search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டாறு அணை"

    • குண்டாறு அணை மூலமாக சுமார் 1,200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
    • ஷட்டரில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய பணிகளுக்கு முக்கிய நீராதாரமாக மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை விளங்கி வருகிறது.

    மாவட்டத்தில் முதலில் நிரம்பும் மிகச்சிறிய அணையான குண்டாறு அணை மூலமாக சுமார் 1,200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியதும் அணை நிரம்பிவிட்ட நிலையில் தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் காட்டாற்று வெள்ளத்தால் அணையின் பிரதான மதகு பகுதியில் ஷட்டரில் மோதிய மரத்தடியால் ஷட்டர் சேதம் அடைந்தது. இதனால் அணையில் இருந்து 6 அடி அளவுக்கு தண்ணீர் வீணாக வெளியேறி தற்போது 30 அடியில் நீடிக்கிறது. அதற்குமேல் அணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை இருந்து வருவதாக விவசாயிகள் புகார் கூறினர்.

    எனவே உடனடியாக அணை ஷட்டரில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தற்போது ஷட்டரில் அடைபட்ட மரத்தடியை தீவிர முயற்சிக்கு பின்னர் அதிகாரிகள் அகற்றினர். பின்னர் பழுதையும் சரி செய்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • குண்டாறு அணை கடந்த சில தினங்களுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
    • தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது குண்டாறு அணை. இந்த அணையானது கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டியுள்ளது. நடப்பா ண்டில் மட்டும் 2-வது முறை யாக நிரம்பி வழிந்து வருகிறது.

    இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குண்டாறு அணையில் நிரம்பி வழியும் தண்ணீரின் அளவு அதிகரித்து காணப்பட்டு வருகிறது. மேலும் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் அணையில் தண்ணீர் வழிந்தோடும் மேல்தளத்தில் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்து வருவதால் விபத்து ஏற்படும் நிலை காணப்படுகிறது.மேலும் அணைப்பகுதிக்குள் குதித்தும், 'டைவ்' அடித்தும் குளித்து வருகின்றனர். இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்ட ஒரு சில பேர் உயிரிழந்த சம்பவம் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ள நிலையில், மீண்டும் அது போன்ற சம்பவங்கள் நடை பெறாத வண்ணம் ஆபத்தான குளியலிடும் சுற்றுலா பணி களை தடுத்து நிறுத்த சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும், நிரம்பி வழியும் பகுதிக்கு யாரும் சொல்லாத வாறு தடுப்புகள் அமைத்து கண்காணிப்பதோடு அபராதம் விதித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 50 அடியை கடந்த நிலையில் இன்று 52.20 அடியாக உயர்ந்துள்ளது.
    • ராமநதி நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்து 64 அடியாக உயர்ந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்றும் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் 2 அணைகளுக்கும் வினாடிக்கு 1,895 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து வினாடிக்கு 1,354 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பாபநாசத்தில் 22 மில்லி மீட்டரும், சேர்வலாறில் 20 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    பாபநாசம் அணை நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 20 அடிக்கும் மேல் உயர்ந்துள்ள நிலையில் இன்று மேலும் 3 அடி உயர்ந்து 95.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையில் 107.15 அடி நீர் இருப்பு உள்ளது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 50 அடியை கடந்த நிலையில் இன்று 52.20 அடியாக உயர்ந்துள்ளது. கொடு முடியாறு அணை நீர்மட்டம் நேற்று 28.75 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 34 அடியை எட்டியுள்ளது.

    அதே நேரத்தில் 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் வெறும் 6.75 அடியாகவே உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து எஸ்டேட்டுகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. மாஞ்சோலையில் 41 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஊத்து எஸ்டேட்டில் 37 மில்லி மீட்டரும், நாலுமுக்கில் 33 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 25 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை குண்டாறு, அடவிநயினார் அணை பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக அந்த அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குண்டாறு அணை ஒரு வாரமாக நிரம்பி வழிகிறது.

