ்ட் மூலம் குடிநீர், நீர் மோர் பந்தல் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் போன்றவற்றை அதன் உரிமையாளர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் தண்ணாயிரம், கவுரவ கண்காணிப்பாளர் ஆனந்த கிருஷ்ணன், பேஸ்கர் கரிகாலன், எம்.சூரக்குடி, கோவில்பட்டி கிராம மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை எம்.சூரக்குடி ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் மற்றும் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் செய்து இருந்தனர்.

    • விழா வருகிற 6-ந் தேதி மற்றும் 7-ந் தேதி நடைபெறவுள்ளது.
    • 6-ந்தேதி புரவி பொட்டலுக்கு முறைப்படி கொண்டு செல்லப்படுகிறது.

    சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குட்பட்ட செகுட்டு அய்யனார், சிறை மீட்ட அய்யனார், படைத்தலைவி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழாவையொட்டி புரவி எடுப்பு விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா வருகிற 6-ந் தேதி மற்றும் 7-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக புரவிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இது குறித்து செகுட்டு அய்யனார் கோவில் கவுரவ கண்காணிப்பாளர் ஆனந்த கிருஷ்ணன் கூறுகையில், புரவி எடுப்பு விழாவிற்காக கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி குயவர்களிடம் புரவிகள் செய்ய பிடி மண் வழங்கப்பட்டது. 30 குயவர்கள் புரவி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 2 அரண்மனை புரவிகள் மற்றும் 280 நேர்த்திக்கடன் புரவிகள் என 282 புரவிகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக 20 புரவிகள் செய்யப்பட்டு வருகிறது.

    செகுட்டு அய்யனார் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் நேர்த்திக்கடன் புரவிகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. தென் தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு எம்.சூரக்குடியில் 282 புரவிகள் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட உள்ளது. மேலும் சுமார் 20 அடி உயரம் கொண்ட அரண்மனை புரவிகளை தூக்குவதற்கான பிரமாண்டமான தூண்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றார். குயவர் மணிகண்டன் கூறுகையில், முறையாக புரவிகள் தயாரிக்கப்படுவதற்காக 30-க்கும் மேற்பட்ட குயவர்கள் விரதம் இருந்து மண் எடுத்து புரவிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தயாரித்து வைக்கப்படும் புரவிகள் கை, கால்கள், தலை போன்றவை தனித்தனியாக தயாரிக்கப்பட்டு ஒட்டப்பட்டு குதிரை பொட்டலில் சூலை வைத்து எரியூட்டி காய வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து குதிரை பொட்டலில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு தலை ஒட்டப்பட்டு வர்ணம் பூசும் பணி தொடர்ந்து நடைபெறும்.

    குதிரைப் பொட்டலில் இருந்து கிராமத்தார்கள் சார்பிலும் நேர்த்திக்கடன் பக்தர்கள் சார்பிலும் 6-ந் தேதி புரவி பொட்டலுக்கு முறைப்படி கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து புரவி பொட்டலில் முறையாக பூஜை செய்யப்பட்டு புரவி பொட்டலில் இருந்து கோவிலுக்கு புரவிகள் கொண்டு செல்லப்படுகிறது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.

    • பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் வானவேடிக்கை களுடன் ஊர்வலமாக மந்தைக்கு எடுத்து வரப்பட்டு கண் திறக்கப்ப ட்டது.
    • சுப்பிரமணிய சாமி மற்றும் 21 சாமிகள் மற்றும் குதிரை, காளை, மதிலை சிலைகள் ஊர்மந்தையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு இருப்பிடம் போய் சேர்ந்தது.

    நத்தம்:

    நத்தம் அருகே ஊராளி பட்டியில் பொன் அய்யனார்,கருப்பசாமி, சிய்யப்பார் சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. இதில் கடந்த 31-ம் தேதி பொங்கல்குடை பொன் அய்யனார் கோவி லுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சியும், மாலையில் பொங்கல் வைத்தலும், பின்னர் இரவு கருப்பசாமி மின் அலங்காரத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடந்தது.

    தொடர்ந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் வானவேடிக்கை களுடன் ஊர்வலமாக மந்தைக்கு எடுத்து வரப்பட்டு கண் திறக்கப்ப ட்டது. பின்னர் சிய்யப்பார் சுவாமிக்கு சிறப்பு அபி ஷேகமும், தீபாராதனை களும் நடந்தது. தொடர்ந்து நேற்று மாலையில் சிய்யப்பார்சாமி உள்ளிட்ட சுப்பிரமணிய சாமி மற்றும் 21 சாமிகள் மற்றும் குதிரை, காளை, மதிலை சிலைகள் ஊர்மந்தையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு இருப்பிடம் போய் சேர்ந்தது.இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவிற்கான ஏற்பாடு களை ஊராளிபட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்த னர். மழைவேண்டி திரு விழா நடத்தப்பட்டதாக நிர்வாகத்தினர் தெரிவித்த னர்.

    • சாமிசிலை, குதிரைகள் கிராமத்தின் பொது மந்தையில் வைக்கப்பட்டது.
    • பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சி, சிறப்பு பூஜை நடைபெறும்.

    சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கச்சிராயிருப்பு கிராமத்தில் அய்யனார் சுவாமி, ஊர்காவலன்சுவாமி, கொடிப்புலி கருப்புச்சாமி ஆகிய கோவில்களின் குதிரை எடுப்பு திருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது. குதிரை எடுப்பு திருவிழா நேற்று மாலை வாணவேடிக்கை மேளதாளத்துடன் நடைபெற்றது. முதலில் சாமியாடிகள் அழைப்பு நடந்தது. இதைத் தொடர்ந்து சாமிசிலை மற்றும் குதிரை சிலைகளை நான்கு வீதி வழியாக சாமியாடிகள், பொதுமக்கள் எடுத்து வந்தனர். சாமிசிலை, குதிரைகள் கிராமத்தின் பொது மந்தையில் வைக்கப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சி நடந்தது.

    விழாவில் இன்று அய்யனார் கோவில், ஊர்க்காவலன் சாமி, கொடிப்புலி கருப்புசாமி ஆகிய கோவில்களுக்கு சம்பந்தப்பட்ட சாமி சிலை மற்றும் குதிரைகள் கொண்டு வந்து சேர்ப்பார்கள். இதைத்தொடர்ந்து அந்தந்த கோவிலில் பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சி, சிறப்பு பூஜை நடைபெறும். இவ்விழாவில் பல்வேறு கிராமத்திலிருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மேலூர் அருகே உள்ளது சாத்தமங்கலம் கண்மாய்க்கரையில் ஹரிஹரபுத்திர சாத்தை அய்யனார் கோவில் உள்ளது. இங்கு வைகாசி மாத புரவி எடுப்பு திருவிழா நடந்தது. இதற்காக பாரம்பரிய வழக்கப்படி பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக 73 புரவிகள் எனப்படும் மண் குதிரைகளை இ.மலம்பட்டியில் தயார் செய்யப்பட்டது. அங்கிருந்து 73 புரவிகளை பக்தர்கள் 7 கிலோ மீட்டர் தூரம் சுமந்து தனியாமங்கலம் அடுத்துள்ள சாத்தமங்கலம் மந்தை திடலில் வைத்தனர். பின்னர் அங்கிருந்து ஹரிஹரபுத்திர சாத்தை அய்யனார் கோவிலுக்கு புரவிகளை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்து வழிபட்டனர். கீழவளவு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    • பெரியஅரவங்குறிச்சியில் கரையம்மன், மலையம்மன், முத்துக்கருப்பணசாமி கோவில்களின் திருவிழா நடந்தது.
    • சுமார் 200-க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பெரியஅரவங்குறிச்சியில் கரையம்மன், மலையம்மன், முத்துக்கருப்பணசாமி கோவில்களின் திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 24-ம் தேதி சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடந்தது.

    தொடர்ந்து அன்று வாணவேடிக்கைகளுடன் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்வு நடந்தது. மறுநாள் கரையம்மனுக்கு பொங்கல் வைத்து கிடாய் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதனைதொடர்ந்து குதிரை, நாய், காளை, மதிலை சிலைகள் பெரிய அரவங்குறிச்சியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு இருப்பிடம் போய் சேர்ந்தது.

    தொடர்ந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பூசாரி வகையறாக்கள், 8 ஊர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    மேலும் இந்த திருவிழா 5 வருடங்களுக்கு பிறகு நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • துவரங்குறிச்சி அருகே புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.
    • தெய்வங்கள்-விலங்குகளின் சுடுமண் சிலைகளை சுமந்து சென்ற பக்தர்கள்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள மாங்கனாபட்டியில் சின்னக்கன்னிமார், வில்லுக்காரன் கோவில்கள் அங்குள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளன. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் புரவி எடுத்தல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் விழாவானது நேற்று மாலை நடை பெற்றது. மாங்கனாபட்டி காளியம்மன் கோவிலில் இருந்து விநாயகர், வில்லுக்காரன், சின்னக்கன்னிமார், கிருஷ்ணர், குதிரை, ஆடு, மாடு, நாய், கோழி, மனித உருவம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சுடுமண் சிலைகளை நேர்த்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் தங்கள் தலையில் சுமந்து கொண்டு மாங்கனாபட்டி மலையில் உள்ள சின்னக்கன்னிமார், வில்லுக்காரன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

    மேலும் இரும்பினால் செய்யப்பட்ட வேல், சூலாயுதம், வில் அம்புகளையும் ஊர்வலமாக எடுத்து வந்தனர். மலையடிவாரத்தில் சிலைகளை இறக்கி வைத்த பக்தர்கள் அங்கு சிலைகளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு சுவாமி சிலைகளின் கண் திறக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சிலைகளை தலையில் சுமந்தவாறு கோவிலுக்குச் சென்றனர். அங்கு தரையில் தரையில் நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பெண்கள் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். கொரோனா பெருந்தொற்கு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இவ்விழாவில் எண்டபுளி, மாங்கனாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×