search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் மூடப்பட்ட 19 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு
    X

    ஈரோட்டில் மூடப்பட்ட 19 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு

    ஈரோட்டில் மூடப்பட்ட 19 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
    ஈரோடு:

    தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதன்பின்னர் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்யப்பட்ட இடங்களில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், முறையான அறிவிப்பு வெளியிடாமல் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தால் மூட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

    ஐகோர்ட்டு உத்தரவின்படி ஈரோடு மாவட்டத்தில் 49 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் 125 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்தநிலையில் தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்பிறகு மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ஈரோடு மாநகர் பகுதியில் 19 இடங்களில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. அதன்படி, ஈரோடு பிரகாசம் வீதி, ஈரோடு பஸ் நிலையம் அருகில் வீரபத்திரா வீதி, நாராயணவலசு விவேகானந்தர்சாலை, பஸ் நிலையம் அருகில் சேலம் மெயின்ரோடு, ஈரோடு மேட்டூர்ரோடு அபிராமி திரையரங்கம் ரோட்டில் 2 கடைகள், மூலப்பட்டறை வ.உ.சி. பூங்கா எதிரில், திண்டல், சம்பத்நகர், நேதாஜிரோடு, சம்பத்நகர் அண்ணா திரையரங்கம் ரோடு, ஈரோடு பெருந்துறை ரோடு, பவானி ரோடு, வீரப்பம்பாளையம், ஈரோடு பஸ் நிலையம், அகில்மேடு வீதி, சூளை சத்திரோடு, மரப்பாலம் நேதாஜி ரோடு, வில்லரசம்பட்டி நசியனூர் ரோடு ஆகிய இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு நேற்று முதல் செயல்பட்டு வருகின்றன. 
    Next Story
    ×