என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palladam murder"

    • கொலை சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.
    • குற்றவாளியை விரைவில் கைது செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவரது சித்தப்பா பழனிசாமியின் மகன் மோகன்ராஜ் (45). இவர் மாதப்பூர் பஞ்சாயத்து பா.ஜ.க., கிளை தலைவராக உள்ளார்.

    நேற்றி முன்தினம் இரவு அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த கும்பல் திடீரென வீட்டிற்குள் புகுந்து செந்தில்குமார், மோகன்ராஜ் , அவரது தாயார் புஷ்பவதி(67), புஷ்பவதியின் சகோதரி ரத்தினம்மாள்(58) ஆகியோரை வெட்டியது. இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில், பல்லடம் நால்வர் கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    மேலும், இந்த சம்பவத்தில் ஒருவர் கைதான நிலையில் மற்ற குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    • பல்லடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது.
    • இரவு நேரங்களில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் சேமலை கவுண்டன்பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமேலு, மகன் செந்தில்குமார் ஆகியோர் கடந்த 29-ந்தேதி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டனர். இக்கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இன்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பல்லடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது. இக்கொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை முதலும் முடிவுமாக இருக்க வேண்டும்.

    அப்போது மற்றவர்கள் பயப்படுவார்கள். தமிழ்நாடு காவல் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொலையாளிகளை பிடிக்க 14 தனிப்படை என்பது பிரம்மாண்ட விசாரணை முறை. இருப்பினும் இந்த கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். சி.பி.ஐ., சிறப்பான குற்ற புலனாய்வு அமைப்பு. எனவே அதற்கு தமிழக அரசு அனுமதி தர வேண்டும். போதையால்தான் பெரும்பாலான குற்றச்சம்பவங்கள் நடக்கிறது. எனவே தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை தடுக்க வேண்டும்.

    தோட்டத்து பகுதியில் வயதானவர்கள்தான் வசித்து வருகிறார்கள். எனவே இரவு நேரங்களில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உயிரிழந்த செந்தில்குமாரின் மனைவி கவிதா அண்ணாமலையிடம் கூறுகையில், இரவு முழுவதும் கடும் வேதனையுடன் இருந்துள்ளனர். அந்த உயிர் வேதனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும். குற்றம் செய்தவர்களை எத்தனை நாட்கள் ஆனாலும் பிடித்து தண்டிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • சைபர் கிரைம் போலீசார் கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மற்றும் வந்து சென்ற செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தினர்.
    • சேமலைக்கவுண்டம்பாளையத்திற்கு அருகாமையில் உள்ள 20 க்கும் மேற்பட்ட ஊர்களை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம், அவிநாசி பாளையம் அடுத்த சேமலை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 75). இவரது மனைவி அலமேலு (73), மகன் செந்தில்குமார் (46) . கடந்த மாதம் 28-ந்தேதி இரவு சேமலைகவுண்டம்பாளையம் தோட்டத்து வீட்டிற்கு வந்த கும்பல் 3 பேரையும் இரும்பு ராடால் தாக்கி கொடூரமாக கொலை செய்துவிட்டு 8 பவுன் தங்க நகையை திருடி சென்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    கொலையாளிகளை பிடிக்க 16 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை பிடிக்க பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தினர், உறவினர்களின் கைரேகைகளை சேகரித்து விசாரித்தனர். 2011 ம் ஆண்டு முதல் ஆதாய கொலை வழக்கில் தொடர்புடையவர்களின் பட்டியலை சேகரித்தும் விசாரித்தனர்.

    சென்னிமலை ஆதாயக்கொலையில் தொடர்புடையவர்களின் நெருங்கியவர்கள் யாரேனும் இந்த கொலையை அரங்கேற்றியிருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டது. மேலும், கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய 856 பேரின் பட்டியலை சேகரித்து விசாரித்தனர். பல்வேறு பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட சிசிடிவி., கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    சைபர் கிரைம் போலீசார் கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மற்றும் வந்து சென்ற செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தினர். மேலும் சேமலைக்கவுண்டம்பாளையத்திற்கு அருகாமையில் உள்ள 20 க்கும் மேற்பட்ட ஊர்களை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அந்த ஊர்களில் வழக்கு உள்ளவர்களின் விபரங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.

    உறவினர்கள் போல் யாரேனும் சந்தேகத்திற்கிடமாக வந்து சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. ரோட்டோரம் கம்பளி, போர்வை விற்பனை செய்பவர்களிடம் கைரேகை ஆதார் விபரங்களை பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் கொலை நடந்து 18 நாட்களை கடந்தும் இதில் தொடர்புடையவர்களை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். தோட்டத்து வீட்டில் சி.சி.டி.வி. கேமரா இல்லாததால் கொலையாளிகள் எளிதில் தப்பியுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க கோவை சரக டி.ஐ.ஜி., செந்தில்குமார், திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா ஆகியோர் முழு நேரமும் பல்லடத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வடமாநில கொள்ளை கும்பல் இதில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் தனிப்படையை சேர்ந்த ஒரு குழுவினர் வடமாநிலங்களில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொங்கலூர் சேமலைகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலாளி பால்ராஜ் ( 45) என்பவர் குடும்பத்தோடு வந்து மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    படுகொலை செய்யப்பட்ட தெய்வசிகாமணி தோட்டத்தில் எனது தந்தை சுப்பன் வேலை செய்து வந்ததால், நான் அடிக்கடி மருந்து அடிப்பது உள்ளிட்ட வேலைக்கு சென்று வந்தேன். இந்த கொலை சம்பவம் தொடர்பாக என்னை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசார் அடிக்கடி அழைத்து சென்று, நான் தான் காரணம் எனக்கூறி துன்புறுத்துகிறார்கள். வாக்குமூலம் கொடுக்கவும் மிரட்டி நிர்ப்பந்திக்கிறார்கள்.

