search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டாறு அணைக்கட்டில் ஆபத்தை உணராமல் டைவ் அடிக்கும் வாலிபர்கள் - நடவடிக்கை எடுக்க சமூகஆர்வலர்கள் கோரிக்கை
    X

    ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள்.

    குண்டாறு அணைக்கட்டில் ஆபத்தை உணராமல் 'டைவ்' அடிக்கும் வாலிபர்கள் - நடவடிக்கை எடுக்க சமூகஆர்வலர்கள் கோரிக்கை

    • குண்டாறு அணைக்கட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
    • அணையின் ஷட்டர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது.

    செங்கோட்டை:

    இயற்கை எழில் சூழ்ந்த தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அமைந்துள்ளது குண்டாறு நீர்த்தேக்கம். தென்மேற்கு, வடகிழக்கு மழையின் போது மாவட்டத்திலேயே முதன் முதலில் நிரம்புவது இந்த அணைதான். குண்டாறு அணைக்கட்டிற்கு நாள்தோறும் வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூங்கா, பச்சை பசேல் என்ற ரம்மியமான காட்சி, இயற்கை நெய்யருவி, 6-க்கும் மேற்பட்ட தனியார் அருவிகள் இப்பகுதியில் உள்ளதால் குண்டாறு அணைக்கட்டு பகுதியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் தற்போது படையெடுத்து வருகிறார்கள்.

    கடந்த சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் நேற்று சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் கடந்த 3 நாட்களளாக பொதுமக்களின் கூட்டத்தால் இப்பகுதி களைகட்டி காணப்பட்டது.

    இந்நிலையில் குண்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து உபரியாக வெளியேறும் பகுதியான அணைகளின் மதில் சுவர்களில் சில வாலிபர்கள் நீண்ட வரிசையில் உட்கார்ந்தும், அணைகளில் ஷட்டர்கள் திறக்க பயன்படுத்த நிறுவப்பட்டுள்ள தூண்கள் மேல் ஏறி டைவ் அடித்து குளித்து வருகின்றனர்.

    இந்த அணையின் ஷட்டர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ஆபத்தை உணராமல் வாலிபர் டைவ் அடிப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை தடுக்க துறையை சார்ந்த அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனனர்.இது தொடர்பாக சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

    தற்போது சீசனையொட்டி குற்றாலம், பழைய குற்றாலம், புலியருவி, ஐந்தருவிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் குண்டாறு நீர்த்தேக்கத்தைச் சுற்றி அதிகமான அருவிகள் உள்ளதாலும், கெடுபிடிகள் பெரிய அளவில் இல்லை. இங்கு அருவிகளில் நெரிசலின்றி குளிக்கவும், இங்கு ஓடும் ஆற்றில் நீராடவும் வசதியாக உள்ளது.

    பொதிகை மலையோரத்தில் ரம்மியமான சூழலில், வாகன இறைச்சலோ, போக்குவரத்து நெரிசலோ இல்லாமல் இப்பகுதி அமைந்திருப்பதால் குண்டாறு அணைக்கட்டு பகுதிக்கு வந்துள்ளோம். கடந்த சில நாட்களாக தொடர்ந்து இப்பகுதியில் மழைபெய்தது. இதனால் இங்குள்ள தனியார் அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதுடன் இப்பகுதி முழுவதும் தென்றலுடன் கூடிய ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    தற்போது இப்பகுதி ஊட்டியை போனறு காலநிலை நிலவுகிறது. இப்பகுதியில் போதிய பாதுகாப்பு வசதிகளை அரசு செய்து கொடுத்தால் சுற்றுலாப் பயணிகளை கூட்டம் மேலும் அதிகரித்து காணப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.





    Next Story
    ×