search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்ரித்பால் சிங்"

    • திடீரென அவர் இறந்தது காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • மருத்துவ பரிசோதனை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    லண்டன்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவர் அம்ரித் பால் சிங். வாரீஸ் பஞ்சாப் தே என்ற அமைப்பின் தலைவரான இவர் பஞ்சாப்பினை தனி நாடாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்.

    சமீபத்தில் இவர் தனது ஆதரவாளர்களுடன் கையில் ஆயுதங்கள் ஏந்தி சென்று போலீஸ் நிலையத்தை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த அம்ரித் பால் சிங்கை போலீசார் தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவர் 36 நாட்கள் தப்புவதற்கு உதவியாக இருந்தவர் அவதார்சிங் கண்டா.

    அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளியான இவர் இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்டு செயல்படக்கூடிய காலிஸ் தான் விடுதலை படையின் தலைவராக இருந்து வந்தார். இங்கிலாந்தில் வசித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது தூதரகத்தில் பறந்து கொண்டிருந்த இந்திய தேசிய கொடியை கீழே இறக்கி அவமரியாதை செய்ததோடு காலிஸ்தான் கொடியையும் ஏற்ற முயன்றனர்.

    இந்த போராட்டத்தில் அவதார் சிங் கண்டா முக்கிய பங்காற்றினார். இவர் சமீப காலமாக ரத்த புற்று நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அவர் லண்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவதார் சிங் கண்டா நேற்று இறந்தார்.

    திடீரென அவர் இறந்தது காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் அதனால் அவரது மருத்துவ பரிசோதனை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அவதார் சிங் கண்டா சாவில் மர்மம் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    இறந்த அவதார்சிங் கண்டா வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் சீக்கிய இளைஞர்களை மூளைச் சலவை செய்து வெடிகுண்டுகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பயிற்சி அளித்து வந்துள்ளார். காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர்களுள் மிக முக்கியமானதாக இவர் விளங்கி வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு கல்வி விசாவில் இங்கிலாந்து சென்ற அவர் பின்னர் அங்கேயே தங்கிவிட்டார்.

    • 37 நாட்களுக்கு பிறகு தலைமறைவாக இருந்த அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
    • ஜெயிலில் உள்ளேயும் வெளியேயும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    கவுகாத்தி:

    காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தலைவர் அம்ரித்பால் சிங் நேற்று பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பின் தலைவரான அம்ரித்பால் சிங் மீது பல வழக்குகள் இருந்தது. கடந்த மாதம் 18-ந்தேதியில் இருந்து அவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அவருக்கு நெருக்கமானவர்கள் 8 பேர் கைதாகி இருந்த நிலையில் அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.

    மாறுவேடத்தில் சுற்றி திரிந்த அவர் போலீசுக்கு கடும் சவாலாக திகழ்ந்தார்.

    37 நாட்களுக்கு பிறகு தலைமறைவாக இருந்த அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    அம்ரித்பால் சிங் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர் சிறப்பு விமானம் மூலம் பதிண்டாவில் இருந்து அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் திப்ரூசர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    விமான நிலையத்தில் இருந்து மத்திய சிறை வரையிலான 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு சிறையை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அவருக்கு நெருக்கமான 9 பேர் இதே ஜெயிலில்தான் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் அம்ரித்பால் சிங் அடைக்கப்பட்டுள்ள திப்ரூதர் சிறையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளி நபர்கள் யாரும் நுழைந்து விடாமல் இருக்கும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஜெயிலில் உள்ளேயும் வெளியேயும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    பல உயர்மட்ட விளக்குகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சிறை கண்காணிப்பில் உள்ளது.

    திப்ரூதர் ஜெயில் அசாமில் உள்ள 2-வது பழமை வாய்ந்த ஜெயிலாகும். 1857-ம் ஆண்டு இந்த சிறைச்சாலை கட்டப்பட்டது.

