search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடங்குளம் அணுமின் நிலையம்"

    • மிதவை கப்பலை மீட்பதற்காக சென்னை, மும்பையில் இருந்து வந்த மீட்பு குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
    • மிதவை கப்பல் 620 டன் வரை தான் எடை கொண்டிருக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதில் 5, 6-வது அணு உலைகளுக்கான நான்கு நீராவி ஜெனரேட்டர்கள் ரஷியாவில் இருந்து கடந்த மாதம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து 2 ஜெனரேட்டர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு கடல் வழியாக ஏற்கனவே கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து மற்ற 2 நீராவி ஜெனரேட்டர்களும் கடந்த 7-ந்தேதி மிதவை கப்பலில் ஏற்றி, இழுவை கப்பல் மூலமாக கூடங்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது தரை தட்டியது.

    இதையடுத்து மிதவை கப்பலை மீட்பதற்காக சென்னை, மும்பையில் இருந்து வந்த மீட்பு குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனாலும் அதனை மீட்க முடியவில்லை.

    தொடர்ந்து பாறையில் தரைதட்டி நிற்கும் மிதவை கப்பலை மீட்பதற்காக, இலங்கையில் இருந்து அதிக இழுவைத்திறன் கொண்ட ஓரியன் என்ற பெயரிலான அதிநவீன இழுவை கப்பல் நேற்று கூடங்குளம் வந்து சேர்ந்தது. எனினும் தரைதட்டிய மிதவை கப்பலை மீட்பதற்கான பணிகளை உடனே தொடங்கவில்லை.

    இன்று மதியத்திற்கு மேல் மீட்பு பணிகள் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த கப்பலை ஓரியன் இழுவை கப்பலை மட்டும் கொண்டு இழுத்து விடலாமா என்று ஒரு குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்று மதியம் ஓரியன் கப்பலின் தலைமை செயல் அதிகாரி கூடங்குளம் வருகிறார். அவர் வந்த பின்னரே ஆலோசனை நடத்தி மீட்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    அதே நேரத்தில் தற்போது ஓரியன் கப்பலுடன் வந்துள்ள குழுவினர் கூறுகையில், கடற்கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் 1000 டன் எடை கொண்ட கப்பலை கூட எங்களது இழுவை கப்பலால் இழுத்து இருக்கிறோம். இந்த மிதவை கப்பல் 620 டன் வரை தான் எடை கொண்டிருக்கிறது. அதுவும் கடலில் தான் இருக்கிறது. எனவே எளிதாக இழுத்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

    • கடல் அலையின் காரணமாக மிதவை கப்பலின் ஒரு பகுதியானது அருகில் இருந்த பாறையின் ஒரு பகுதியில் அமர்ந்து சரிந்த நிலையில் காணப்பட்டது.
    • இன்று அமாவாசை தினம் என்பதால் கடல் நீர்மட்டம் அதிகரிக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5-வது மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் ரூ.49 ஆயிரத்து 621 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இழுவை கப்பல் மூலமாக 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான தலா 300 டன் எடை கொண்ட 2 ஸ்டீம் ஜெனரேட்டர்கள் கடல் மார்க்கமாக எடுத்து வரப்பட்டது. கூடங்குளம் அணுமின் நிலைய சிறிய துறைமுக நுழைவு வாயில் பகுதியில் வரும்போது இழுவை கப்பலின் பின்னால் இழுத்து வரப்பட்ட பார்ஜி எனப்படும் மிதவை கப்பல் பாறை இடுக்கில் சிக்கியதால் இழுவை கப்பலில் உள்ள உலகத்தரத்திலான கயிறு அறுந்து தரை தட்டி நின்று விட்டது.

    அப்பொழுது அடித்த கடல் அலையின் காரணமாக மிதவை கப்பலின் ஒரு பகுதியானது அருகில் இருந்த பாறையின் ஒரு பகுதியில் அமர்ந்து சரிந்த நிலையில் காணப்பட்டது. இதனை மீட்கும் பணிகள் சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை மற்றும் மும்பை துறைமுக பகுதிகளில் இருந்து வல்லுனர் குழுவினர் வரவழைக்கப்பட்டு கப்பலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அதிக விசை கொண்ட இழுவை கப்பல்கள் மும்பை அல்லது கொச்சின் துறைமுகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பின்னர் தான் இந்த மீட்புப் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் அதிக விசை திறன் கொண்ட இழுவை கப்பல்கள் வரும்போது, அவை கடல் பகுதியில் குறைவான தண்ணீரில் தரை தட்டிவிடும் நிலை இருக்கிறது என்பதால் இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து கூடங்குளத்திற்கு வந்துள்ள அதே விசை திறன் கொண்ட இழுவை கப்பல் கொண்டு வரப்படுகிறது.

