search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை மக்கள்"

    • தற்பொழுது அடிக்கிற வெயிலில் சென்னை மெட்ரோவில் மக்கள் செல்ல அதிகம் விரும்புகின்றனர்.
    • இதுகுறித்து தற்பொழுது சென்னை மெட்ரோ நிறுவனம் அவர்களது எக்ஸ் தளத்தில் அறிக்கையை பதிவிட்டுள்ளனர்.

    சென்னை மெட்ரொ இரயில் நிறுவனம் சென்னையில் மக்களுக்கு போக்குவரத்து வசதியை 2015 ஆம் ஆண்டில் இருந்து சேவையை வழங்கி வருகிறது.

    மெட்ரோ தொடங்கிய ஆரம்பத்தில் மக்கள் மெட்ரோ சேவையை குறைவாகவே பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாட்கள் கடந்து செல்ல செல்ல இச்சூழல் மாறிக்கொண்டே வருகிறது. தற்பொழுது அடிக்கிற வெயிலில் சென்னை மெட்ரோவில் மக்கள் செல்ல அதிகம் விரும்புகின்றனர். பொதுமக்களுக்கு அவர்கள் செல்லும் இடத்திற்கு வேகமாகவும் டிராஃபிக்கில் சிக்காமல் செல்ல முடிகிறது.

    இதுகுறித்து தற்பொழுது சென்னை மெட்ரோ நிறுவனம் அவர்களது எக்ஸ் தளத்தில் அறிக்கையை பதிவிட்டுள்ளனர்.

    அந்த வகையில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ இரயில்களில் 80 லட்ச பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: 01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.02.2024 முதல் 29.02.2024 வரை மொத்தம் 86,15,008 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.03.2024 முதல் 31.03.2024 வரை மொத்தம் 86,82,457 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.04.2024 முதல் 30.04.2024 வரை மொத்தம் 80,87,712 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி. இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகப்பட்சமாக கடந்த மாதம் 8 ஆம் தேதி 3.24 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    தற்பொழுது சென்னை மெட்ரோ சேவை மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும், கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரையிலான கட்டமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • மழை மற்றும் கடும் வெயில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த தட்பவெப்ப சூழ்நிலையில் பெரும்பாலானவர்களுக்கு சளி, இருமலுடன் காய்ச்சல் வருகிறது.
    • தொடர் வயிற்றுப் போக்கு, கடும் ஜூரம் இருந்தால் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் பருவமழை தொடங்குவதற்கு முந்தைய இந்த காலக்கட்டத்தில் டெங்கு, சிக்குன் குனியா, வைரல் காய்ச்சல், பொதுவாக காணப்படும்.

    தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பரவலாக டெங்கு பாதிப்பு இருந்தாலும் பயப்படக்கூடிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.

    தமிழகம் முழுவதும் சுகாதார தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் கட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் டைபாய்டு காய்ச்சல் சென்னையில் அதிகரித்து வருகிறது. பாக்டீரியா தொற்று மூலம் இது பரவுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிகளவில் மருத்துவமனைக்கு வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

    காய்ச்சலுடன் வாந்தி, வயிற்றுப்போக்கு அறிகுறியுடன் மருத்துவமனைக்கு பலர் வருகிறார்கள். கடந்த சில வாரங்களில் வரும் குழந்தைகளில் பலருக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக ரத்த பரிசோதனை முடிவு தெரிவிக்கின்றன என்று காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    காய்ச்சல் வயிற்றுப்போக்குடன் வரும் குழந்தைகள் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தால் பாசிட்டிவ் என வருகிறது.

    மழை மற்றும் கடும் வெயில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த தட்பவெப்ப சூழ்நிலையில் பெரும்பாலானவர்களுக்கு சளி, இருமலுடன் காய்ச்சல் வருகிறது. அரசு மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு வரும் நோயாளிகளில் பலர் டெங்கு, டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஜூலை மற்றும் செப்டம்பர் மாதத்தில் இப்பாதிப்பு பொதுவாக அதிகமாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். டைபாய்டு காய்ச்சல் பாதிக்கப்படும் பெரியவர்களுக்கு பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி ஊசி, மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டு புற நோயாளிகளாக வந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    குழந்தைகள் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    டைபாய்டு மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

    டைபாய்டு ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு தொற்றக்கூடியதாகும். இது உணவு மற்றும் குடிக்கும் தண்ணீரில் இருந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் வெளி உணவுகளை சாப்பிடுவதன் மூலம் தொற்றை ஏற்படுத்துகிறது.