    • அம்ரித்பால் சிங் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    • நாங்கள் எந்த அப்பாவி மனிதரையும் தொல்லைப்படுத்த மாட்டோம்.

    சண்டிகார் :

    பிந்தரன்வாலேவுக்கு பிறகு பஞ்சாபில் மீண்டும் காலிஸ்தான் பிரிவினைவாத கொள்கையை முன்னெடுத்தவர் அம்ரித்பால் சிங். நேற்று அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    இதன் மூலம் கடந்த ஒரு மாத காலத்துக்கு மேலாக நடந்து வந்த போலீசாரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது.

    இவர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

    35 நாட்களுக்கு பிறகு அம்ரித்பால் சிங் இன்று (நேற்று) கைது செய்யப்பட்டு விட்டார்.

    அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க முயற்சித்து, நாட்டின் சட்டத்தை மீறியவர், சட்டப்படியான நடவடிக்கையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

    நாங்கள் எந்த அப்பாவி மனிதரையும் தொல்லைப்படுத்த மாட்டோம். நாங்கள் பழிவாங்கும் அரசியல் செய்யவும் இல்லை.

    கடந்த 35 நாட்களாக மாநிலத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கடைப்பிடித்து வந்ததற்காக பஞ்சாபின் 3½ கோடி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அம்ரித்பால் சிங்கின் கடந்த காலம் பற்றிய முக்கிய தகவல்கள்:-

    அம்ரித்பால் சிங்கின் முழுப்பெயர் அம்ரித்பால் சிங் சந்து ஆகும். இவர் 1993-ம் ஆண்டு ஜனவரி 17-ந் தேதி பிறந்தவர்.

    அமிர்தசரஸ் மாவட்டத்தில் வளர்ந்தவர். இவர், தனது பெற்றோருக்கு 3-வது மகன் ஆவார். அவரது குடும்பம், சீக்கிய மதத்தில் தீவிரமான பற்று கொண்டதாகும்.

    10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, மெக்கானிக்கல் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பில் சேர்ந்து, படிப்பை பாதியில் நிறுத்தியவர். 2012-ல் துபாய்க்கு சென்று தனது குடும்பத்தாரின் போக்குவரத்து தொழிலில் இணைந்தார்.

    10 ஆண்டுகளுக்கு பின்னர் நாடு திரும்பியவர் தன்னை மத பிரசாரகராக அறிவித்துக்கொண்டு, பிரசாரம் செய்தார்.

    பிந்தரன்வாலேயின் ஆதரவாளராக தன்னை பிரகடனம் செய்ததோடு மட்டுமின்றி, இரண்டாம் பிந்தரன்வாலே என்று சொல்லக்கூடிய வகையில் விசுவரூபம் எடுத்து காலிஸ்தான் பிரிவினைவாத கொள்கையை கையில் எடுத்தார்.

    அதன் விளைவுதான் இப்போது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிற அளவுக்கு அவரைக் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது.

    • மோகா மாவட்டத்தில் உள்ள ரோடே கிராமத்தில் அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.
    • அம்ரித்பால் சிங் கைதை தொடர்ந்து எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை சில சீக்கிய அமைப்புகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன.

    சமீப காலமாக இந்த காலிஸ்தான் கோரிக்கையை 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பின் தலைவர் அம்ரித் பால்சிங் தீவிரமாக முன்னெடுத்து வந்தார். வெளிநாட்டில் உள்ள சில சீக்கியர்கள் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர்.

    கடந்த மாதம் ரூப்கர் மாவட்டம் சாம்கவூர் சாகிப் என்ற பகுதியை சேர்ந்த பரீந்தர்சிங் என்பவரை கடத்தி சென்று தாக்கியதாக அம்ரித்பால் சிங் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரில் ஒருவரான லவ்பிரீத் சிங்கை போலீசார் கைது செய்து காவலில் வைத்து இருந்தனர். இவர் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளி ஆவான்.

    அவரை மீட்க அம்ரித்பால் சிங்கும், அவரது ஆதரவாளர்களும் அஜ்னாலா போலீஸ் நிலையத்துக்குள் பயங்கர ஆயுதங்கள், நவீனரக துப்பாக்கிகளுடன் தடையை மீறி தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர்.

    இந்த சம்பவத்தில் அவர்களை தடுக்க முற்பட்ட போலீஸ் அதிகாரிகள் உள்பட 6 போலீசார் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து லவ்பிரீத் சிங் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு விவகாரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.

    போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பஞ்சாப் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    சமூக நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துதல், கொலை முயற்சி, போலீஸ் அதிகாரிகள் மீது தாக்குதல், அரசு ஊழியர்களின் கடமையை நிறைவேற்றுவதில் இடையூறு ஏற்படுத்துதல் போன்ற பல கிரிமினல் வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன.

    கடந்த மாதம் 18-ந்தேதி அம்ரித்பால் சிங் கையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்ய பஞ்சாப் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அவரது ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து முன்எச்சரிக்கையாக இணையதள சேவை முடக்கப்பட்டது.

    இந்த தேடுதல் வேட்டையின் போது அம்ரித்பால் சிங் தப்பி ஓடினார். அவர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது தெரிய வந்தது.

    போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையின் காரணமாக அம்ரித்பால் சிங் மாறுவேடங்களில் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிக்க பஞ்சாப் மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    நேபாளத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்றும் அவரை பிடிக்கும் வேலையில் ஈடுபட்டனர். ஆனால் அவர் தொடர்ந்து மாறுவேடங்களில் தலைமறைவாக சுற்றித்திரிந்தார். அவர் மாறுவேடத்தில் செல்லும் வீடியோக்கள் வெளியாகி இருந்தன.

    அவரது மனைவி கிரண் சிங் கவுர் லண்டன் தப்பி செல்ல முயன்றபோது கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

    இந்த நிலையில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் இன்று கைது செய்யப்பட்டார். 37 நாட்களுக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்ரித் பால் சிங் பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டம் ரோடே கிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். அங்கிருந்து அவரால் தப்பி ஓட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து அம்ரித்பால் சிங்கை போலீசார் கைது செய்தனர். காலை 6.45 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டார்.

    அம்ரித்பால் சிங்கின் உதவியாளர்கள் 8 பேர் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு அசாம் மாநிலம் திப்ருகாரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    அம்ரித்பால் சிங் மீதும் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகி இருந்தது. கைது செய்யப்பட்டுள்ள அவர் திப்ருகார் கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

    இதுதொடர்பாக பஞ்சாப் மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது:-

    மோகா மாவட்டத்தில் உள்ள ரோடே கிராமத்தில் அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர் அசாம் மாநிலம் திப்ருகார் கொண்டு செல்லப்பட்டு அங்கு ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.

    பஞ்சாப் மாநில மக்கள் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை காக்க வேண்டும். போலியான செய்திகளை பகிர வேண்டாம். எப்போதுமே சரிபார்த்து பகிரவும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    அம்ரித்பால் சிங் கைதை தொடர்ந்து எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • அம்ரித்பால் சிங்கை தப்பியோடிய குற்றவாளியாக போலீசார் அறிவித்துள்ளனர்.
    • அம்ரித்பால் சிங்கின் முக்கிய கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.

    சண்டிகர்:

    பஞ்சாப்பில் வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் இருந்து வருகிறார். இவரது நெருங்கிய கூட்டாளியான லவ்பிரீத் சிங்கை வழக்கு ஒன்றில் போலீசார் கைது செய்தனர். அவரை மீட்க அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் பயங்கர ஆயுதங்கள், நவீன ரக துப்பாக்கிகள் ஆகியவற்றை ஏந்திய ஆதரவாளர்களுடன் தடையை மீறி, தடுப்பான்களை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அவர்களை தடுக்க முற்பட்ட போலீஸ் சூப்பிரெண்டு அளவிலான காவல் அதிகாரிகள் உள்பட 6 போலீசார் காயமடைந்தனர். இதனால், பஞ்சாப்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் எழுந்துள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.

    அம்ரித்பால் சிங்கை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர். ஆனாலும் அவர் போலீசில் சிக்காததால், அவர் தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரோடு தொடர்புடைய நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து அவரை தேடும் பணி நடந்து வருகிறது.

    இதற்கிடையே, அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளரான பாப்பல்பிரீத் சிங், ஹோஷியார்பூரில் இருந்து சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு மார்ச் 18-ம் தேதி போலீசாரிடம் இருந்து அம்ரித்பால் தப்பியதில் இருந்து பாப்பல்பிரீத் அவருடன் இருந்துள்ளார்.

    இந்நிலையில், அம்ரித்பால் சிங்கின் மற்றொரு முக்கிய கூட்டாளியான ஜோகா சிங் என்பவரை சர்ஹிந்த் பகுதியில் வைத்து பஞ்சாப் போலீசார் இன்று கைது செய்தனர்.

    இதனை டி.ஐ.ஜி. எல்லை சரக நரீந்தர் பார்கவ் உறுதி செய்துள்ளார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன், அம்ரித்பால் சிங்குடன் ஜோகா சிங் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் போலீசார் வெளியிட்டு தேடி வந்தனர்.

    கடந்த மார்ச் 18-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை அம்ரித்பாலுடன் ஜோகா சிங் உதவியாக இருந்து வந்துள்ளார் என போலீசார் கூறுகின்றனர். அம்ரித்பாலை கடந்த மார்ச் 27-ம் தேதி பஞ்சாப்புக்கு திரும்ப கொண்டு வந்துவிட உதவியதுடன், நேரடி தொடர்பிலும் இருந்து வந்துள்ளார். அம்ரித்பாலுக்கு தேவையான தங்குமிடம் மற்றும் வாகன வசதிகளையும் அவர் செய்து கொடுத்துள்ளார் என பார்கவ் கூறியுள்ளார்.

    • அம்ரித்பால் சிங் போலீசாரின் கைது நடவடிக்கைளுக்கு பயந்து தலைமறைவாக உள்ளார்.
    • அம்ரித்பால் சிங்கின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    சண்டிகார் :

    பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பிரிவினைவாத தலைவரான அம்ரித்பால் சிங் போலீசாரின் கைது நடவடிக்கைளுக்கு பயந்து தலைமறைவாக உள்ளார். அவர் நேபாளத்தில் பதுங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.

    இந்த நிலையில் தனது ஆதரவாளர்களை கைது செய்துள்ள பஞ்சாப் போலீசாரை கண்டித்து வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டு உள்ளார். அதில் மாநில அரசுக்கு தன்னை கைது செய்யும் நோக்கம் இருந்தால், போலீசார் தனது வீட்டுக்கு வரட்டும் என கூறியுள்ளார்.

    அந்த வீடியோ பதிவில் அவர் மேலும் கூறுகையில், 'என்னை கைது செய்வதற்கு அனுப்பி வைக்கப்பட்ட லட்சக்கணக்கான போலீசாரிடம் இருந்து கடவுள்தான் எங்களை காப்பாற்றினார்' என தெரிவித்து உள்ளார். அம்ரித்பால் சிங்கின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பஞ்சாப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • கனடாவில் இந்திய தூதரக வளாகத்திற்கு வெளியே உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பியது.

    புதுடெல்லி:

    பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் தேடி வருகிறார்கள். அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து, அமெரிக்கா, கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்திய தூதரகங்கள் முன்பு போராட்டம் நடந்தது.

    இந்த நிலையில் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்தி வருவது போராட்டம் தொடர்பாக இந்தியாவுக்கான கனடா தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது.

    கனடா தூதரை நேரில் அழைத்து கடும் அதிருப்தியை மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளிப்படுத்தியது. மேலும் கனடாவில் இந்திய தூதரக வளாகத்திற்கு வெளியே உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பியது.

    இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறும்போது, எங்கள் தூதர்களின் பாதுகாப்பையும், தூதரக வளாகத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கனடா அரசு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர்கள் வழக்கமான தூதரக செயல்பாடுகளை நிறைவேற்ற முடியும்.

    இந்திய தூதரகத்தின் பாதுகாப்பை மீறும் வகையில் போலீஸ் முன்னிலையில் இத்தகைய போராட்டங்கள் எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து இந்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது என்றார்.

    • அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
    • தலைமறைவான அம்ரித்பால் சிங் அரியானாவுக்கு தப்பி சென்றதாக முதலில் தகவல் வெளியானது.

    ஜம்மு:

    பஞ்சாப்பில் காலிஸ்தான் தனி நாடு என்ற கோஷத்துடன் செயல்படும் 'பஞ்சாப் தி வாரிஸ்' அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    கடந்த 9 நாட்களாக தேடுதல் வேட்டை நீடித்து வரும் நிலையில் அம்ரித் பால்சிங்கின் கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்கள் என இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தலைமறைவான அம்ரித்பால் சிங் அரியானாவுக்கு தப்பி சென்றதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் அவர் நேபாளம் தப்பி செல்ல முயல்வதாக உளவுத்துறை எச்சரித்ததை தொடர்ந்து நேபாள எல்லைகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் அவர் டெல்லியில் துறவி வேடத்தில் சாதாரண உடையில் நடந்து செல்வது போன்ற காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தன. அதன் அடிப்படையில் டெல்லியிலும் பஞ்சாப் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதற்கிடையே அம்ரித்பால் சிங்குடன் தொடர்பு வைத்திருந்ததாக ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆர்.எஸ்.புரா பகுதியை சேர்ந்த அம்ரிக்சிங், அவரது மனைவி பரம்சித்கவுர் ஆகிய 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    இவர்கள் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளரான பப்பில்பிரீத் சிங்குடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து இருவரும் கைது செய்யப் பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கைதான தம்பதியினரின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் பஞ்சாப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையே அம்ரித்பால் சிங்குடன் பல வீடியோக்களில் காணப்பட்ட தல்விந்தர்சிங் மற்றும் வீரேந்தர்சிங் ஆகிய 2 மெய்க்காப்பாளர்களின் ஆயுத உரிமங்கள் ஜம்மு காஷ்மீரில் உள்ள கித்துவார் மற்றும் ராம்பன் மாவட்டங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து அந்த இரண்டு உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • அரியானா, உத்தரகாண்ட் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    • அம்ரித்பால் சிங் காலிஸ்தானை உருவாக்க பல நாடுகளுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

    சண்டிகர்:

    பஞ்சாபில் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையுடன் செயல்படும் பஞ்சாப் தி வாரிஸ் அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    சினிமா பாணியில் காரில் இருந்து மோட்டார் சைக்கிளுக்கு மாறி தப்பிய அம்ரித்பால் சிங் மாறுவேடத்தில் சாதாரண உடைகளில் வலம் வரலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை தேடும் பணி இன்றுடன் 8-வது நாளாக தொடர்கிறது.

    அவரை தேடி அரியானா, உத்தரகாண்ட் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியில் அந்தந்த மாநிலங்களின் போலீசாரும், பஞ்சாப் போலீசாருடன் இணைந்து செயல்படுகின்றனர்.

    இந்நிலையில் அம்ரித்பால் சிங்கின் கூட்டாளியான அமித்சிங் என்பவரை டெல்லியின் திலக்விகார் பகுதியில் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் இன்சூரன்ஸ் ஏஜென்டாக செயல்பட்டு வந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து அம்ரித்பால் சிங்கும் டெல்லியில் பதுங்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் சாது வேடத்தில் டெல்லியில் பதுங்கி இருக்கலாம் எனவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. மேலும் அவர் டெல்லியில் ஒரு பஸ் நிலைய பகுதியில் இருந்து பஸ்சில் ஏறியதாகவும் கூறப்படுவதை அடுத்து டெல்லியில் பல்வேறு இடங்களிலும் போலீஸ் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது.

    இதற்கிடையே தலைமறைவாக உள்ள அம்ரித்பால் சிங் காலிஸ்தான் கரன்சியை வடிவமைத்து அச்சிட்டது தெரிய வந்துள்ளதாக போலீஸ் அதிகாரி அம்னித் கவுந்தல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அம்ரித் பால்சிங் காலிஸ்தானுக்கான கொடியை வடிவமைத்துள்ளார்.

    அமெரிக்க டாலரை போன்று காலிஸ்தான் கரன்சியை வடிவமைத்து அச்சிட்டுள்ளார். அது டாலரில் இருந்து நகல் எடுக்கப்பட்ட கரன்சி போல இருந்தது. அதில் காலிஸ்தானின் வரைபடமும் அச்சிடப்பட்டிருந்தது.

    மேலும் ஆனந்த்பூர் கல்சா படை (ஏ.கே.எப்.) போன்று அம்ரித் பால்சிங் தனக்கென ஒரு புலிப்படையையும் உருவாக்கி கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. அந்த படையின் உறுப்பினர்களுக்கு தனித்தனி எண்கள் வழங்கப்படுவது போன்று பெல்ட் பெயரில் ஏ.கே.எப். எண்கள் வழங்கப்பட்டன. அந்த படையின் உறுப்பினர்கள் கைகளில் ஏ.கே.எப். பச்சை குத்தி இருந்தனர்.

    அம்ரித் பால்சிங் காலிஸ்தானை உருவாக்க பல நாடுகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். அவருக்கு ஐ.எஸ்.ஐ. உதவி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது என்றார்.

    • அம்ரித்பால்சிங் பிரிவினைவாத தலைவர் மட்டுமல்லாது ஒரு மன்மதராசாவாகவும் வலம் வந்துள்ள விவரம் இப்போது தெரியவந்துள்ளது.
    • இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவனை ஏராளமான பெண்களும் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

    பஞ்சாப்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவன் அம்ரித்பால் சிங் (வயது30). இவன் காலிஸ்தான் ஆதரவு அமைப்பான வாரிஸ் பஞ்சாப் டி என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறான்.

    தன்னை ஒரு சீக்கிய மதகுரு என அறிவித்துக் கொண்ட அம்ரிபால் சிங் பஞ்சாப்பை பிரித்து காலிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்க வேண்டும் என கோரி வருகிறான்.

    சமீபத்தில் போலீஸ் நிலையத்தில் இவனும், ஆதரவாளர்களும் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் நுழைந்து போராட்டம் நடத்தியது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    மேலும் அம்ரித்பால் சிங் தனி நாடு கேட்டு ஆதரவாளர்களுடன் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் நிலைமை கைமீறி போனதை உணர்ந்த பஞ்சாப் போலீசார் அவனை கைது செய்ய முடிவு செய்தனர். அவனை கடந்த சனிக்கிழமை முதல் தேடி வருகின்றனர். அவனது கூட்டாளிகள் 78 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

    ஆனால் அம்ரித்பால் சிங் போலீசாரின் பிடியில் சிக்காமல் தப்பி ஓடிவிட்டான். 5 நாட்களாக அவனை தேடி கண்டு பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். அவன் இதுவரை எங்கு இருக்கிறான் என தெரியவில்லை.

    இந்த சூழ்நிலையில் அவனை பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. பல்வேறு தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய அவன் இந்தியா வருவதற்கு முன்பு பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெற்றான் என்ற தகவலை உளவுத் துறையினர் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தான் அவனை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

    அம்ரித்பால்சிங் பிரிவினைவாத தலைவர் மட்டுமல்லாது ஒரு மன்மதராசாவாகவும் வலம் வந்துள்ள விவரம் இப்போது தெரியவந்துள்ளது. இவன் சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவன். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவனை ஏராளமான பெண்களும் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

    இதில் திருமணம் ஆன பெண்கள் மட்டுமல்லாமல் கல்யாணம் ஆகாத பெண்களிடமும் அம்ரித்பால் சிங் காதல் ரசம் சொட்ட சொட்ட மெசேஜ் அனுப்பி வந்துள்ளார்.

