என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு வெடிக்க தடை"

    • பட்டாசு வெடிக்க கூடாது என சினிமா தியேட்டர் வளாகங்களில் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
    • மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந்தேதி ஜூனியர் என்.டி.ஆர். நடித்த தேவரா படம் வெளியானது.

    அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது சினிமா தியேட்டர் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட கட்டவுட்டில் தீப்பிடித்து எரிந்தது. இதன் காரணமாக பிரபல திரைப்பட நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது பட்டாசு வெடிக்க கூடாது என சினிமா தியேட்டர் வளாகங்களில் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

    மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் பவன் கல்யாண் நடித்த ஹரிஹர வீர மல்லலு திரைப்படம் வெளியானது. அப்போது அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க சினிமா தியேட்டர்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • டெல்லி மாசுக்கட்டுப்பாடு குழு சார்பில் கடை வைப்பதற்கு உரிமம் வழங்கப்படவில்லை என்று சுற்றறிக்கை வெளியிட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    • பண்டிகை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சுற்றுச்சுழலை காப்பதும் முக்கியம்.

    டெல்லி:

    டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு தீபாவளிக்கும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

    மேலும், டெல்லியில் எந்த வகையான பட்டாசுகளை தயாரிப்பதும், சேமிப்பதும், விற்பனை செய்வதும், ஆன்லைன் டெலிவரி செய்வதும் மற்றும் வெடிப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாசுக்கட்டுப்பாடு குழு சார்பில் கடை வைப்பதற்கு உரிமம் வழங்கப்படவில்லை என்று சுற்றறிக்கை வெளியிட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பண்டிகை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சுற்றுச்சுழலை காப்பதும் முக்கியம் என்று டெல்லி மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

    • கடவுளை சந்தோஷப்படுத்த பட்டாசுகளை வெடிக்க எந்த புனித நூலிலும் உத்தரவு இல்லை.
    • தற்போதைய உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பது குறித்து புகார் அளிக்கப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரித்தார்.

    திருவனந்தபுரம்:

    வழிபாட்டு தலங்களில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், "கேரளாவில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசு மற்றும் வாண வேடிக்கைகளுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்" என்ற குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு நீதிபதி அமித் ராவல் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத வழிபாட்டு தலங்களில் ஒற்றைப்படை மணி நேரத்தில் (நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரம்) பட்டாசு வெடிக்க கேரள ஐகோர்ட் தடை விதித்தது. மேலும் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், நீதிபதி அமித் ராவல் அமர்வு உத்தரவிட்டது.

    இதுதொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதியின் தனது தீர்ப்பில், கொச்சி மற்றும் பிற மாவட்ட போலீஸ் கமிஷனர் உதவியுடன் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் சோதனை நடத்தவும், அனைத்து மத ஸ்தலங்களிலும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பட்டாசுகளை கைப்பற்றவும் துணை ஆட்சியருக்கு உத்தரவிடுகிறேன் என்று கூறிய நீதிபதி, கடவுளை சந்தோஷப்படுத்த பட்டாசுகளை வெடிக்க எந்த புனித நூலிலும் உத்தரவு இல்லை என்று கருத்தும் தெரிவித்தார்.

    சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்ய சோதனை நடத்த அறிவுறுத்திய நீதிபதி, தற்போதைய உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பது குறித்து புகார் அளிக்கப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரித்தார்.

    • 19,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • காவல் துறையின் அறிவுரைகளை கடைபிடித்து புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    சென்னையில் புத்தாண்டையொட்டி பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடிக்க தடை விதித்து சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் 2025 புத்தாண்டை கொண்டாடுவதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் 19,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில், 2025ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    முக்கியமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொருட்டு கடற்கரை, வழிபாட்டு தலங்கள், சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள். உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை (TSP) காவல் ஆளிநர்கள் என மொத்தம் 19,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை பெருநகர காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளது.

    மேலும், காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 31.12.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று இரவு 09.00 மணியிலிருந்து முக்கியமான இடங்களில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு சென்னை, மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, புனித தோமையர்மலை, பூக்கடை. வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும், 30 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட, வேண்டிய உதவிகளை மேற்கொள்வார்கள்.

    இது மட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, மற்றும் GST ரோடு போன்ற பகுதிகளில் இருசக்கர வாகன பந்தயம் (Bike Race) தடுப்பு நடவடிக்கையாக 30 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் உள்ள 100க்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டுதலங்கள், பொது இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 31.12.2024 மாலை முதல் 01.01.2025 வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் ஆளிநர்கள், குதிரைப்படைகள் மற்றும் ATV (All Terrain Vehicle) எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் (Police Assistant Booth) அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.

    மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் இது போன்று உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்படும். மேலும், முக்கிய இடங்களில் Drone Camera-க்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    சில இடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருவதால் தகுந்த மாற்றுவழி ஏற்பாடுகளை பயன்படுத்திட வேண்டும்.

    கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் (Anti Drowning Unit) இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையாக, எச்சரிக்கை பதாகைகள் பொருத்தப்பட்டு கடலில் யாரும் மூழ்கிடாமல் உயிரிழப்பை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக குதிரைப்படைகள் கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும். மேலும், அவசர மருத்துவ உதவிக்கு, முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.

    சரக காவல் அதிகாரிகள் மேற்பார்வையில் குற்றத் தடுப்பு நடவடிக்கை மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு, தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும்.

    Mobile Surveillance Team எனப்படும் குழுக்கள் அமைக்கப்பட்டு Tata Ace போன்ற வாகனங்களில் PA.System, Flickering Light போன்றவை பொருத்தியும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வாகனங்கள் அதிகம் சேரும் இடங்களில் உபயோகிக்கப்படும்.

    பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

    அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்திட வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

    சென்னை பெருநகர காவல்துறை, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுகளும் இல்லாமல் அனைத்து நிகழ்வுகளை நடத்திட, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து சென்னை பெருநகரில் 12 காவல் மாவட்டங்களில் பொதுமக்கள் புத்தாண்டை சிறப்பாகவும், மற்றவர்களுக்கு சிரமமின்றியும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

    மேலும், சென்னை பெருநகர காவல் துறையின் அறிவுரைகளை கடைபிடித்து புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுமாறு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    எனவே, பொதுமக்கள், சென்னை பெருநகர காவல் துறையினருடன் ஒத்துழைப்பு நல்கி, 2025ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டினை இனிதாக வரவேற்றிட "இனிய புத்தாண்டு வாழ்த்துகளுடன்" கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×