search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vembakottai"

    • முருகன், வித்தியாசமான பெயரில் குடிகொண்டு இருக்கிறார்.
    • இறைவன் வாழை மர வடிலில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    முருகனை கந்தன், கடம்பன், வேலன், வேலாயுதம் என பல்வேறு பெயர்களால் அழைப்பர். ஆனால் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன் குறிச்சியில் உள்ள முருகன், வித்தியாசமான பெயரில் குடிகொண்டு இருக்கிறார். இங்கே 'வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி' என்ற பெயரில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இங்குள்ள இறைவன் வாழை மர வடிலில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பதும், உலக மக்கள் நன்மை பெற வேண்டி தினமும் இங்கு யாகம் நடைபெறுவதும் இத்தலத்திற்கு மேலும் சிறப்பை அளிக்கிறது.

    தல வரலாறு

    150 ஆண்டுகளுக்கு முன்பு துலுக்கன் குறிச்சி கிராமத்தில் தேரியப்பர்-வீரம் மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர். வேலாயுதம். இவர் தினமும் தனது அன்றாட விவசாயப் பணிகளைத் தொடங்கும் முன், அதிகாலையில் வெம்பக்கோட்டை வைப்பாற்றில் குளித்துவிட்டு வனமூர்த்தி லிங்கபுரம் விநாயகர் கோவிலில் உள்ள முருகனை தரிசனம் செய்வது வழக்கம். அத்துடன் இவர் மூலிகைகளைக் கொண்டு வைத்தியமும் செய்து வந்தார். அருள்வாக்கும் சொல்லி வந்தார்.

    ஒரு நாள் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, முருகனை தரிசிக்க சென்றபோது, வைப்பாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றை கடக்க முடியாமலும், இறைவனை தரிசிக்க முடியாமலும் வருத்தத்துடன் இல்லத்திற்கு வந்து விட்டார். முருகனை தரிசிக்க முடியாத மனவேதனையில் எந்த பணியும் செய்யாமல் வீட்டில் இருந்தார். முருகனின் திருநாமத்தை கூறியபடி கண் அயர்ந்தார்.

    அப்போது கனவில் இறைவன் தோன்றி. ''என்னைக் காண நீ வெகுதூரம் வர வேண்டாம். நானே உன்னைத் தேடி உன் இருப்பிடம் வந்துவிட்டேன். நீ ஆசையாக பராமரித்து வந்த வாழை மர தோட்டத்தில். ஒரே ஒரு வாழை மரத்தில் மட்டும் குலை தள்ளி இருக்கும். அதில் தான் நான் குடிகொண்டு உள்ளேன்" எனக் கூறி விட்டு மறைந்தார்.

    மறுநாள் அதிகாலையில் வேலாயுதம் நீராடி விட்டு தன்னுடைய தோட்டத்தை நோக்கிச்சென்றார். அங்கே இறைவன் கனவில் சொன்னபடியே ஒரு வாழை மரம் மட்டும் குலை தள்ளி இருந்தது. அன்று முதல் தினமும் அதிகாலை நீராடி விட்டு முருகன் குடிகொண்டிருக்கும் வாழை மரத்திற்கு பூஜைகள் செய்து வந்தார். இந்த செய்தி அக்கம்பக்கம் முழுவதும் பரவியது. இதையடுத்து பொதுமக் களும் அந்த வாழை மரத்தை வழிபட்டு வந்தனர்.

    நாட்கள் பல சென்றன. ஒரு நாள் செவல்பட்டி ஜமீன்தாரின் பணியாட்கள் வாழைத்தோட்டம் நோக்கி வந்தனர். அவர்கள் "அரண்மனையின் பிரதான கணக்குப் பிள்ளையாக இருப்பவரின் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ளது. மணப்பந்தலில் வைக்க குலை தள்ளிய வாழை வேண்டும். வேறு எங்கும் வாழை கிடைக்கவில்லை. ஆதலால் ஜமீன்தார் தங்களிடம் உள்ள வாழை மரத்தை வெட்டி எடுத்து வரும்படி உத்தர விட்டுள்ளார். எனவே இந்த குலை வாழையை தர வேண்டும்" என கேட்டனர்.

    அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வேலாயுதம். இது சாதாரண வாழை அல்ல. இது முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில். அதனால் தர முடியாது" என்று மறுத்தார்.

    இதுபற்றி அறிந்த ஜமீன்தார். நானே நேரில் செல்கிறேன்' என்று கூற, மணமகனோ தான் செல்வதாகக் கூறிச் சென்றான். அவனிடமும், வாழை மரத்தை தர முடியாது என்று வேலாயுதம் மறுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன், அந்த மரத்தை வெட்ட அதில் இருந்து ரத்தம் வெளியேறியது. மேலும் அங்கு தோன்றிய நாகம் ஒன்று. மணமகனை தீண்டியது. இதையறிந்த ஜமீன்தாரும், கணக்குப்பிள்ளையும் தோட்டத்திற்கு விரைந்து வந்து, தங்களின் பிழையை மன்னித்து விடும்படியும், மணமகனின் உயிரை காப்பாற்றும் படியும் வேண்டினர்.

    இதையடுத்து வேலாயுதம் தன் கையில் இருந்த பிரம்பை, மணமகனின் மீது வைத்து 'முருகா..முருகா.. முருகா.. என்று மூன்று முறை சொல்லவும், அவர் நல்லபடியாக உயிர் பிழைத்தார் என்று இந்த ஆலயத்திற்கு தலவரலாறு சொல்லப்படுகிறது.

    இந்த கோவிலில் வழிபட்டால், திருமண தோஷம், புத்திர தோஷம் நீங்குவதுடன், விஷக்கடி உள்ளிட்ட பல நோய்கள் அகலும் என்பது நம்பிக்கை. குலம் தழைக்க வாழை மரத்தையே உதாரணமாக சொல்வர். ஆனால் இங்கு இறைவனே வாழை மரமாக இருந்து அருள்வது விசேஷமாக பார்க்கப்படுகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் வெம்பக்கோட்டை அருகே துலுக்கன் குறிச்சியில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    ×