search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலிண்டர் வெடித்தது"

    அருப்புக்கோட்டை அருகே எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் வீடு தீப்பிடித்து எரிந்ததுடன் தரைமட்டமானது. வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பருத்தி பஞ்சுகள் எரிந்து நாசமானது.

    பாலையம்பட்டி:

    அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப் பட்டியைச் சேர்ந்தவர் சேவுகன் (வயது 55), விவசாயி. இவர் அங்குள்ள காட்டுக் கொட்டாயில் ஆஸ்பெட்டாஸ் கூரையுடன் கூடிய வீட்டில் மனைவி சங்குலட்சுமியுடன் வசித்து வருகிறார்.

    நேற்று கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இரவு நேரத்தில் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென்று வெடித்தது.

    பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டரால் வீடு தீப்பிடித்து எரிந்ததுடன் தரைமட்டமானது. இதில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பருத்தி பஞ்சுகள் எரிந்து நாசமானது.

    தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    வாணியம்பாடியில் கியாஸ் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்ததில் 6 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே உள்ள கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமு. கூலித்தொழிலாளி. நேற்று மாலை இவரது வீட்டில் கியாஸ் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்தது.

    இதனால் அந்த வீடு முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக தீ அருகில் வசிக்கும் முரளி, செல்வம், ராஜன்பாபு, கர்லின், காசியம்மாள் ஆகியோரின் வீடுகளுக்கும் பரவியது. இதானல் அந்த வீடுகளில் தீப்பற்றி எரிந்தது. இதனால் 6 வீட்டில் அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.

    ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியிலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

    தீவிபத்து நடந்த இடத்தை தாசில்தார் கிருஷ்ணவேனி, வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், அ.தி.மு.க.நகர செயலாளர் சதாசிவம், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம்பாஷா மற்றும் நிர்வாகிகள் சென்று பார்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

    பாபநாசம் அருகே இன்று காலை சிலிண்டர் வெடித்து 12 வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி கீழவங்காரம் பேட்டையில், முஸ்லீம் தெரு உள்ளது. இந்த பகுதியில் அப்துல் லதீப் (வயது 70) என்பவர் வீட்டில் இன்று காலை லேசான தீ விபத்து ஏற்பட்டது. உடனே காற்றில் தீ மளமளவென அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது.

    இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். பின்னர் தீ விபத்தில் அடுத்தடுத்த வீடுகளில் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தீ கட்டுக்கடங்காமல் பரவியாதல் அப்துல் லதீப் வீடு அருகே உள்ள பாத்திமா பீவி (50), காதர்மைதீன் (70), ஜாகிர் உசேன் (45), பேகம் (40), சேக்நூர்தீன் (60), நாசர்அலி (50), மதினாபேகம் (35), அசரப்அலி (45), சேக் உசேன் (45), லெனின் (65) ஆகியோரின் வீடுகள் தீயில் முழுவதும் எரிய தொடங்கியது.

    இதனால் 12 பேரின் வீடுகளும் தீயில் எரிந்து முழுவதும் நாசமானது. வீடுகளில் உள்ள முக்கிய சான்றிதழ்கள், ஆதார்கார்டு, ரேசன் கார்டு, பணம் நகைகள் என முழுவதும் எரிந்து கரிகியது. இதன் மொத்தம் மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தீ விபத்து குறித்து பாபநாசம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே பாபநாசம் மற்றும் கும்பகோணத்தில் இருந்து 2 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து தீ விபத்து குறித்து தஞ்சை கலெக்டருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே கலெக்டர் அண்ணாதுரை, கும்பகோணம் சப்-கலெக்டர் பிரதீப்குமார், பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ், துணை தாசில்தார் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் அன்பரசு உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர் அருகே முன்விரோதத்தில் வீட்டுக்கு தீ வைத்ததால் சிலிண்டர் வெடித்து 6 வீடுகள் எரிந்து சாம்பலானது.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ளது சேடாபாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவரது மகன் வெற்றிவேல் (வயது 19). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்தஜோதி, முகுந்தன், விஜயகுமார் ஆகியோருக்கிடையே செல்போனில் வாட்ஸ்-அப் அனுப்புவதில் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆனந்தஜோதி உள்பட 6 பேர் சுமதி வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த அவரிடம் தகராறு செய்தனர். அப்போது அங்கு வந்த சுமதியின் உறவினர் கார்த்திக் (29) என்பவர், ஏன் தகராறு செய்கிறீர்கள்? என்று தட்டி கேட்டார்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தஜோதியும், அவரது நண்பர்களும் கார்த்திகை சரமாரியாக தாக்கினர்.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த கார்த்திக் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தனது அண்ணன் கார்த்திக் தாக்கப்பட்ட சம்பவம் அவரது தம்பி விக்னேசுக்கு தெரியவந்தது. அவரும், அவரது நண்பர் செந்தில்குமாரும் நேற்று இரவு ஆனந்தஜோதியின் வீட்டுக்கு சென்றனர். பின்பு அவரது கூரைவீட்டுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென்று குடிசை வீடு முழுவதும் பரவியது. வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அருகில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

    சிலிண்டர் வெடித்ததில் அருகில் இருந்த தனசேகர், செல்வம், வெங்கடேசன், ராஜவேலு, மாரியம்மாள் ஆகியோரின் வீடுகளுக்கும் தீ பரவியது. உடனே பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர்.

    மேலும் இது குறித்து கடலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஆனந்தஜோதி வீடு உள்பட 6 பேரின் வீடுகளும் எரிந்து சாம்பலானது.

    வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமாகின. இந்த தீ விபத்தில் 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்தன.

    இந்த சம்பவம் தொடர்பாக முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் முகுந்தன், விஜயகுமார், செந்தில்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சேடாபாளையம் கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ×