search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Re-opening"

    • விவசாயிகளிடமிருந்து நேரடியாக கிலோ 105.90 ரூபாய்க்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.
    • அரசு கொப்பரை கொள்முதல் மையங்களுக்கு வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ள நிலையில் தேங்காய் மற்றும் கொப்பரைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் தென்னை விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, பெதப்பம்பட்டி, பொங்கலூர், காங்கயம் ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் துவக்கப்பட்டது.

    கடந்த பிப்ரவரி 1-ந் தேதி முதல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கிலோ 105.90 ரூபாய்க்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. இம்மையங்கள் ஜூலை 31 வரை மட்டுமே செயல்பட்ட நிலையில், வெளி மார்க்கெட்டில் கொப்பரை விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் அரசு கொப்பரை கொள்முதல் மையங்களுக்கு வரத்து அதிகரித்து காணப்பட்டது. மாநில அளவில் கொப்பரை கொள்முதலில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தில் இருந்த நிலையில் மாவட்ட அளவில் உடுமலை அரசு கொப்பரை மையம் முதலிடத்திலும், பெதப்பம்பட்டி மையம் இரண்டாமிடத்திலும் இருந்தது.

    வெளி மார்க்கெட்டில் கொப்பரை விலை வீழ்ச்சியடைந்துள்ளதோடு தேங்காய்க்கும் விலை இல்லாததால் தென்னை விவசாயிகள் கடுமையாக பாதித்தனர்.எனவே அரசு கொப்பரை கொள்முதல் மையங்களை நீடிக்க வேண்டும், கூடுதல் விலை மற்றும் கட்டுப்பாடு இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் மத்திய அரசு செப்டம்பர் 30-ந்தேதி வரை கொப்பரை கொள்முதல் செய்ய அனுமதியளித்தது. இதனையடுத்து மாநில அரசு சார்பில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மையங்களில் கொப்பரை கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டதால் உடுமலை, பெதப்பம்பட்டி மையங்களில் மீண்டும் கொப்பரை கொள்முதல் துவங்கியுள்ளது.

    இது குறித்து திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் பாலச்சந்திரன் கூறியதாவது:- விலை ஆதாரத்திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியான விவசாயிகள் புகைப்படம், ஆதார் நகல், வங்கி பாஸ் புத்தகம் நகல், வி.ஏ.ஓ., உரிமைச்சான்று, அடங்கல், சிட்டா ஆகிய ஆவணங்களுடன் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர்களை அணுகலாம்.

    தற்போது பருவ மழை பெய்து வருவதால் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் உடைக்கும் எந்திரம் மற்றும் பண்ணைக்கழிவுகள் கொண்டு எரித்து சூடான காற்று வாயிலாக குறைந்த நேரத்தில், நேரடியாக கொப்பரை உற்பத்தி செய்யும் எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.விவசாயிகள் இந்த எந்திரங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் 3 கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் 3 கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

    தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது, தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு வீரபாண்டியபுரம் பஞ்சாயத்தை சேர்ந்த தெற்கு வீரபாண்டியபுரம், அ.குமரெட்டியாபுரம், டி.குமாரகிரி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள், கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வந்தது. தற்போது அந்த ஆலை மூடப்பட்டு உள்ளது. இதனால் எங்கள் கிராம மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுகிறார்கள். எங்களது அடிப்படை வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. வசதி இல்லாததால் உணவுக்கே வழியின்றி தவிக்கிறோம்.

    ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதன் மூலம் எங்களது உணவு தேவையும், அடிப்படை தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு, நாங்களும், எங்களை சுற்றியுள்ள குடும்பங்களும் பயன்பெற முடியும். எங்கள் கிராமத்தின் நிலையை கருத்தில் கொண்டு எங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி, படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி, கல்வி உதவித்தொகை என கடந்த 22 ஆண்டுகளாக செய்து வந்த ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாங்கள் ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 22 ஆண்டுகளாக டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறோம். இந்த ஆலை மூலமாக எங்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடையும் நிலையில், பல்வேறு அன்னிய சக்திகளின் தூண்டுதலின் காரணமாக போராட்டம் நடைபெற்று வன்முறையாக மாறியது. இதையடுத்து ஆலை மூடப்பட்டது. தூத்துக்குடியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் இயங்கி வருகின்றன. அவை அனைத்தும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தாமிரதாது, ராக்பாஸ்பேட், நிலக்கரி, தாதுமணல் ஆகியவற்றை கையாள பயன்படுத்தப்பட்டு வந்தது.

    இந்த ஆலையை சார்ந்து சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பல பிரச்சினைகளில் இருந்து மீளமுடியாமல் தவித்து வருகிறோம். பல ஆண்டுகளாக இந்த ஆலையில் வேலை செய்த நாங்கள் நல்ல உடல்தகுதியுடன் தான் உள்ளோம். ஆனால் வதந்திகளால் மக்கள் உணர்வு தூண்டப்பட்டு பலரின் வேலை பறிபோகும் அளவிற்கு போராட்டம் நடந்தது. ஸ்டெர்லைட் ஆலை சுகாதாரக்கேடு விளைவிக்கும் செயலை செய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அன்னிய சக்திகள் எங்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விட்டது. எங்கள் வாழ்வாதாரம் மீண்டும் மலர ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    ஈரோட்டில் மூடப்பட்ட 19 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
    ஈரோடு:

    தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதன்பின்னர் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்யப்பட்ட இடங்களில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், முறையான அறிவிப்பு வெளியிடாமல் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தால் மூட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

    ஐகோர்ட்டு உத்தரவின்படி ஈரோடு மாவட்டத்தில் 49 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் 125 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்தநிலையில் தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்பிறகு மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ஈரோடு மாநகர் பகுதியில் 19 இடங்களில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. அதன்படி, ஈரோடு பிரகாசம் வீதி, ஈரோடு பஸ் நிலையம் அருகில் வீரபத்திரா வீதி, நாராயணவலசு விவேகானந்தர்சாலை, பஸ் நிலையம் அருகில் சேலம் மெயின்ரோடு, ஈரோடு மேட்டூர்ரோடு அபிராமி திரையரங்கம் ரோட்டில் 2 கடைகள், மூலப்பட்டறை வ.உ.சி. பூங்கா எதிரில், திண்டல், சம்பத்நகர், நேதாஜிரோடு, சம்பத்நகர் அண்ணா திரையரங்கம் ரோடு, ஈரோடு பெருந்துறை ரோடு, பவானி ரோடு, வீரப்பம்பாளையம், ஈரோடு பஸ் நிலையம், அகில்மேடு வீதி, சூளை சத்திரோடு, மரப்பாலம் நேதாஜி ரோடு, வில்லரசம்பட்டி நசியனூர் ரோடு ஆகிய இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு நேற்று முதல் செயல்பட்டு வருகின்றன. 
    ×