    இந்த கப்பலானது நேற்று இரவு நிலவரப்படி கூடங்குளத்தில் இருந்து 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தது. இன்று அந்த கப்பல் கூடங்குளத்திற்கு வந்து விடும். அதேநேரத்தில் இன்று அமாவாசை தினம் என்பதால் கடல் நீர்மட்டம் அதிகரிக்கலாம் அல்லது திடீரென கடல் உள்வாங்கலாம் என்றும், சில நேரங்களில் கடல் சீற்றமும் அதிகரிக்கலாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    இதன் காரணமாக கொழும்புவில் இருந்து கொண்டுவரப்பட உள்ள மீட்பு கப்பல், சம்பவ இடத்திற்கு வரும் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அல்லது இரவு கூடங்குளம் பகுதிக்கு அந்த கப்பல் கொண்டுவரப்பட்டு, நாளை காலையில் மிதவை கப்பலை மீட்கும் பணிகள் தொடங்கும் என அணுமின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • அடித்த கடல் அலையின் காரணமாக மிதவை படகின் ஒரு பகுதியானது அருகில் இருந்த பாறையின் ஒரு பகுதியில் அமர்ந்து சரிந்த நிலையில் காணப்பட்டது.
    • கலனில் எந்தவிதமான பாதிப்பும் இதுவரை இல்லை என அணுமின் நிலைய உயர் மட்ட ஆய்வுக் கூட்டத்தில் தகவலை தெரிவித்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5-வது மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் சுமார் ரூ.49 ஆயிரத்து 621 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

    வருகிற 2027-ம் ஆண்டுக்குள் இதன் கட்டுமான பணிகளை முடித்து மின் உற்பத்திகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கனவே உக்ரைன்-ரஷ்ய போரின் காரணமாக இந்த அணு உலைகளுக்கு வர வேண்டிய உதிரி பாகங்கள் வருவதில் மிகுந்த கால தாமதம் ஏற்பட்டது.

    இதனால் இதன் திட்ட காலம் மேலும் சில ஆண்டுகள் ஆகும் எனவும், 2030-ல் தான் மின் உற்பத்தி தொடங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகின. இந்த சூழ்நிலையில் கடந்த 7-ந்தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இழுவை கப்பல் மூலமாக 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான தலா 300 டன் எடை கொண்ட 2 ஸ்டீம் ஜெனரேட்டர்கள் கடல் மார்க்கமாக எடுத்து வரப்பட்டது.

    கூடங்குளம் அணுமின் நிலைய சிறிய துறைமுக நுழைவு வாயில் பகுதியில் வரும்போது இழுவை கப்பலின் பின்னால் இழுத்து வரப்பட்ட பார்ஜி எனப்படும் மிதவை கப்பல் பாறை இடுக்கில் சிக்கியதால் இழுவை கப்பலில் உள்ள உலகத்தரத்திலான கயிறு அறுந்து தரை தட்டி நின்றுவிட்டது. அப்பொழுது அடித்த கடல் அலையின் காரணமாக மிதவை படகின் ஒரு பகுதியானது அருகில் இருந்த பாறையின் ஒரு பகுதியில் அமர்ந்து சரிந்த நிலையில் காணப்பட்டது.

    இதனை மீட்கும் பணிகள் 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை துறைமுக பகுதியில் இருந்து நேற்று காலை வல்லுனர் குழுவினர் வந்து ஆராய்ந்து 3 பரிந்துரைகளை செய்தனர். அதன் பின் மும்பை துறைமுகத்தை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களும் வரவழைக்கப்பட்டு படகை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    மிதவை படகு பாறையில் மோதியதினால் 3 இடங்களில் சேதம் அடைந்துள்ளதாகவும், அதனை கடலுக்குள் மூழ்கி சென்று வெல்டிங் செய்யும் பணிகளை செய்வதற்காக நேற்று மதியத்திற்கு பிறகு வந்த மும்பை துறைமுக தொழில்நுட்ப குழுவினர், தொடர்ந்து அந்த பணியில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து மிதவை கப்பலின் உள்ளே தண்ணீர் அடைக்கப்பட்டு சாய்ந்த நிலையில் இருந்த மிதவைக் கப்பலை சமன் செய்த பணிகள் முடிவடைந்தன. உடனடியாக இழுவை கப்பலை கொண்டு அதனை மீட்கும் பணிகள் மாலை 3 மணி அளவில் தொடங்கினர். ஆனாலும் மிதவை கப்பலின் ஒரு பகுதி பாறையின் மேல் அமர்ந்திருந்ததினால், இழுவை கப்பலால் அதனை இழுக்க முடியாமல் மீண்டும் உலோக கயிறு அறுந்துவிட்டது.

