search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் மீண்டும் திறப்பு - விவசாயிகளுக்கு அழைப்பு
    X

    கோப்புபடம்.

    அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் மீண்டும் திறப்பு - விவசாயிகளுக்கு அழைப்பு

    • விவசாயிகளிடமிருந்து நேரடியாக கிலோ 105.90 ரூபாய்க்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.
    • அரசு கொப்பரை கொள்முதல் மையங்களுக்கு வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ள நிலையில் தேங்காய் மற்றும் கொப்பரைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் தென்னை விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, பெதப்பம்பட்டி, பொங்கலூர், காங்கயம் ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் துவக்கப்பட்டது.

    கடந்த பிப்ரவரி 1-ந் தேதி முதல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கிலோ 105.90 ரூபாய்க்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. இம்மையங்கள் ஜூலை 31 வரை மட்டுமே செயல்பட்ட நிலையில், வெளி மார்க்கெட்டில் கொப்பரை விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் அரசு கொப்பரை கொள்முதல் மையங்களுக்கு வரத்து அதிகரித்து காணப்பட்டது. மாநில அளவில் கொப்பரை கொள்முதலில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தில் இருந்த நிலையில் மாவட்ட அளவில் உடுமலை அரசு கொப்பரை மையம் முதலிடத்திலும், பெதப்பம்பட்டி மையம் இரண்டாமிடத்திலும் இருந்தது.

    வெளி மார்க்கெட்டில் கொப்பரை விலை வீழ்ச்சியடைந்துள்ளதோடு தேங்காய்க்கும் விலை இல்லாததால் தென்னை விவசாயிகள் கடுமையாக பாதித்தனர்.எனவே அரசு கொப்பரை கொள்முதல் மையங்களை நீடிக்க வேண்டும், கூடுதல் விலை மற்றும் கட்டுப்பாடு இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் மத்திய அரசு செப்டம்பர் 30-ந்தேதி வரை கொப்பரை கொள்முதல் செய்ய அனுமதியளித்தது. இதனையடுத்து மாநில அரசு சார்பில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மையங்களில் கொப்பரை கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டதால் உடுமலை, பெதப்பம்பட்டி மையங்களில் மீண்டும் கொப்பரை கொள்முதல் துவங்கியுள்ளது.

    இது குறித்து திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் பாலச்சந்திரன் கூறியதாவது:- விலை ஆதாரத்திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியான விவசாயிகள் புகைப்படம், ஆதார் நகல், வங்கி பாஸ் புத்தகம் நகல், வி.ஏ.ஓ., உரிமைச்சான்று, அடங்கல், சிட்டா ஆகிய ஆவணங்களுடன் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர்களை அணுகலாம்.

    தற்போது பருவ மழை பெய்து வருவதால் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் உடைக்கும் எந்திரம் மற்றும் பண்ணைக்கழிவுகள் கொண்டு எரித்து சூடான காற்று வாயிலாக குறைந்த நேரத்தில், நேரடியாக கொப்பரை உற்பத்தி செய்யும் எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.விவசாயிகள் இந்த எந்திரங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×