    இதில் பல பெண்கள் இவனது காதல் வலையில் சிக்கி உள்ளனர். முதலில் அந்த பெண்களுடன் வீடியோகாலில் சாதாரணமாக பேசும் அவன் பின்னர் அவர்களை மயக்கி ஆபாச படத்தையும் வாங்கி உள்ளான்.

    சில பெண்களுடன் அவன் நெருக்கமாக இருக்கும் படங்களும், சிலருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படங்களும் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

    பல பெண்களிடம் அவன் நீண்டநேரம் வீடியோ காலில் பேசி உள்ளான். சிலருக்கு அவன் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்தான். ஒரு பெண்ணுக்கு அவன் நமது திருமணம் உறுதி ஆனதா? துபாயில் நமக்கு தேனிலவு நடக்கும் என்று மெசேஜ் அனுப்பி இருந்தான். அதற்கு அந்த பெண்ணும் சிரிப்பது போன்ற உருவ படத்தை பதிவிட்டாள்.

    இப்படி தன்னிடம் மயங்கிய பெண்களின் ஆபாச படங்களும் அவனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது. அந்த புகைப் படங்களை வெளியிடுவேன் என மிரட்டி அவன் பெண்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்திய தூதரகம் தாக்கப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
    • பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர்.

    வாஷிங்டன்:

    இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரிவினைவாத தலைவரான அம்ரித்பால் சிங் கடந்த இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், வாகனத்தில் துரத்திச் சென்றபோது அவர் தப்பிவிட்டதாகவும், அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். தூதரகத்தின் கதவு, ஜன்னல்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். அம்ரித்பாலை விடுதலை செய்ய வேண்டும் என கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் பெயிண்டால் எழுதி உள்ளனர். தூதரகத்தை ஒரு கும்பல் தாக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில், இந்திய தூதரகம் தாக்கப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்திய துணைத் தூதரகம் மீதான தாக்குதலையும், அமெரிக்காவிற்குள் உள்ள தூதரக அலுவலகங்கள் மீதான தாக்குதலையும் அமெரிக்கா கண்டிக்கிறது. தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரிகளை பாதுகாப்போம் என உறுதியளிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். ஒரு சிலர் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

    • ஆஸ்திரேலிய பாராளுமன்றம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
    • அம்ரித்பால் சிங்கை என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல திட்டமிட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் குற்றம்சாட்டி உள்ளார்.

    புதுடெல்லி:

    காலிஸ்தான் ஆதவாளர்கள் சமீப காலமாக வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். வெளிநாடுகளில் உள்ள இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இப்போது காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கையை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    சமீபத்தில் பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். ஒரு சிலர் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

    இந்நிலையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் மீதும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். தூதரகத்தின் கதவு, ஜன்னல்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். அம்ரித்பாலை விடுதலை செய்ய வேண்டும் என கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் பெயிண்டால் எழுதி உள்ளனர். தூதரகத்தை ஒரு கும்பல் தாக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக ஆஸ்திரேலிய பாராளுமன்றம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

    இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரிவினைவாத தலைவரான அம்ரித்பால் சிங் கடந்த இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், வாகனத்தில் துரத்தி சென்றபோது அவர் தப்பிவிட்டதாகவும், அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் பின்னர் தெரிவிக்கப்பட்டது. அவர் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தப்பி ஓடிய அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் கைது செய்துவிட்டதாகவும், அவரை என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல திட்டமிட்டிருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் இமான் சிங் காரா குற்றம்சாட்டி உள்ளார். அம்ரிம் பால் சிங்கின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    ×