என் மலர்
நீங்கள் தேடியது "வைப்புத்தொகை"
- எஸ்பிஐ வங்கியில் மட்டும் ரூ.19,239 கோடி உள்ளது.
- எச்டிஎஃப்சி வங்கியில் ரூ.1,609 கோடி மற்றும் ஆக்சிஸ் வங்கியில் ரூ.1,360 கோடி மதிப்புள்ள வைப்புத்தொகைகள் உள்ளன.
இந்திய வங்கிகளில் ரூ.67,000 கோடி மதிப்புள்ள வைப்புத்தொகைகள்(deposit) உரிமை கோரப்படாமல் கிடப்பில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜூன் 30, 2025 நிலவரப்படி இந்த புள்ளிவிவரங்களை நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
பொதுத்துறை வங்கிகள் 87 சதவீத உரிமைகோரப்படாத வைப்புத்தொகையை வைத்திருக்கின்றன. பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இதுபோன்ற வைப்புத்தொகைகளில் அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.
எஸ்பிஐ வங்கியில் மட்டும் ரூ.19,239 கோடி உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி (ரூ.6,910.67 கோடி), கனரா வங்கி (ரூ.6,278.14 கோடி), பாங்க் ஆஃப் பரோடா (ரூ.5,277.36 கோடி) மற்றும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா (ரூ.5,104.50 கோடி) ஆகியவை அதிக அளவு உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகளைக் கொண்ட பிற பொதுத்துறை வங்கிகளாகும்.
தனியார் வங்கிகளில் மட்டும் ரூ.8,673.72 கோடி மதிப்புள்ள உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகள் உள்ளன. ஐசிஐசிஐ வங்கியில் அதிகபட்சமாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகள் உள்ளன.
ஐசிஐசிஐ வங்கியில் ரூ.2,063.45 கோடி மதிப்புள்ள வைப்புத்தொகைகள் உள்ளன. எச்டிஎஃப்சி வங்கியில் ரூ.1,609 கோடி மற்றும் ஆக்சிஸ் வங்கியில் ரூ.1,360 கோடி மதிப்புள்ள வைப்புத்தொகைகள் உள்ளன.
ஒரு சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் 10 ஆண்டுகளுக்கு எந்தப் பரிவர்த்தனையும் இல்லை என்றால், அந்தக் கணக்கில் உள்ள தொகை 'செயல்படாத வைப்புத்தொகை' என்று கருதப்படுகிறது. இது பொதுவாக கணக்கு வைத்திருப்பவர் இறக்கும் போது நடக்கும்.
இந்த நிதிகள் 10 ஆண்டு வரம்பிற்குப் பிறகு இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) பராமரிக்கப்படும் வைப்புத்தொகையாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்படும்.
பழைய கணக்குகளில் பணம் இருக்கிறதா என்பதை சரிபார்க்க, இந்திய ரிசர்வ் வங்கி UDGM (Unclaimed Deposits-Gateway to Access Information) என்ற மையப்படுத்தப்பட்ட இணையதள போர்ட்டலைத் தொடங்கியுள்ளது.
இந்த போர்டல் மூலம், பல்வேறு வங்கிகளில் உள்ள உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகளை எளிதாகத் தேடலாம்.
இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதன் மூலம், பழைய மற்றும் பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
- பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.
