search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sabarimala row"

    சபரிமலைக்கு சென்ற மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்டதைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. #BJPBandh #KanyakumariBandh #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கு ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சபரிமலைக்கு செல்லும் இளம்பெண்களை தடுத்து நிறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் கேரளாவில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    பக்தர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். மேலும் சபரிமலை சன்னிதானம் செல்லவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் கன்னியாகுமரி தொகுதி பா.ஜனதா கட்சி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் 2 நாட்களுக்கு முன்பு சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றார். அவருடன் பா.ஜனதா கட்சி நிர்வாகிகளும் இருந்தனர்.

    பொன். ராதாகிருஷ்ணன் சென்ற காரை போலீசார் நிலக்கல் பகுதியில் தடுத்து நிறுத்தினர். தடை உத்தரவு காரணமாக பொன்.ராதாகிருஷ்ணன் காரை தவிர மற்றவர்களின் காரை நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு அனுமதிக்க முடியாது என்று கூறினர்.

    இதனால் போலீசாருக்கும், பொன். ராதாகிருஷ்ணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பொன். ராதாகிருஷ்ணன் காரில் இருந்து இறங்கி ஆதரவாளர்களுடன் பஸ்சில் பம்பை சென்றார். அங்கு தரிசனம் முடிந்து நேற்று அதிகாலையில் அவர், கோவை திரும்பினார்.

    அப்போது பம்பை பகுதியில் பொன். ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் சென்ற காரை போலீசார் மீண்டும் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதற்கும் பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். கேரள அரசும், போலீசாரும் வேண்டுமென்றே ஐயப்ப பக்தர்களை அவமதிப்பதாக குற்றம் சாட்டினார்.

    சபரிமலையில் பொன். ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், கேரள அரசு மற்றும் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தும் குமரி மாவட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் நேற்று போராட்டங்கள் நடத்தினர்.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கொடும்பாவி எரிக்கப்பட்டது. இன்று மாவட்டம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தது.

    போராட்ட அறிவிப்பு வெளியானதும் மாவட்டத்தின் மேற்கு பகுதி கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டது. நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை, கருங்கல், தக்கலை போன்ற நகரங்களுக்கு சென்ற அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டது.

    இதில், 8 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டது. பஸ்கள் மீது கல்வீசப்பட்ட தகவல் அறிந்ததும், போக்குவரத்து அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் போக்குவரத்தை உடனடியாக நிறுத்தினர்.

    இரவு நேர ஸ்டே பஸ்கள் டெப்போக்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. உட்புற கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

    இன்று காலையில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. நாகர்கோவில், மணிமேடை, மீனாட்சிபுரம், கோட்டார், செட்டிக்குளம் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இதுபோல தக்கலை, மார்த்தாண்டம், குழித்துறை, குலசேகரம், கருங்கல் பகுதிகளிலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடிக் கிடந்தன.

    குமரி மாவட்டத்தில் வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு நகர பஸ்கள் ஓடத் தொடங்கும். ஆனால் இன்று டெப்போக்களில் இருந்து எந்த பஸ்களும் பஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படவில்லை.

    இதனால் வெளியூர்களில் இருந்து நாகர்கோவில் வந்த பயணிகள் மற்றும் ரெயிலில் வந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

    கேரளாவில் இருந்து நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரிக்கு வரும் அரசு பஸ்கள் கேரள எல்லையான பாறசாலையுடன் நிறுத்தப்பட்டது. இதனால் கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வேலைக்கு வருவோர் தவிப்பிற்கு ஆளானார்கள்.



    பஸ்கள் நிறுத்தம், கடைகள் அடைப்பு காரணமாக நாகர்கோவில் வடசேரி, அண்ணா பஸ் நிலையங்களிலும், கோட்டார், பள்ளி விளை ரெயில் நிலையங்களிலும் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ்களை இயக்க வேண்டும் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.

    குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக இன்று நடக்க இருந்த மனோன்மணியம் பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதனை துணைவேந்தர் பாஸ்கர் அறிவித்தார். அதே நேரம் அரசு பள்ளி, மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்கள் பஸ்கள் ஓடாததால் வீடுகளுக்கு திரும்பினர்.

    போராட்டம் காரணமாக மார்த்தாண்டம், குழித்துறை, குலசேகரம் மற்றும் நாகர்கோவில் பகுதியில் ஒருசில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கியது. ஆனால குறைவான மாணவர்களே பள்ளிக்கு வந்திருந்தனர்.

    முழு அடைப்பு போராட்டம் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர்.

    திருக்கார்த்திகை தினமான இன்று முழு அடைப்பு நடந்ததால் கார்த்திகை விளக்கு விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. காலையில் சொக்கப்பனை கொளுத்துவது, கோவிலுக்கு செல்வது பாதிக்கப்பட்டதாக பக்தர்கள் குமுறினர்.

    இன்று காலையில் தான் வடசேரி, அப்டா மார்க்கெட்டுகளில் கார்த்திகை பொருட்கள் விற்பனை களை கட்டும். பஸ்கள் ஓடாததாலும், கடைகள் மூடப்பட்டதாலும் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.

    முழு அடைப்பு போராட்டத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், எஸ்.பி. ஸ்ரீநாத் ஆகியோர் ரோந்து சுற்றி வந்து பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டனர்.

    முக்கிய சந்திப்புகளில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக காலை 10 மணிக்கு மேல் பஸ்கள் ஓடத் தொடங்கின. அனைத்து டெப்போக்களில் இருந்தும் பஸ்கள் ஒவ்வொன்றாக பஸ் நிலையம் வந்தது. அவை போலீஸ் பாதுகாப்புடன் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டது. #BJPBandh #KanyakumariBandh #PonRadhakrishnan
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 19-ம் தேதி முறையீடு செய்ய தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. #Sabarimala #Sabarimalarow #SC
    திருவனந்தபுரம்:

    சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்போம். இதற்கு எதிரான நிலைப்பாட்டை கேரள அரசு எடுக்க முடியாது என பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அம்மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் இந்த அறிவிப்பை சமீபத்தில் அவர் வெளியிட்டார்.

    ஆனால், முல்லக்கல் மற்றும் பம்பா பகுதியில் முற்றுகையிட்டுள்ள பக்தர்கள் பெண்களை சபரிமலை பக்கம் செல்ல விடாமல் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டங்களில் ஈடுபடும் அமைப்புகளையும், அதன் தலைவர்களையும் போலீசார் கண்காணித்து வந்தனர். அவர்கள் பக்தர்கள் வேடத்தில் சபரிமலை சென்று விடாமல் இருக்க கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டக்காரர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையில், சபரிமலை செல்வதற்காக புனேவில் இருந்து நேற்று விமானம் மூலம் கொச்சி வந்த பெண்ணுரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விடியவிடிய விமான நிலையத்துக்குள் முடங்கி கிடந்த அந்தப் பெண் புனே நகருக்கு திரும்ப சென்றார்.



    இதேபோல்,  இந்து ஐக்கிய வேதி அமைப்பின் பெண் தலைவர் சசிகலா இருமுடி கட்டுடன் சபரிமலைக்கு செல்ல வந்தார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் பம்பையில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    சபரிமலை செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் போலீசாருக்கும், சசிகலாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பம்பையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், சசிகலாவை கைது செய்தனர்.

    இந்து அமைப்பின் தலைவி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.

    இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 19-ம் தேதி முறையீடு செய்ய தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.

    இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  தலைவர் ஏ.பத்மகுமார், ‘வரும் திங்கட்கிழமை எங்களது வழக்கறிஞர் சந்திரா உதய் சிங் இதற்கான மனுவை சுப்ரீம்  கோர்ட்டில் தாக்கல் செய்வார்’ என தெரிவித்துள்ளார். #Sabarimala #Sabarimalarow #SC   
    சபரிமலை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டமிட்டு உள்ளது. #SabarimalaTemple #KeralaGovernment
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு 2 மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனினும் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதில் மாநில அரசு தீவிரமாக உள்ளது.

    அதேநேரம் இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சார்பில் மறு ஆய்வு மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

    இதற்கிடையே, ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த மாதம் 17-ந் தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டபோது கோவிலுக்குள் நுழைய முயன்ற 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நிலக்கல் மற்றும் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதேபோல் கடந்த 5-ந் தேதி மாலை முதல் மறுநாள் மாலை வரை கோவில் நடை திறக்கப்பட்டபோதும் போராட்டங்கள் வெடித்தன.

    இந்த நிலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகியவற்றுக்காக அய்யப்பன் கோவில் நடை மீண்டும் வருகிற 17-ந் தேதி திறக்கப்படுகிறது. 2 மாதங்கள் வரை நடை திறக்கப்பட்டு இருக்கும். எனவே, மீண்டும் இந்த விவகாரம் விசுவரூபம் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து அனைத்து கட்சிகள் கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டமிட்டு இருக்கிறது.

    இதுபற்றி தேவசம் மந்திரி சுரேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், “சபரிமலை தொடர்பான பல்வேறு விஷயங்கள் பற்றி பேசுவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது பற்றி யோசித்து வருகிறோம். எனினும் இது தொடர்பாக இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் வெளியாகும் முடிவின் அடிப்படையில் இதுகுறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.
    ×