search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் மாவட்டம்"

    சேலம் பாராளுமன்ற தொகுதியில் 161 பதட்டமான வாக்குச்சாவடிகள் என்றும் மாவட்டம் முழுவதும் 240 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்றும் மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார். #LSPolls #SalemDistrict #CollectorRohini
    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளது. சேலம் பாராளுமன்ற தொகுதியில் 15 லட்சத்து 92 ஆயிரத்து 487 வாக்காளர்கள் உள்ளனர்.

    583 மையங்களில் 1809 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. சேலம் பாராளுமன்ற தொகுதியில் 161 பதட்டமான வாக்குச்சாவடிகள் என்றும் மாவட்டம் முழுவதும் 240 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

    தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் புகார்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்து சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், உதவு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 4257020-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பொதுமக்கள் தேர்தல் மீறல்கள் தொடர்பான புகார்களை சி விஜில் என்ற கைப்பேசி செயலி மூலமாகவும் பதுவு செய்யலாம்.

    சேலம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங்கள் கல்லூரியில் அமைக்கப்பட உள்ளது.

    தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும், அலுவலர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தபபட உள்ளது.

    பொதுமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்பதை அறிந்துது கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண். 1950-க்கு நேரடியாக அழைத்து விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

    அரசியல் கட்சியினர் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது, பொது சுவர்களில் அனுமதி இல்லாமல் விளம்பரம்செய்யக் கூடாது, ஏற்கனவே செய்யப்பட்ட விளம்பரங்களை அழிக்கும் செலவு அரசியல் கட்சியினர் தேர்தல் செலவில் சேர்க்கப்படும்.

    அரசு புதுத் திட்டங்களை தொடங்கக் கூடாது, பழைய திட்டங்களை விரிவுபடுத்தக் கூடாது, பேனர்கள் வைக்கக் கூடாது. பதட்டமான வர்குச் சாவடிகளுக்கு துணை ராணுவம் அல்லது மத்திய பாதுகாப்பு படையை அழைப்பது குறித்து ஆலோசனை செய்து தேர்தல் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.

    மத வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது, இரவு 10 மணிக்கு மேல் காலை 6 மணி வரை கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது, பள்ளிகள் அருகில் பிரசாரம் செய்யக் கூடாது. 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்படும். அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிதிகள் மட்டும் ரூ. 1 லட்சம் வரை எடுத்துச் செல்லலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #SalemDistrict #CollectorRohini
    சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு குளிர்ந்த காற்று வீசியது. இதையடுத்து சேலம் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இதனால் கடந்த சில நாட்களாக சேலத்தில் வெயில் சுட்டெரித்தது. மதிய நேரங்களில் வெயில் மேலும் அதிக அளவில் வாட்டி வதைத்ததால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கினர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    கடந்த 23-ந் தேதி 100.1 டிகிரியாக இருந்த வெயில் 24-ந் தேதி 101.2 டிகிரியாகவும், 25-ந் தேதி 102.2 டிகிரியாகவும், 26-ந் தேதி 101.9 டிகிரியும் பதிவானது. நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைந்து 100 டிகிரியாக பதிவானது.

    இதனால் இனி வரும் நாட்களில் வெயிவின் தாக்கம் குறையுமா? அல்லது வெயிலின் தாக்கம் அதிகரிக்குமா? என்ற அச்சத்தில் பொது மக்கள் இருந்தனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு குளிர்ந்த காற்று வீசியது. இதையடுத்து சேலம் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.

    இந்த மழை சேலம் மாநகர், ஓமலூர், ஏற்காடு, தீவட்டிப்பட்டி, காமலாபுரம் உள்பட பல பகுதிகளில் பரவலாக பெய்தது.

    ஏற்காட்டில் அதிகாலை தொடங்கிய மழை காலை வரை நீடித்தது. சேலம் மாநகரில் கலெக்டர் அலுவலகம், 4 ரோடு, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன் உள்பட பல பகுதிகளில் காலை 9 மணியளவில் மழை பெய்தது. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர் குடை பிடித்த படி சென்றனர்.

    இந்த மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியதுடன் ரம்மியமான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக வெயிலில் தவித்த மக்களுக்கு இந்த மழை சற்று நிம்மதியாக இருந்தது. மேலும் இந்த மழை தொடருமா? என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
    சேலம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்தனர். #DoctorsProtest
    சேலம்:

    அரசு டாக்டர்கள் காலமுறை ஊதியம் மற்றும் மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பல கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லை என்றும் புகார் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் 4-ந் தேதியான இன்று ஒரு நாள் தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் வெளி நோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடபோவதாக அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதன்படி அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

    இதையொட்டி சேலம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி, ஓமலூர், எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், வாழப்பாடி உள்பட பல பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் பிரிவை அரசு டாக்டர்கள் புறக்கணித்தனர்.

