search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செம்மரக்கட்டைகள்"

    செம்மரக்கட்டைகளை வெளிநாட்டிற்கு கடத்த மர்மநபர்கள் முயன்று இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெங்களூரு:

    ஆந்திராவில் இருந்து பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகா கட்டிகேனஹள்ளி என்ற கிராமத்திற்கு சரக்கு ஆட்டோவில் செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்படுவதாக கம்மகொண்டனஹள்ளி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ஒசக்கோட்டையில் இருந்து கட்டிகேனஹள்ளி செல்லும் சாலையில் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு ஆட்டோ வந்தது. அந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி வனத்துறையினர் சோதனை நடத்திய போது காய்கறி பெட்டிகள் இருந்தன.

    ஆனாலும் வனத்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் அந்த சரக்கு ஆட்டோவில் தொடர்ந்து சோதனை நடத்தினர். அப்போது காய்கறி பெட்டிகளின் அடியில் மறைத்து வைத்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனால் அந்த ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரிடம் வனத்துறையினர் விசாரிக்க முயன்றனர். அப்போது சரக்கு ஆட்டோ டிரைவர் ஆட்டோவை வேகமாக ஓட்டி சென்றார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் தங்களது ஜீப்பில் அந்த ஆட்டோவை விரட்டி சென்றனர். வனத்துறையினர் விரட்டி வருவதை பார்த்ததும் ஆட்டோவை நிறுத்திவிட்டு டிரைவர் உள்பட 2 பேர் தப்பி சென்று விட்டனர். பின்னர் அந்த ஆட்டோவை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் அந்த ஆட்டோவில் இருந்த 564 கிலோ செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து கொண்டனர்.

    இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.28 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த செம்மரக்கட்டைகளை வெளிநாட்டிற்கு கடத்த மர்மநபர்கள் முயன்று இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.


    திருத்தணி அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி:

    திருத்தணி அடுத்த தாழ்வேடு கிராமத்தில் அரசு அனுமதியுடன் செம்மரம் வளர்க்கப்பட்டு இருந்தது. அதனை வனத்துறையிடம் உரிய அனுமதி பெற்று வெட்டி விற்பனை செய்து இருந்தனர்.

    பின்னர் அதன் வேர்களை பிடுங்கி குடோனில் வைத்திருந்தனர். அவற்றை விற்பனை செய்ய உரிய அனுமதி பெறாத நிலையில் விற்பனை செய்து தருவதாக அதன் உரிமையாளரிடம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் தெரிவித்து இருந்தார்.

    மேலும் அவரது ஏற்பாட்டில் ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியை சேர்ந்த நாராயண ரெட்டி, துரைவேல், சீனு ஆகியோர் செம்மர வேர்கள், கட்டைகளை வேனில் ஆந்திராவுக்கு கடத்தி சென்றனர்.

    இது பற்றி அறிந்த திருப்பதி செம்மரம் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வேனுடன் செம்மரக் கட்டைகள், வேர்களை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக சங்கர், நாராயணரெட்டி உள்பட 4 பேரையும் கைது செய்தனர். ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள், வேர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ×