என் மலர்
நீங்கள் தேடியது "ஆஸ்பத்திரியில் சிகிச்சை"
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது குமாரகுடி குளத்து மேடு. இந்த கிராமத்தை சேர்ந்த சிலர் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள்.
அவர்கள் குளத்துமேட்டு பகுதியில் ஓலை கொட்டகை அமைத்து அதில் அய்யப்பசாமி படத்தை வைத்து பூஜை நடத்தி வந்தனர். நேற்று மாலை அங்கு கன்னி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
பூஜை மற்றும் பஜனை முடிந்தவுடன் பக்தர்களுக்கு பிரசாதமாக சர்க்கரை பொங்கல், புளியோதரை, சுண்டல் போன்றவை வழங்கப்பட்டது. பிரசாதம் சாப்பிட்டுவிட்டு அனைவரும் வீடுகளுக்கு சென்றனர். சிறிது நேரத்தில் பிரசாதம் சாப்பிட்டவர்களுக்கு திடீரென்று வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.
உடனே அக்கம் பக்கத்தினர் மயங்கி விழுந்த விஜயகாந்த் (33), துரை (44), விஷால் (21), தமயந்தி (22), ராம்கி (28) உள்பட 40 பேரை 4 ஆம்புலன்சுகளில் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவில் பிரசாதம் சாப்பிட்டு 40 பேர் மயங்கி விழுந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாராபுரம்:
பழனி ஆயக்குடியை சேர்ந்தவர் ரங்கநாயகம். இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார்.
இதற்கு முன்பு ரங்கநாயகம் உடுமலையில் வேலை பார்த்தார். அப்போது அவர் விசாரணை கைதியை கடுமையாக தாக்கியதாக வழக்கு உள்ளது. இதேபோல் குண்டடம் பகுதியில் தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கு உள்ளது. இதனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தவிர போலீஸ்காரர் ரங்கநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜூடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
விசாரணை முடிவில் தனது வேலை பறிபோகும் என்று ரங்கநாயகம் அச்சமடைந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று அரளி விதையை அரைத்து குடித்தார். இதில் மயங்கிய அவரை உறவினர்கள் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த மறைந்த எஸ்.ஏ. ராஜாவின் மகன் ஜான்சல் ராஜா (வயது 55). இவர், ஆரல்வாய்மொழி பகுதியில் செயல்படும் கல்லூரி ஒன்றின் நிர்வாகியாக இருந்து வருகிறார்.
ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஜான்சல் ராஜா மீது மோசடி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அவரை கைது செய்து ஒடிசா அழைத்து செல்வதற்காக அந்த மாநில போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 4 போலீஸ் அதிகாரிகள் நேற்று நாகர்கோவில் வந்தனர்.
அவர்கள் உள்ளூர் போலீசார் உதவியுடன் இணைந்து நாகர்கோவிலில் உள்ள ஜான்சல் ராஜா வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர்.
அதன் பிறகு நாகர்கோவில் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் வருகிற 30-ந்தேதி ஜான்சல் ராஜாவை ஒடிசா கோர்ட்டில் ஆஜர்படுத்தும் படி உத்தரவிட்டார்.
அப்போது ஜான்சல் ராஜா திடீரென்று கோர்ட்டில் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு வக்கீல்கள் அறையில் வைத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் பிறகு மாஜிஸ்திரேட்டு உத்தரவுப்படி அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இன்று 2-வது நாளாக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் சிகிச்சை பெறும் தீவிர சிகிச்சை பிரிவு முன்பு குமரி மாவட்ட போலீசார் 4 பேரும் ஒடிசா மாநில போலீஸ்காரர் ஒருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் அவரை பார்க்க வரும் பார்வையாளர்களிடம் போலீசார் அவர்கள் பற்றிய விவரங்களை தீவிரமாக விசாரிக்கிறார்கள். முக்கிய மானவர்களுக்கு மட்டுமே அவரை பார்க்க போலீசார் அனுமதி வழங்கினார்கள். #JohnselRaja






