search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Simultaneous Elections"

    பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அரசியல் சாசன திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வரும் என பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கிருஷ்ண சாகர்ராவ் கூறினார். #KrishnaRao #AmendmentBill
    ஐதராபாத்:

    பாராளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார்.

    இது தொடர்பாக ஐதராபாத்தில் தெலுங்கானா மாநில பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கிருஷ்ண சாகர்ராவ் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் பா.ஜனதாவின் திட்டம். அதை நாங்கள் விட்டுவிடவில்லை. தொடர்ந்து வருகிறோம்.

    இதற்காக அரசியல் சாசனத்தில் உரிய திருத்தம் செய்வதற்கான மசோதாவை, விரைவில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அல்லது சிறப்பு கூட்டம் கூட்டியும் மத்திய அரசு கொண்டு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    தெலுங்கானாவை பொறுத்தமட்டில் முன்கூட்டியே தேர்தல் நடத்தினால், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று முதல்-மந்திரி சந்திர சேகரராவ் கணிக் கிறார்.

    ஆனால் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கு தேர்தல் நடத்த அவர் விரும்பவில்லை.

    நரேந்திர மோடி அரசுக்கு உள்ள நற்பெயரின் தாக்கம் பொதுத்தேர்தலில் ஏற்படும்போது, அது மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என கவலைப்படுகிறார்.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் மாநிலங்களுடன் சட்டசபை தேர்தலை நடத்திவிடலாம் என முதல்-மந்திரி சந்திர சேகரராவ் சட்டசபையை கலைத்தாலும்கூட, தொழில்நுட்ப ரீதியில் அது சாத்தியம் கிடையாது. ஏனென்றால் இந்த 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே செய்து முடித்து விட்டது. அத்துடன் இன்னொரு மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடத்தும் நிலையில் தேர்தல் கமிஷன் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.   #KrishnaRao #AmendmentBill
    உரிய சட்ட திருத்தம் செய்யாதவரை நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் தெரிவித்தார். #SimultaneousElections #ElectionCommission
    புதுடெல்லி:

    ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவதன் மூலம் தேர்தல் செலவை கணிசமாக மிச்சப்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.

    இது தொடர்பாக கடந்த மே மாதம் 16-ந்தேதி மத்திய சட்ட ஆணையத்துடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது. அப்போது, இதுபோல் தேர்தலை நடத்த முடிவு செய்தால் கூடுதலாக 12 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், இதே அளவில் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் தேவைப்படும் எனவும், இதற்காக ரூ.4,500 கோடி செலவு பிடிக்கும் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்தது.



    இந்த நிலையில், மத்திய சட்ட ஆணையத்துக்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று முன்தினம் எழுதிய கடிதத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

    இதுபற்றி டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத்திடம் விரைவில், நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்படுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற கோரிக்கை தொடர்பாக 2015-ம் ஆண்டு முதலே இதற்காக தேவைப்படும் 100 சதவீத ஒப்புகைச் சீட்டு எந்திரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து தேர்தல் கமிஷன் தனது கருத்தை தெரிவித்து வருகிறது. இதர தேவைகளான கூடுதல் போலீஸ் படை, தேர்தல் அதிகாரிகள் நியமனம் பற்றியும் தெரிவித்து உள்ளது.

    மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் என்பதைப் பொறுத்தவரை சில மாநிலங்களின் சட்டசபை ஆயுட்காலத்தை குறைக்கவும் சில மாநிலங்களின் சட்டசபைகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவேண்டியும் இருக்கும். இதற்கு உரிய சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியமாகும்.

    இதுபோன்ற நிலையில் உரிய சட்ட திருத்தங்கள் செய்யாத வரை ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை. அதேநேரம் பதவி காலம் முடியும் சட்டசபைகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்தவேண்டிய பொறுப்பு தேர்தல் கமிஷனுக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #SimultaneousElections #ElectionCommission
    பாராளுமன்ற தேர்தலுடன் 11 மாநில சட்ட சபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமி‌ஷன் தயாராகி வருகிறது. #SimultaneousElections #ElectionCommission

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கும் மாநில சட்டசபைகளுக்கும் தனி தனியாக தேர்தல் நடத்துவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது.

    இந்த செலவை குறைத்தால் மீதமாகும் பணத்தை பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு செலவிட முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.

    இதையடுத்து “ஒரு தேசம் ஒரு தேர்தல்” என்ற கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கூறி வருகிறது. அதன் பரிந்துரையை ஏற்று சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையம் மிகப்பெரிய ஆய்வை நடத்தியது. அதில் ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தினால் கூடுதலாக எத்தனை லட்சம் மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் தேவைப்படும் என்ற கணக்கீடு செய்யப்பட்டது.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இருந்து “ஒரு தேசம், ஒரு தேர்தல்” திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்று தேர்தல் கமி‌ஷன் கூறியது. ஆனால் இந்த திட்டத்தை இதுவரை பெரும்பாலான கட்சிகள் ஏற்கவில்லை. இதனால் ஒரே நேரத்தில் தேர்தல் திட்டத்துக்கு இது வரை ஒருமித்த கருத்து உருவாகவில்லை.


