என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பணியிடங்கள்"

    • பள்ளிக்கல்வித்துறை தான் இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும் துறையாகும்.
    • அரசின் அனைத்துத் துறையின் செயல்பாடுகளும் தெளிந்த நீரோடையைப் போல சீராக ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழக அரசின் இரு முக்கியத் துறைகளான பள்ளிக்கல்வித்துறை, வணிகவரித் துறை ஆகியவற்றில் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட வேண்டிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்பவும், தகுதியான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கவும் தமிழக அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.

    தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் முதன்மைத்துறை வணிகவரித்துறை ஆகும். அத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஆண்டு தோறும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வணிகவரி அலுவலர், உதவி ஆணையர் பணியிடங்கள் கடந்த சில ஆண்டுகளாக பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படாததால் 200-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அப்பணியிடங்களுக்கான பதவி உயர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட, அதை செயல்படுத்த அரசு தயாராக இல்லை. அதனால், அத்துறையில் வரி வசூல் பாதிக்கப்படுவதுடன், பணியில் உள்ள அதிகாரிகளுக்கு தேவையற்ற பணிச்சுமையும் ஏற்படுகிறது.

    அதேபோல், பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்களில் தொடங்கி முதன்மைக் கல்வி அலுவலர் வரையிலான ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. 15க்கும் மேற்பட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், 29 மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பல மாதங்களாக இந்த பணியிடங்கள் நிரப்பப்படாததால் உயர்நிலைப்பள்ளிகளிலும், மாவட்ட அளவிலான கல்வி கட்டமைப்பிலும் நிர்வாகப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.

    பள்ளிக்கல்வித்துறை தான் இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும் துறையாகும். ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இத்தகைய சூழலில் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் காலியாக கிடந்தால் பள்ளிகளின் செயல்பாடுகள் முடங்கி விடும்; குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும். அப்படிப்பட்ட நிலை ஏற்படுவதைத் தான் திராவிட மாடல் அரசு விரும்புகிறதா? என்பது தெரியவில்லை.

    அரசின் அனைத்துத் துறையின் செயல்பாடுகளும் தெளிந்த நீரோடையைப் போல சீராக ஓடிக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு அனைத்துத் துறைகளிலும் போதிய பணியாளர்கள் தேவை. இல்லாவிட்டால் அரசு நிர்வாகம் தேங்கிய குட்டையைப் போல முடங்கி விடும். எனவே, பள்ளிக்கல்வித்துறை, வணிகவரித் துறை பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட வேண்டிய காலியிடங்கள் அனைத்தையும் உரிய நடைமுறைகளை பின்பற்றி நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    • 3 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • பெண்களுக்கான திட்டத்தை அரசு மக்களிடம் கொண்டு செல்லும்போது சமூகத்தில் மாற்றம் ஏற்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம்.

    * அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்கும் அரசு தி.மு.க. அரசு.

    * தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின், 32 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

    * 65,483 பேர் கடந்த மூன்று ஆண்டுகளில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    * உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    * 3 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    * 2026 ஜனவரிக்குள் 46,584 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    முன்னதாக, நெல்லையில் சிபிஎம் அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இருவேறு சமூகத்தை சேர்ந்த மணமக்களுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்யப்பட்டு அது தொடர்பான புகைப்படம் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டது. மணமகள் வீட்டார்கள் சிபிஎம் அலுவலகத்தை சேதப்படுத்தி உள்ளார்கள். இந்த சம்பவத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    புதிய சட்டத்தை கொண்டு வருவதை விட, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதே சரியானது.

    கல்வி, வேலைவாய்ப்பில் சமூகம் உயரும்போது, இதுபோன்ற குற்றங்கள் குறையும்.

    பெண்களுக்கான திட்டத்தை அரசு மக்களிடம் கொண்டு செல்லும்போது சமூகத்தில் மாற்றம் ஏற்படும். புதிய சட்டங்களுக்கான தேவையும் குறையும்.

    இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

    ×