- 2-ம் கட்டமாக 550 குழந்தைகளுக்கும் முதிர்வுத் தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. அவர் பேசியதாவது,
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் 31.12.2001 முதல் ரூ.15,200/- தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் மூலம் நிலையான வைப்புத் தொகையாக டெபாசிட் செய்யப்பட்டு நிலையான வைப்புத் தொகை ரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்தது. 01.08.2011 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த பெண் குழந்தையின் பெயரில் ஒரு பெண் குழந்தை உள்ள குடும்பத்திற்கு ரூ.50,000/- மற்றும் 2 பெண் குழந்தைகள் மட்டும் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.25,000/- என உயர்த்தி தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் மூலம் நிலையான வைப்புத் தொகையாக டெபாசிட் செய்யப்பட்டு நிலையான வைப்புத் தொகை பத்திரம் நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட டெபாசிட் தொகையானது பெண் குழந்தைகளின் கல்வித் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் 6-வது ஆண்டு வைப்புத் தொகையிலிருந்து ஆண்டுதோறும் ரூ.1800/- ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேற்கூறிய வைப்புத்தொகை ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு 18 வயது நிறைவடைந்தவுடன் பெண் குழந்தைக்கு வட்டியுடன் சேர்த்து வைப்புத் தொகை வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2001 முதல் 2005 வரை பதிவு செய்யப்பட்டு 18 வயது நிறைவடைந்த குழந்தைகளுக்கு முதல் கட்டமாக 2,858 குழந்தைகள் மற்றும் 2-ம் கட்டமாக 550 குழந்தைகளுக்கும் முதிர்வுத் தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது.
தற்பொழுது, 1,174 குழந்தைகளுக்கு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் மூலம் பெயர் பட்டியல் வரப்பெற்றுள்ளது. அக்குழந்தைகளுக்கும் முதிர்வு தொகை பெற்று வழங்கப்படும். நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 57 பயனாளிகளுக்கு வைப்புத் தொகை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் 2 பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், நலத்திட்ட உதவிகள் பெற்றவர்கள், தங்கள் பெண் பிள்ளைகளின் எதிர்கால தேவைக்கு இத்தொகையினை பயன்படுத்திட வேண்டும் என கலெக்டர் பழனி தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- இழப்பீடு கொடுக்கப்படாததை கண்டித்தும் காத்திருப்பு போராட்டம் நடத்துகிறோம்.
- நகை மோசடியால் ஏற்பட்ட இழப்பீட்டினை உடனடியாக வழங்குவதாக வங்கி நிர்வாகம் ஒப்புக்கொண்டது
பல்லடம்:
பல்லடம் அருகே, கேத்தனூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கூறியதாவது:- கேத்தனூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பாரதப் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்க திட்டத்தின் கீழ் மந்தராசலம் என்ற விவசாயி கடன் பெற்றிருந்தார்.
அந்தக் கடனுக்கான வைப்பு தொகையை கடந்த 5 மாதங்களாக அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்காமலும், மேலும் அதற்குண்டான வட்டி தொகையை வழங்காமலும் வங்கி நிர்வாகம் தொடர்ந்து காலம் தாமதம் செய்து வந்தது. எனவே காலம் தாழ்த்தி வந்ததை கண்டித்தும், இதே வங்கியில் நகை மோசடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு கொடுக்கப்படாததை கண்டித்தும் காத்திருப்பு போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்த அவர்களை அழைத்தனர்.இதில் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு வைப்புத் தொகையை திருப்பி வழங்கியும், மேலும் அதற்குண்டான வட்டி தொகையை அவரது வங்கி கணக்கில் வழங்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் நகை மோசடியில் பாதிக்கப்பட்ட 603 நபர்களில் 402 வங்கி வாடிக்கையாளர்களுக்கு நகை மோசடியில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 201 வாடிக்கையாளர்களுக்கு கடிதம் அனுப்பி உடனடியாக இழப்பீட்டை வழங்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள உறுதி அளித்தது. மேலும் வங்கியில் இருந்து நகையை மீட்டு சென்ற 84 வாடிக்கையாளர்களுக்கு வருகின்ற ஒரு மாத காலத்திற்குள் அவர்களுக்கும் நகை மோசடியால் ஏற்பட்ட இழப்பீட்டினை உடனடியாக வழங்குவதாக வங்கி நிர்வாகம் ஒப்புக்கொண்டது.
இந்த காத்திருப்பு போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, இந்திய உழவர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் நல்லாக் கவுண்டர், மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம், மாநில பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன், மாநில துணைத்தலைவர் அரசேந்திரன், திருப்பூர் தெற்கு மாவட்ட அவை தலைவர் வரதராஜன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.டி மகாலிங்கம், கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள்,மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