    குடிக்கும் நீரில் இருந்து வைரஸ் கிருமி பாதிப்பை உண்டாக்குகிறது. சுகாதார மற்ற தண்ணீரை பருகும் போது பாதிப்பு ஏற்படும். அதிகபட்சமாக 104 டிகிரி வரை காய்ச்சல் தாக்கும். தலைவலி, வயிற்று வலி, உடல் வலி, தொடர்ந்து வயிற்றுப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

    டைபாய்டு காய்ச்சலுக்கு காரணமான சுத்திகரிப்பு செய்யாத குடிநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். வெளியில் சாப்பிடும்போது பழங்கள், பச்சை காய்கறிகள் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

    வெளியில் சாப்பிடும் உணவுகள் சூடாக உட்கொள்ள வேண்டும். பழைய உணவுகளை சாப்பிடக்கூடாது. தெருவோரங்களில் சுகாதாரமற்ற நிலையில் விற்கும் உணவு, குளிர்பானங்கள் போன்றவற்றை உட்கொள்ள கூடாது.

    தொடர் வயிற்றுப் போக்கு, கடும் ஜூரம் இருந்தால் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.

    இவ்வாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

    • பெண் நாய் குட்டியை விட ஆண் குட்டிக்கு விலை அதிகம்.
    • தனி நபர்கள்தான் பல்வேறு இன நாய் குட்டிகளை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி பல்கலைக் கழகம் மாதவரத்தில் உள்ளது. ஆடு, மாடு, கோழி, நாய் உள்ளிட்ட கால்நடைகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது, பராமரிப்பது, உணவு வழங்குவது போன்ற ஆராய்ச்சி படிப்புகள் இங்கு இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இவற்றின் ஒரு பகுதியாக கால்நடை உற்பத்தி கல்வி மையம் செயல்படுகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு கால்நடைகள் குறித்த செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.

    மாடு, நாய், ஆடு போன்றவை எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றன. குட்டிகளை எப்படி பாதுகாக்கின்றன. அவற்றின் உணவு, பராமரிப்பு போன்றவை குறித்து மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக பிரத்யேகமாக நாய் பண்ணை ஒன்று கால்நடை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    அதில் தமிழகத்தில் உள்ள 4 வகை நாட்டு நாய்கள் வளர்க்கப்படுகின்றன. ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை ஆகிய இனங்களின் நாய்கள் மூலம் இனப்பெருக்கம் செய்து அவற்றின் குட்டிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் பணி நடந்து வருகிறது.

    ஒவ்வொரு இனத்திலும் ஆண்-பெண் நாய்கள் பண்ணையில் வளர்த்து குறிப்பிட்ட காலத்தில் இனப்பெருக்கம் வழிமுறைகளை கையாண்டு அதன் மூலம் கிடைக்கும் நாய் குட்டிகளை விற்பனை செய்கிறார்கள்.

    தனி நபர்கள்தான் பல்வேறு இன நாய் குட்டிகளை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். ஆனால் கால்நடை பல்கலைக்கழகமே நாய் பண்ணை மூலம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதோடு குட்டிகளை விற்பனை செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 4 வகையான நாய் குட்டிகளும் அங்கு கிடைக்கின்றன. அவற்றை வாங்குவதற்கு செல்லப்பிரியர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    பெண் நாய் குட்டியை விட ஆண் குட்டிக்கு விலை அதிகம். ஆண் நாய்குட்டிக்கு ரூ.7 ஆயிரமும், பெண் நாய் குட்டிக்கு ரூ. 6 ஆயிரமும் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    அரசின் கால்நடைத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள நாட்டு நாய்கள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. நாட்டு நாய் குட்டிகளுக்கு மவுசு ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளில் வளர்க்க ஆசைப்பட்டு தினமும் பண்ணைக்கு வருகிறார்கள்.

    குறிப்பிட்ட காலத்தில் மட்டும் நாய் குட்டிகள் கிடைக்கும் என்பதால் முன்பதிவு செய்து காத்து இருக்கின்றனர். பெயர், முகவரி, போன் எண்ணுடன் பதிவு செய்தால் நாய் குட்டி தயாரானவுடன் போனில் அழைத்து வழங்குகிறர்கள்.

