search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SA Raja Son"

    மோசடி வழக்கில் கைதான எஸ்.ஏ. ராஜா மகனுக்கு இன்று 2-வது நாளாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #JohnselRaja
    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த மறைந்த எஸ்.ஏ. ராஜாவின் மகன் ஜான்சல் ராஜா (வயது 55). இவர், ஆரல்வாய்மொழி பகுதியில் செயல்படும் கல்லூரி ஒன்றின் நிர்வாகியாக இருந்து வருகிறார்.

    ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஜான்சல் ராஜா மீது மோசடி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அவரை கைது செய்து ஒடிசா அழைத்து செல்வதற்காக அந்த மாநில போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 4 போலீஸ் அதிகாரிகள் நேற்று நாகர்கோவில் வந்தனர்.

    அவர்கள் உள்ளூர் போலீசார் உதவியுடன் இணைந்து நாகர்கோவிலில் உள்ள ஜான்சல் ராஜா வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர்.

    அதன் பிறகு நாகர்கோவில் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் வருகிற 30-ந்தேதி ஜான்சல் ராஜாவை ஒடிசா கோர்ட்டில் ஆஜர்படுத்தும் படி உத்தரவிட்டார்.

    அப்போது ஜான்சல் ராஜா திடீரென்று கோர்ட்டில் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு வக்கீல்கள் அறையில் வைத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அதன் பிறகு மாஜிஸ்திரேட்டு உத்தரவுப்படி அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    இன்று 2-வது நாளாக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் சிகிச்சை பெறும் தீவிர சிகிச்சை பிரிவு முன்பு குமரி மாவட்ட போலீசார் 4 பேரும் ஒடிசா மாநில போலீஸ்காரர் ஒருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் அவரை பார்க்க வரும் பார்வையாளர்களிடம் போலீசார் அவர்கள் பற்றிய விவரங்களை தீவிரமாக விசாரிக்கிறார்கள். முக்கிய மானவர்களுக்கு மட்டுமே அவரை பார்க்க போலீசார் அனுமதி வழங்கினார்கள்.  #JohnselRaja

    ×