    இதனால் நேற்று மாலையில் மீண்டும் பணிகள் நிறுத்தப்பட்டது. அதிக விசை கொண்ட இழுவை கப்பல்கள் மும்பை அல்லது கொச்சின் துறைமுகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பின்னர் தான் இந்த மீட்டுப் பணிகள் இனி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்திய அனுமின் உற்பத்திக்கழக விஞ்ஞானிகளும், கூடங்குளத்தில் தங்கியிருக்கும் ரஷ்ய அணுசக்தி ஏற்றுமதி கழகம் எனப்படும் அட்டம்ஸ்ட்ராய் நிறுவனத்தின் ரஷ்ய விஞ்ஞானிகளும் மிதவை கப்பலில் உள்ள நீராவி உற்பத்தி கலனை ஆய்வு செய்தனர். ஸ்டீம் ஜெனரேட்டர் எனப்படும் அந்த கலனில் எந்தவிதமான பாதிப்பும் இதுவரை இல்லை என அணுமின் நிலைய உயர் மட்ட ஆய்வுக் கூட்டத்தில் தகவலை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மும்பையில் இருந்து மீட்பு கப்பல் வந்த பின்னரே மிதவை கப்பலை மீட்க முடியும் என்பதால், மேலும் சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

    • கூடங்குளம் அணுமின் நிலைய துறைமுகப் பகுதிகளின் நுழைவு வாயில் பகுதியில் பாறையில் சிக்கியது.
    • காற்றின் வேகம் அதிகமாக இருந்ததினால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான நீராவி உற்பத்தி கலன் ஏற்றி வந்த மிதவைக் கப்பல் ஆனது கூடங்குளம் அணுமின் நிலைய துறைமுகப் பகுதிகளின் நுழைவு வாயில் பகுதியில் பாறையில் சிக்கியது.

    இதனை மீட்கும் பணிகள் நேற்று நடைபெற்றது என்றாலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததினால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த சூழ்நிலையில் இதற்கான வல்லுனர் குழுவினர் கூடங்குளம் அணுமின் நிலையம் வந்து உள்ளனர். அவர்கள் இதனை மீட்கும் பணியை இன்று காலை முதலே தொடங்கி உள்ளனர். பாறையில் சிக்கி உள்ள மிதவைக் கப்பலை இழுப்பதற்கு வல்லுநர் குழுவினர் 3 பரிந்துரைகளை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த வல்லுனர் குழுவினர் கடல் பகுதிகளில் இதுபோன்ற கப்பல்கள் சிக்கும் பொழுது அதனை மீட்கும் பணியில் அனுபவம் பெற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுமார் 300 டன் எடை கொண்ட இந்த எந்திரம் கடந்த 7-ந்தேதி தூத்துக்குடிக்கு வந்தது.
    • மிதவையின் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் இருப்பதினால் அதனை சரி செய்யும் பணிகளில் இதனை ஏற்றி வந்த ஒப்பந்தக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான நீராவி உற்பத்தி செய்யும் எந்திரம் ரஷியாவில் இருந்து கொண்டு வரப்பட்டது.

    சுமார் 300 டன் எடை கொண்ட இந்த எந்திரம் கடந்த 7-ந்தேதி தூத்துக்குடிக்கு வந்தது. நேற்று தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இழுவை கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டது. அப்போது இழுவை கப்பலுக்கும், மிதவைக்கும் இடையிலான கயிறு அறுந்து விட்டதினால் நீராவி உற்பத்தி எந்திரத்தின் மிதவை அங்குள்ள பாறை இடுக்குகளில் சிக்கி உள்ளது. அதனை சரி செய்யும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.

    இதனால் மிதவையின் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் இருப்பதினால் அதனை சரி செய்யும் பணிகளில் இதனை ஏற்றி வந்த ஒப்பந்தக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    அணுமின் நிலையத்தின் சிறிய துறைமுக பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் பாறை இடுக்குகளில் சிக்கியுள்ள அந்த மிதவையானது கடலின் நீர்மட்டத்தின் உயர்வு மற்றும் காற்றின் வேகத்தை பொறுத்து மீண்டும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அந்த சிறிய துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 1-வது அணு உலை மூலம் மட்டும் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.
    • கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த 2 அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று காலையில் 2-வது அணு உலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. 2-வது அணு உலையில் பராமரிப்பு மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருட்கள் நிரப்பும் பணி இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என்று அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது. தற்போது 1-வது அணு உலை மூலம் மட்டும் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
    • 3, 4-வது அணு உலைகள் கட்டுமானப் பணிகளும் நடந்து வருகின்றன. மேலும் 5, 6-வது அணு உலைகளும் அமைக்கப்பட உள்ளன.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர 3, 4-வது அணு உலைகள் கட்டுமானப் பணிகளும் நடந்து வருகின்றன. மேலும் 5, 6-வது அணு உலைகளும் அமைக்கப்பட உள்ளன.

    இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் ரஷிய நாட்டின் மாஸ்கோவில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்தது.

    அங்கிருந்து மிகுந்த பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் இன்று காலை கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    தனி விமானம் மூலம் ரஷியாவில் இருந்து வந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிக்கோல்கள் 3 ட்ரெய்லர் லாரிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக காவல்துறையுடன் மிகுந்த பாதுகாப்புடன் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அதிகாலை 3 மணி அளவில் வந்து சேர்ந்தது.

    ஒவ்வொரு எரிபொருளும் 4.57 மீட்டர் நீளமும், 705 கிலோ கிராம் எடையும் கொண்டது. அணு உலையில் 163 எரிக்கோல்கள் ஒரு பண்டல் ஆக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும். தற்பொழுது 45 பண்டல்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டதன் காரணமாக எவரும் இடமாற்றம் செய்யப்படவில்லை.
    • கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்ததாரர்களுடன் ஏராளமான உள்ளூர் மக்களும் வேலை பார்க்கிறார்கள்.

    புதுடெல்லி:

    மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் ராஜேஷ்குமார், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதா? இதுவரை வழங்கிய வேலை விவரங்கள் என்ன? என்பது தொடர்பான கேள்விகளை மாநிலங்களவையில் முன் வைத்தார்.

    இதற்கு, பிரதமர் அலுவலகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி (தனி பொறுப்பு) ஜிதேந்திர சிங் நேற்று பதில் அளித்தார். அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டதன் காரணமாக எவரும் இடமாற்றம் செய்யப்படவில்லை. வேலை வழங்குவது தொடர்பாக நில உரிமையாளர்களுக்கு எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை.

    இருப்பினும், மாநில அரசால் இறுதி செய்யப்பட்ட நிலம் மற்றும் சொத்துகளுக்கான இழப்பீடு சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. திட்டத்தின் அமைப்பு சார்பில் உள்ளூர் மக்களுக்கு அணுமின் நிலையத்தில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

    தற்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் குரூப் 'சி' பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புகளில், அணுமின் திட்டத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வயது மற்றும் அத்தியாவசியத் தகுதிகளில் மதிப்பெண்களின் சதவீதத்தில் தளர்வு வழங்கப்படுகிறது. இதுவரை, 72 பேர் இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை மூலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    மேலும், ஒப்பந்ததாரர்களுடன் ஏராளமான உள்ளூர் மக்களும் வேலை பார்க்கிறார்கள். இதுதவிர, பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் உள்ளூர் மக்களுக்கு வணிக வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 22-ந்தேதி முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது.
    • கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1 மற்றும் 2-வது அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அணு உலைகள் மூலம் தினமும் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 22-ந்தேதி முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. இதன் மூலம் தமிழகத்திற்கு சுமார் 500 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது.

    தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. அங்கு தற்போது 3 மற்றும் 4-வது அணு உலைகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதில் சுமார் 80 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ஆண்டுதோறும் அணு உலைகளில் எரிந்த யுரேனியம் எரிகோல்களை மாற்றும் பணிகள் நடைபெறும். அதனை முன்னிட்டு அணு உலைகளில் மின் உற்பத்தி நிறுத்தப்படும்.

    அதன்படி இந்த ஆண்டும் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

    சுமார் 40 நாட்களுக்கு பிறகு பணிகள் முடிவடைந்தபின் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது.

    ×