    இதுகுறித்து கால்நடை உற்பத்தி கல்வி மைய இயக்குனர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் கூறியதாவது:-

    கால்நடை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு நாய் பண்ணை மூலம் சிறந்த பயிற்சி கிடைக்கிறது. நாய்கள் ஆண்டுக்கு 2 முறை இனப்பெருக்கம் செய்யும். இந்த பண்ணை மூலம் வருடத்திற்கு 50 நாய் குட்டிகள் விற்பனை செய்யப்படுகிறது. 45 நாட்கள் குட்டியாக இருக்கும் போது அதற்கு தடுப்பூசி போட்டு தேவையானவர்களுக்கு வழங்குகிறோம்.

    நாய் குட்டி தேவைப்படுவோர் மாதவரத்தில் உள்ள நாய் பண்ணையில் பதிவு செய்ய வேண்டும். முன்பணம் எதுவும் இல்லை. நாய் குட்டிகளை விற்கும் போது பணம் பெற்றுக் கொள்ளப்படும்.

    சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து செல்லப் பிராணிகள் வளர்ப்போர் விரும்பி வருகிறார்கள். அவர்களுக்கு குட்டிகளை வளர்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்குகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எந்த வகையான வைரஸ் சமூகத்தில் பரவி வருகிறது என்பது குறித்த ஆய்வை பொது சுகாதாரத்துறை முன்னெடுத்தது.
    • பரிசோதனை முடிவில் தற்போது கொரோனா பாதிப்போ அல்லது பன்றிக்காய்ச்சல் பாதிப்போ பரவலாக இல்லை என்பது கண்டறியப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் சமீப காலமாக பரவிவரும் காய்ச்சல் இன்புளூயன்சா-ஏ வகை வைரஸ் தொற்று என்பது பொது சுகாதாரத்துறையின் ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

    அதற்கு அடுத்தபடியாக நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆர்.எஸ்.வி. வைரஸ் தொற்று பரவலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு வைரஸ் தொற்றுகளும் பருவ காலத்தில் வழக்கமாக பரவும் பாதிப்புதான் என்ப தால் அச்சமடையத் தேவையில்லை என்றும், அதே வேளையில் முன் எச்சரிக்கையாக இருக்குமாறும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    குளிர்காலம் மற்றும் பருவமழைக்காலம் நிறைவடைந்தபோதிலும் சென்னையிலும், அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக உடல் வலி, தொண்டை வலி, இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல் முதியவர்களிடையேயும், குழந்தைகளிடையேயும் தீவிரமாக பரவி வருகிறது.

    இந்த நிலையில், எந்த வகையான வைரஸ் சமூகத்தில் பரவி வருகிறது என்பது குறித்த ஆய்வை பொது சுகாதாரத்துறை முன்னெடுத்தது. மாதிரிகளை தோராயமாக பாதிக்கப்பட்டவர்களின் சளியை சேகரித்து மொத்தம் 21 வகையான வைரஸ் பாதிப்புகள் அதில் உள்ளனவா என பகுப்பாய்வு செய்யப்பட்டது. பொது சுகாதாரத்துறை ஆய்வகத்தில் நடைபெற்ற இந்த பரிசோதனைக்காக சிறப்பு உபகரணங்கள் தருவிக்கப்பட்டன.

    பரிசோதனை முடிவில் தற்போது கொரோனா பாதிப்போ அல்லது பன்றிக்காய்ச்சல் பாதிப்போ பரவலாக இல்லை என்பது கண்டறியப்பட்டது. அதேவேளையில் இன்புளூயன்சா ஏ வகை தொற்று 50 சதவீதம் பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    அதற்கு அடுத்தபடியாக ஆர்.எஸ்.வி. எனப்படும் நுரையீரல் வைரஸ் தாக்க பாதிப்பு 37.5 சதவீதம் பேருக்கு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

    தற்போது சென்னையில் பரவி வரும் வைரஸ் பாதிப்புகள் புதியவை அல்ல. எனவே, அவை ஒரு வாரத்துக்குள் குணமடைந்து விடக்கூடியவைதான். அதேவேளையில் முதியவர்கள், இணைநோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்களுக்கு தேவைப்பட்டால் ஓசல்டா மிவிர் எனப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்து வழங்கலாம்.

    அந்த மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு கையிருப்பு உள்ளன. அடுத்த சில நாட்களுக்குள் வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வரும். முதியவர்கள், எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படி சென்றாலும் முகக்கவசம் அணிவது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×