    அடவிநயினார் நீர்மட்டம் நேற்று 113.75 அடியாக இருந்த நிலையில் இன்று 3 அடி அதிகரித்து 117 அடியை எட்டியுள்ளது.

    ராமநதி நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்து 64 அடியாக உயர்ந்துள்ளது. குண்டாறு அணையில் மட்டும் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கருப்பாநதியில் 45 அடியை எட்டியுள்ளது. கடனா அணை நீர்மட்டம் 59 அடியாக உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.

    • சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.85 அடியாகவும், மணிமுத்தாறு அணையில் 45.25 அடியாகவும் உள்ளது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    செங்கோட்டை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக மாலை நேரங்களில் பரவலாக பெய்த மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 69.55 அடியாக இருந்தது. இன்று மேலும் 1 அடி உயர்ந்து 70.90 அடியானது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 1,164 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.85 அடியாகவும், மணிமுத்தாறு அணையில் 45.25 அடியாகவும் உள்ளது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மழை இல்லை. மாஞ்சோலை வனப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாய பணிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வரும் குண்டாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

    36 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் சுமார் 1,200 ஏக்கர் பாசன பரப்பளவில் ஆண்டுக்கு முப்போக சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. குண்டாற்றை நம்பி சுமார் 950 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின்போதும் முதலில் முழு கொள்ளளவை எட்டும் அணையாக குண்டாறு அணை இருந்து வருகிறது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவகாலத்தின்போது ஒரு முறை அணை நிரம்பிய நிலையில் அதன்பின்னர் மழை பொய்த்து போனதால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இந்நிலையில் சில நாட்களாக பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 2-வது முறையாக நேற்று மாலை நிரம்பி வழிந்தது. இதனால் பிசான சாகுபடிக்கான நீர்வரத்து உறுதியான நிலையில் இந்த அணையை நம்பி உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனால் தஞ்சாவூர் குளம், செங்கோட்டை பகுதி குளங்கள், நல்லூர், பிரானூர், தென்கால்வாய், மெட்டு, மூன்று வாய்க்கால், பிரானூர், கொட்டாகுளம் பகுதி விவசாயிகள் அதிகளவில் பயனடைவார்கள். கடந்த ஜூலை மாதம் 7-ந்தேதி அணை நிரம்பியபோது வெளியேறிய உபரிநீர் கிட்டத்தட்ட 28 நாட்கள் வரை வழிந்தோடியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 22 மில்லி மீட்டரும், குலசேகரபட்டினத்தில் 8 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

    • குண்டாறு அணைக்கட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
    • அணையின் ஷட்டர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது.

    செங்கோட்டை:

    இயற்கை எழில் சூழ்ந்த தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அமைந்துள்ளது குண்டாறு நீர்த்தேக்கம். தென்மேற்கு, வடகிழக்கு மழையின் போது மாவட்டத்திலேயே முதன் முதலில் நிரம்புவது இந்த அணைதான். குண்டாறு அணைக்கட்டிற்கு நாள்தோறும் வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூங்கா, பச்சை பசேல் என்ற ரம்மியமான காட்சி, இயற்கை நெய்யருவி, 6-க்கும் மேற்பட்ட தனியார் அருவிகள் இப்பகுதியில் உள்ளதால் குண்டாறு அணைக்கட்டு பகுதியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் தற்போது படையெடுத்து வருகிறார்கள்.

    கடந்த சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் நேற்று சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் கடந்த 3 நாட்களளாக பொதுமக்களின் கூட்டத்தால் இப்பகுதி களைகட்டி காணப்பட்டது.

    இந்நிலையில் குண்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து உபரியாக வெளியேறும் பகுதியான அணைகளின் மதில் சுவர்களில் சில வாலிபர்கள் நீண்ட வரிசையில் உட்கார்ந்தும், அணைகளில் ஷட்டர்கள் திறக்க பயன்படுத்த நிறுவப்பட்டுள்ள தூண்கள் மேல் ஏறி டைவ் அடித்து குளித்து வருகின்றனர்.