    இந்த நிலையில் பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) ஜூன் மாதம் 3-ந்தேதியுடன் பதவிக் காலம் முடிவதால் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமி‌ஷன் தயாராகி வருகிறது. ஆனால் அந்த தேர்தலுக்கு முன்னதாக வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பதவிக் காலம் முடிய உள்ள மிசோராம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டியதுள்ளது.

    இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, தெலுங்கானா, அருணா சலபிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தல் முடிந்த அடுத்த 6 மாதத்தில் அரியானா, ஜார்க்கண்ட், மராட்டியம் ஆகிய 3 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரை 11 மாதங்களில் 12 மாநிலங்களுக்கு 3 கட்டமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் இந்த செலவை குறைக்க பாராளுமன்ற தேர்தலுடன் 11 மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று பாரதிய ஜனதா கட்சி பரிந்துரைத்துள்ளது.

    “ஒரு தேசம் ஒரு தேர்தல்” திட்டத்தின் முதல்படியாக பாராளுமன்ற தேர்தலுடன் 11 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தி விட வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையமும் பாராளுமன்ற தேர்தலுடன் 11 மாநில சட்ட சபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தன்னை தயார்படுத்தி வருகிறது.

    இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ள மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் இப்போதே பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் தொடங்கி விட்டனர். பாராளுமன்ற தேர்தலுடன் இந்த 4 மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்த வேண்டுமானால் இந்த 4 மாநிலங்களிலும் டிசம்பர் மாதத்துக்கு பிறகு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டியதிருக்கும்.


    அது போல அரியானா, ஜார்க்கண்ட், மராட்டியம் ஆகிய 3 மாநிலங்களிலும் 6 மாதத்துக்கு முன்பே ஆட்சியை கலைத்து விட்டு, முன்பே தேர்தல் நடத்த வேண்டும். இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி நடப்பதால், முன் கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு வசதியாக எளிதில் ஆட்சியை கலைக்க முடியும்.

    ஆனால் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்துக்கு இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை.

    இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா, சிக்கிம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்யத் தொடங்கியுள்ளது. இதற்காக 17 லட்சத்து 40 ஆயிரம் மின்னணு எந்திரங்களுக்கு தேர்தல் ஆணையம் ஆர்டர் கொடுத்துள்ளது. இன்னும் 3 மாதங்களில் அவை தயாராகி வந்து விடும்.

    பாராளுமன்றத்துக்கும் அனைத்து மாநில சட்ட சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் சுமார் 80 லட்சம் எந்திரங்கள் தேவைப்படும். 11 மாநில சட்டசபைக்கும், பாராளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமானால் சிறிதளவு கூடுதல் எந்திரங்களை வர வழைத்து ஓட்டுப்பதிவை நடத்தி விட முடியும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    ஆனால் இவையெல்லாம் பரிந்துரை செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளன. அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த மனதுடன் முன் வந்தால் மட்டுமே “ஒரு தேசம் ஒரு தேர்தல்” திட்டம் வெற்றி பெறும்.

    நாடாளுமன்றம், சட்ட சபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி அரசியல் கட்சிகளுடன் 7, 8-ந் தேதிகளில் சட்ட ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. #LawCommission #SimultaneousElections
    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார்.வருடத்தின் பல மாதங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிப்பதாலும், மக்கள் பணம் செலவழிவதாலும் அதை தவிர்க்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்று அவர் கருதுகிறார்.

    அவரது யோசனைக்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. 2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

    அதாவது, 2021-ம் ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும், மற்ற மாநிலங்களில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும் சிபாரிசு செய்துள்ளது.

    இதை நடைமுறைப்படுத்த சில மாநில சட்டசபைகளின் பதவிக்காலத்தை குறைக்க வேண்டி இருக்கும். வேறு சில மாநிலங்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டி இருக்கும். இதற்காக அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

    இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில், 7 மற்றும் 8-ந் தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

    பா.ஜனதா, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் ஆகும். இதுபோல், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டு முன்பு ஒருமுறை சட்ட ஆணையம் கடிதம் எழுதியது. ஆனால், எந்த அரசியல் கட்சியும் அதற்கு பதில் அளிக்கவில்லை.

    இந்த சூழ்நிலையில், ஆலோசனை கூட்டத்துக்கு சட்ட ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.  #LawCommission #SimultaneousElections #Tamilnews
    ×