search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிக்கெட் வாரியம்"

    • ஒப்பந்தத்தில் சர்பிராஸ்கான், துருவ் ஜூரல் ஆகியோரை சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
    • மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற ஒரு வீரர், மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்க வேண்டும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியம், கடந்த மாதம் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தை வெளியிட்டது. இதில் முன்னணி பேட்ஸ் மேன்களான அய்யர், இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர்.

    அவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடாத காரணத்தால் இருவரின் மத்திய ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் புதுப்பிக்கவில்லை.

    இந்த நிலையில் கிரிக்கெட் வாரிய மத்திய ஒப்பந்தத்தில் இளம் வீரர்களான சர்பிராஸ்கான், துருவ் ஜூரல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட கூட்டம் நேற்று நடந்தது. இதில் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அப்போது ஒப்பந்தத்தில் சர்பிராஸ்கான், துருவ் ஜூரல் ஆகியோரை சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற ஒரு வீரர், மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்க வேண்டும். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான சர்பிராஸ்கான், துருவ் ஜூரல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடினர்.

    இதில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இதையடுத்து இருவரும் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்கள் ரூ.1 கோடிக்கான (கிரேடு-சி) பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    இதற்கிடையே உள்ளூர் கிரிக்கெட்டை மேம்படுத்த ஆலோசனைகளை வழங்க இந்திய ஆண்கள் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் வி.வி.எஸ்.லட்சுமணன், தேர்வுக்குழு தலைவர் அஜீத் அகர்கர் ஆகியோரிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

    இதற்காக அவர்கள் 3 பேர் அடங்கிய குழுவை கிரிக்கெட் வாரியம் அமைத்துள்ளது.

    இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, ஆண்கள் அணிகளின் உள்ளூர் போட்டியை நடத்தும் போது நிறைய சிக்கல்கள் எழுந்தன. வட இந்தியாவில், குறிப்பாக ரஞ்சி டிராபியின் போது, டிசம்பர், ஜனவரில் மோசமான வானிலை காரணமாக பல போட்டிகள் பாதிக்கப்பட்டன. இதனால் ஆண்கள் உள்நாட்டு கிரிக்கெட்டை மேம்படுத்த டிராவிட், லட்சுமனண் அகர்கர் ஆகியோர் தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

    • 2-வது கட்ட ஐ.பி.எல். அட்டவணையை கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது.
    • பாராளுமன்ற தேர்தல் காரணமாக 2009-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி தென் ஆப்பிரிக்காவிலும், 2014-ல் முதல் கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடத்தப்பட்டது.

    புதுடெல்லி:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான முதல்கட்ட அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த மாதம் வெளியிட்டது.

    வருகிற 22-ந் தேதி முதல் ஏப்ரல் 7-ந் தேதி வரை 17 நாட்களுக்கான 21 போட்டிகள் விவரம் வெளியாகி இருந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 22-ந் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    ஏப்ரல் 7-ந் தேதி லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முதல் கட்ட அட்டவணையை மட்டுமே வெளியிடப்பட்டு இருந்தது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படுகிறது. இதனால் 2-வது கட்ட ஐ.பி.எல். அட்டவணையை கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஐ.பி.எல். 2-வது கட்ட போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு மாற்ற கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கிரிக்கெட் வாரியத்தின் சில நிர்வாகிகள் துபாய் சென்றுள்ளனர். 2-வது கட்ட போட்டிகளை இந்தியாவில் இருந்து துபாய்க்கு மாற்றலாமா? என்பது குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக 2009-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி தென் ஆப்பிரிக்காவிலும், 2014-ல் முதல் கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடத்தப்பட்டது. 2020-ம் ஆண்டு கொரோனா காரணமாக ஐ.பி.எல். முழுமையாகவும் 2021-ல் 2-வது கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடைபெற்றது.

    • ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடாத போதிலும் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளார்.
    • ஹர்திக் பாண்ட்யா உள்ளூர் வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாட வேண்டும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியம், வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது.

    இதில் முன்னணி பேட்ஸ் மேன்களான ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன் ஆகியோர் நீக்கப்பட்டனர். ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட இருவரையும் கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது. ஆனால் அவர்கள் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடவில்லை. இதையடுத்து இருவரையும் வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது.

    இதற்கிடையே ஒரு ஆண்டாக உள்ளூர் போட்டிகளில் விளையாட ஹர்திக் பாண்ட்யா, 'ஏ' பிரிவு ஒப்பந்தத்தில் இருப்பது குறித்து முன்னாள் வீரர்கள் சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

    தனது உடல் தகுதி, டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஒத்துழைக்காது என்று ஹர்திக் பாண்ட்யா கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார்.

    இதை கிரிக்கெட் வாரியம் ஏற்று கொண்டதால், ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடாத போதிலும் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு கிரிக்கெட் வாரியம் நிபந்தனை விதித்துள்ளது.

    இந்தியாவுக்காக தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென்றால் ஹர்திக் பாண்ட்யா உள்ளூர் தொடர்களான விஜய் ஹசாரே மற்றும் சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர்களில் விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    நாங்கள் ஹர்திக் பாண்ட்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதில் உள்ளூர் வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுமாறு கூறியுள்ளோம்.

    தற்போதைய நிலைமையில் கிரிக்கெட் வாரிய மருத்துவக் குழுவின் பரிந்துரைப்படி அவரால் ரஞ்சிக் கோப்பை போன்ற டெஸ்ட் தொடரில் விளையாட முடியாது. ஆனால் இந்தியாவுக்காக விளையாடாத சமயத்தில் ஹர்த்திக் பாண்ட்யா உள்ளூர் வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாட வேண்டும். அவர் அதில் விளையாடாவிட்டால் ஒப்பந்தத்தை இழக்க நேரிடும் என்றார்.

    உள்ளூர் போட்டிகளில் விளையாட ஹர்திக் பாண்ட்யா உறுதி அளித்த பிறகே அவர் ஒப்பந்தத்தில் இடம் பெற்றதாக கூறப்படுகிறது.

    அதேபோல் ரோகித் சர்மா, விராட் கோலியும் முதல்தர கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார்.

    ×