என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி மோசடி"

    • இந்த குற்றவாளிகளின் சொத்துக்களில் இருந்து 33 சதவீதம், அதாவது ரூ.19,187 கோடி மீட்கப்பட்டுள்ளது
    • கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா ரூ.11,960 கோடியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

    பிரபல தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட நாட்டை விட்டு தப்பி ஓடிய 15 பொருளாதார குற்றவாளிகள் பொதுத்துறை வங்கிகளுக்கு மொத்தம் ரூ.58,082 கோடி கடன்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    மக்களவையில் எம்.பி ஒருவர் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி இதனைத் தெரிவித்தார்.

    இந்த மொத்த நிலுவைத் தொகையில், அசல் தொகை ரூ.25,645 கோடி, அதே நேரத்தில் அதற்கான வட்டி ரூ.31,437 கோடியை எட்டியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுவரை, இந்த குற்றவாளிகளின் சொத்துக்களில் இருந்து 33 சதவீதம், அதாவது ரூ.19,187 கோடி மீட்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.38,895 கோடி வசூலிக்கப்பட வேண்டி உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உட்பட மொத்தம் 12 பொதுத்துறை வங்கிகளுக்கு அவர்கள் கடன்பட்டுள்ளனர்.

    கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா ரூ.11,960 கோடியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்தத் தொகையை அவர் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு மட்டும் கடன்பட்டுள்ளார்.

    அவருக்குப் பிறகு, வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,799 கோடி கடன்பட்டுள்ளார். அவர்களுடன் சேர்ந்து, சந்தேசரா குழுமமும் ரூ.900 கோடி முதல் ரூ.1,300 கோடி வரை கடன் வாங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம், 2018 இன் கீழ் அவர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

    இதற்கிடையே விஜய் மல்லையா, மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி அவ்வப்போது லண்டனில் பார்ட்டி நடத்தி நடனமாடி கொண்டாடும் வீடியோக்கள் வெளியான வண்ணம் உள்ளன.  

    • பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
    • ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

    திருப்பூர்:

    ஈரோடு, திருப்பூர், கோவையில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்தினர் நிதி மோசடியில் ஈடுபட்டதால் அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புங்கந்துரை கிராமத்தில் உள்ள நிலம் மற்றும் காங்கேயம் கண்டியன் கோவில் கிராமத்தில் உள்ள அசையா சொத்துக்கள் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் 4.7.2023 அன்று பகல் 12 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக 2-ம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் (அறை எண்:202) பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

    மேற்கண்ட சொத்துக்களை பொது ஏலத்தில் எடுக்க விரும்புவோர் ஏல நிபந்தனைகள் தொடர்பான விபரங்களை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம் தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இவ்விபரங்கள் அந்தந்த அலுவலக விளம்பர பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது. ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

    ஏலத்தில் கலந்து கொள்வது தொடர்பாக உரிய படிவத்தில் விண்ணப்பத்தினை 3. 7.2023 அன்று மாலை 5மணிக்குள் தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தெரிவித்துள்ளார்.

    • வங்கி கணக்கு முடக்கம் தொடர்பான ஆவணங்கள் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல்.
    • தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தை நாட உத்தரவு.

    ஆரூத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேசுக்கு தொடர்பு இருப்பதாக கூறி ஆவரது வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த வழக்கு விசாரணையின்போது, வங்கி கணக்கு முடக்கம் தொடர்பான ஆவணங்கள் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டன.

    இதையடுத்து, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தை நாட ஆர்.கே.சுரேஷிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறை ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தது.
    • மோசடி கும்பலிடம் இருந்து 158 செல்போன்கள், 60 கம்ப்யூட்டர்கள், 16 லேப்-டாப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

    கொழும்பு:

    இலங்கையில் மர்ம கும்பல் ஒன்று ஆன்லைன் மூலமாக பல்வேறு சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து பல புகார்கள் வந்தன.

    இது தொடர்பாக இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறை ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தது. இதில் அந்த மோசடி கும்பல் 'வாட்ஸ்-அப்' குழுவில் ஆட்களை சேர்த்து அதிக லாபம் தருவதாக பொய் வாக்குறுதி அளித்து முதலீடு செய்ய வைத்தும், சட்டவிரோதமாக சூதாட்டங்களை நடத்தியும் பணம் சுருட்டி வந்தது தெரியவந்தது. மேலும் தலைநகர் கொழும்புவின் புறநகர் பகுதிகளான மடிவெலா, பத்தரமுல்லை மற்றும் மேற்கு கடற்கரை நகரமான நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் இருந்து மோசடி கும்பல் இயங்கி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அந்த பகுதிகளில் குற்றப் புலனாய்வு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மோசடி கும்பலை சேர்ந்த 156 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 137 பேர் இந்தியர்கள் ஆவர். மற்ற 19 பேரும் ஆப்கானிஸ்தான், துபாய் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அந்த மோசடி கும்பலிடம் இருந்து 158 செல்போன்கள், 60 கம்ப்யூட்டர்கள், 16 லேப்-டாப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

    கைது செய்யப்பட்ட நபர்களிடம் குற்றப் புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×