    ஓமலூர், மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவை டாக்டர்கள் முற்றிலும் புறக்கணித்ததால் காய்ச்சல், தலை வலிக்கு கூட சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்தனர். இதனால் சில அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவு வெறிச்சோடி காணப்பட்டது.

    சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்களை வைத்து புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதனால் காய்ச்சல், தலைவலி உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பலர் சிகிச்சை பெறாமல் திரும்பி சென்றதுடன் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சென்றனர். இதனால் தனியார் ஆஸ்பத்திரிகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

    இது குறித்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல முறை போராட்டம் நடத்தியும் அரசு கண்டு கொள்ளவில்லை. இதனால் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து இன்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக சங்க தலைமை நிர்வாகிகள் முடிவுபடி போராட்டம் தீவிரம் அடையும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    ஜனநாயக தமிழ்நாடு டாக்டர்கள் சங்கத்தினர் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. #DoctorsProtest
    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மேட்டூர், வீரகனூர், கரியகோவில், ஓமலூர் உள்பட பல பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மேட்டூர், வீரகனூர், கரியகோவில், ஓமலூர் உள்பட பல பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    இந்த மழையால் மேட்டூர் மசூதி தெருவில் 10-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட செட்-டாப் பாக்ஸ்களும் சேதம் அடைந்தது.

    மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. ஏற்காடு மலைப்பாதையில் பனி மற்றும் மேகம் சூழ்ந்த படி இருந்ததால் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 12.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. வீரகனூர், கரிய கோவில், ஓமலூரில் 11, ஏற்காடு 8.6, கெங்கவல்லி 8.3, தம்மம்பட்டி, ஆத்தூரில் 6.4,சேலம் 6.2, பெத்தநாயக்கன் பாளையம் 4, ஆனைமடுவு 3, வாழப்பாடி 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 90.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.
    சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை மறு நாள் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மது கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.
    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை மறு நாள் (புதன்கிழமை) சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மது கூடங்கள் மூடப்படுகிறது. எனவே, சேலத்தில் உள்ள அரசு உரிமம் பெற்ற டாஸ்மாக் மதுக்கடைகள், மது பார்கள் மற்றும் ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

    மேலும், அன்றைய நாளில் மது விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.


    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறினார்.
    திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் கொடுக்க தமிழக அரசு மறுத்ததன் எதிரோலியாக 2-வது நாளாக இன்றும் சேலம் மாநகரில் இருந்து வெளியூருக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
    சேலம்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். இதையொட்டி தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கியது.

    சேலத்தில் இருந்து வெளியூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சென்னை மெரீனா பீச்சில் கலைஞரை அடக்கம் செய்ய இடம் கொடுக்க தமிழக அரசு மறுத்ததால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.தொண்டர்கள் ஆங்காங்கு திரண்டனர்.

    சேலம் பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் மாநகர துணை செயலாளர் பழக்கடை வி.கணேசன் தலைமையில் திரண்ட தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதே போல எடப்பாடி, மகுடஞ்சாவடி, மேட்டூர் புதுச்சாம்பள்ளி உள்பட பல பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.

    திருச்சியில் இருந்து சேலம் நோக்கி நேற்றிரவு வந்த அரசு பஸ்சை கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலம் அருகே மர்மநபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இது குறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சேலத்தில் இருந்து ஆத்தூருக்கு சென்ற அரசு பஸ் நரசிங்கபுரம் பகுதியில் சென்ற போது மர்ம நபர்கள் திடீரென கல் வீசி தாக்கினர். இதில் அந்த பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

    இதே போல ஆத்தூர் அருகே உள்ள எடப்பட்டியில் இருந்து ஆத்தூர் நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சை மர்ம நபர்கள் கல் வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது.ஆத்தூர் பகுதியில் மேலும் 2 பஸ்களின் கண்ணாடிகள் கல் வீசி உடைக்கப்பட்டன. இந்த சம்பவங்கள் குறித்து ஆத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செழியன் உள்பட சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பயணிகளை பஸ்சில் இருந்து இறக்கி விட்டு விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு பஸ்களை எடுத்து சென்றனர். இதனால் நேற்றிரவு வெளியூர் செல்பவர்கள் கடும் அவதிப்பட்டனர்.

    2-வது நாளாக இன்றும் சேலம் மாநகரில் இருந்து வெளியூருக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதே போல புறநகர் பகுதிகளான ஓமலூர், ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், வாழப்பாடி என மாவட்டம் முழுவதும் பஸ்கள் இயங்கவில்லை.

    இதனால் பஸ் நிலையங்கள், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்கள் ஓடாததால் அவசர தேவைக்கு கூட வெளியூர் செல்ல முடியாமல் பொது மக்கள் தவித்தனர். இதனால் ரெயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிக அளவில் இருந்தது. #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    ×