    இந்த அணையின் ஷட்டர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ஆபத்தை உணராமல் வாலிபர் டைவ் அடிப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை தடுக்க துறையை சார்ந்த அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனனர்.இது தொடர்பாக சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

    தற்போது சீசனையொட்டி குற்றாலம், பழைய குற்றாலம், புலியருவி, ஐந்தருவிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் குண்டாறு நீர்த்தேக்கத்தைச் சுற்றி அதிகமான அருவிகள் உள்ளதாலும், கெடுபிடிகள் பெரிய அளவில் இல்லை. இங்கு அருவிகளில் நெரிசலின்றி குளிக்கவும், இங்கு ஓடும் ஆற்றில் நீராடவும் வசதியாக உள்ளது.

    பொதிகை மலையோரத்தில் ரம்மியமான சூழலில், வாகன இறைச்சலோ, போக்குவரத்து நெரிசலோ இல்லாமல் இப்பகுதி அமைந்திருப்பதால் குண்டாறு அணைக்கட்டு பகுதிக்கு வந்துள்ளோம். கடந்த சில நாட்களாக தொடர்ந்து இப்பகுதியில் மழைபெய்தது. இதனால் இங்குள்ள தனியார் அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதுடன் இப்பகுதி முழுவதும் தென்றலுடன் கூடிய ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    தற்போது இப்பகுதி ஊட்டியை போனறு காலநிலை நிலவுகிறது. இப்பகுதியில் போதிய பாதுகாப்பு வசதிகளை அரசு செய்து கொடுத்தால் சுற்றுலாப் பயணிகளை கூட்டம் மேலும் அதிகரித்து காணப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.




     


    • மேற்கு தொடர்ச்சி மலையில் தொடந்து பெய்துவரும் மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.
    • தென்மேற்கு பருவமழை தொடங்க காலதாமதம் ஏற்பட்ட நிலையில் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் குண்டாறு அணை நீரின்றி வறண்டு காணப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாய பணிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருவது குண்டாறு அணையாகும். ஒருங்கிணைந்திருந்த நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பருவமழையின்போது முதல் முதலில் நிரம்பும் அணை இந்த அணைதான்.

    மிகச்சிறிய அதாவது 36 அடி மட்டுமே கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் அப்பகுதியில் சுமார் 1,200 ஏக்கர் பாசன பரப்பளவில் முப்போக சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. குண்டாறு நீர்த்தேக்கத்தை நம்பி சுமார் 950 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நீரினால் தஞ்சாவூர் குளம், செங்கோட்டை பகுதி குளங்கள், நல்லூர், பிரானூர், தென்கால்வாய், மெட்டு, மூன்று வாய்க்கால், பிரானூர், கொட்டாகுளம் பகுதி விவசாயிகள் அதிகளவில் பயனடைவார்கள். கடந்த ஆண்டு இந்த அணை தென்மேற்கு பருவ காலத்தில் முதல் அணையாக நிரம்பி அதன் உபரிநீர் கிட்டத்தட்ட 122 நாட்கள் வரை வழிந்தோடியது.

    இதன்முலம் 11 குளங்கள் நிறைந்ததால் கார் சாகுபடி செழிப்பாக நடைபெற்றது. ஆனால் அதன் பிறகு மழையின் தாக்கம் குறைந்ததால் அணையில் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்க காலதாமதம் ஏற்பட்ட நிலையில் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் குண்டாறு அணை நீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனால் விவசாய பணிகள் தொடங்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது.

    இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடந்து பெய்துவரும் மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இன்று காலை குண்டாறு அணையின் நீர்மட்டம் 35 அடியை எட்டியது. இன்னும் அந்த அணை முழு கொள்ளவை எட்ட 1 அடி நீரே தேவை. தொடர்ந்து அணை பகுதியில் மழை பெய்வதால் இன்று மாலைக்குள் அணை நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×