    மேலும் எனது மனைவி, அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகிறார். அவரை வேலையில் இருந்து நீக்கி விடுவோம் எனவும் மிரட்டுகிறார்கள். எனவே எங்களை மிரட்டும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    பல்லடம் அருகே கொலை செய்யப்பட்டு பேரலுக்குள் திணிக்கப்பட்டிருந்த இளம்பெண் குறித்து போலீசார் விசாரணையில் அடையாளம் காணப்பட்டது.
    பல்லடம்:

    பல்லடம் கிரிச்சி பாளையத்தில் செந்தில் (வயது 40) என்பவர் இளம்பெண்ணுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த சில வாரங்களாக அந்த வீடு பூட்டிய நிலையிலேயே இருந்தது. வீடு பூட்டியே இருப்பதால் அந்த வீட்டில் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் குடியேற முடிவு செய்து வீட்டை சுத்தம் செய்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த பேரலில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் திணித்து வைக்கப்பட்டிருந்தது.

    காமநாயக்கன்பாளையம் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். பெண்ணின் கையில் எஸ்.எல். என்ற ஆங்கில எழுத்து பச்சை குத்தப்பட்டிருந்தது. தலைமறைவாக உள்ள செந்தில் பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் உள்ள மில்லில் பிட்டராக வேலை செய்து வந்தது தெரியவந்தது. அங்கு வேலை செய்த மற்ற பெண் தொழிலாளர்களிடம் பச்சை குறித்து கேட்டபோது இங்கு வேலை செய்த லதா என்பவர் கையில் எஸ்.எல். என்று பச்சை குத்தியிருந்தார் என்று கூறினர்.

    லதா குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது லதா கோவை மாவட்டம் அன்னூர் அடுத்துள்ள சாவக்காட்டுப் பாளையத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர் களிடம் நடத்திய விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது

    லதாவுக்கும், தாராபுரத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் திருமணமானது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் பெயரும், தனது பெயரும் சேர்த்து ஆங்கில எழுத்தில் எஸ்.எல். என்று பச்சை குத்தியுள்ளார்.

    இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர். அதன்பின்னர் பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார்.

    அப்போது அங்கு பிட்டராக இருந்த தாராபுரம் சின்னகாம்பாளையத்தை சேர்ந்த செந்தில் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தான் கிரிச்சிபாளையத்தில் உள்ள வாடகை வீட்டில் குடியேறிய சில வாரங்களில் லதா கொலை செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள செந்திலை பிடித்தால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் கூறினர்.
    பல்லடம் அடுத்த காமநாயக்கன்பாளையம் அருகே இளம்பெண்ணை கொன்று உடலை பேரலுக்குள் திணத்த மில் தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
    பல்லடம்:

    பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் அருகே உள்ள இலவந்தி ஊராட்சி கிரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 58) விவசாயி. இவருக்கு கிரிச்சிபாளையத்தில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது.

    இந்த வீட்டில் அந்த பகுதியில் உள்ள நூல் மில்லில் வேலை பார்த்து வந்த செந்தில் (40) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். அவருடன் ஒரு இளம்பெண்ணும் அந்த வீட்டில் குடியிருந்ததாக தெரிகிறது. ஒருசில மாதங்கள் அவர்கள் இருவரும் அங்கு குடியிருந்து வந்தனர்.

    கடந்த சில வாரங்களாக அந்த வீடு பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளது. அவ்வப்போது செந்தில் மட்டும் அங்கு வந்து சென்றுள்ளார்.

    வீடு பூட்டிய நிலையிலேயே இருப்பதால் அந்த பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு இந்த வீட்டை வாடகைக்கு தரும்படி அதன் உரிமையாளர் ராமசாமியிடம் கேட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டை பிரகாசுக்கு வாடகைக்கு விடுவதற்கு ஒப்பு கொண்டுள்ளார். மேலும், அந்த வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து ஒரு அறையில் வைத்து விட்டு, நீங்கள் வீட்டை வாடகைக்கு எடுத்து கொள்ளுங்கள் என்றும் பிரகாஷிடம் அவர் கூறியுள்ளார்.

    இதையடுத்து வீட்டில் உள்ள பொருட்களை அங்குள்ள ஒரு அறையில் பிரகாஷ் எடுத்து வைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பேரலை தூக்கி அறையில் கொண்டு வைக்க முயன்றார். ஆனால் அந்த பேரலை அவரால் நகர்த்த முடியவில்லை.

    பேரலின் வாய்ப்பகுதி அட்டை வைத்து இறுக்கமாக கட்டி அடைக்கப்பட்டிருந்தது. இதில் தண்ணீர் இருக்கலாம் என்று எண்ணிய அவர் அந்த பேரலின் வாய்பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அட்டையை திறந்து பார்த்துள்ளார். அப்போது அந்த பேரலில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.

    பேரலின் உள்ளே பார்த்த போது பெண் ஒருவரின் பிணம் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அலறி சத்தம்போட்டவாறு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். பின்னர் இதுகுறித்து உடனடியாக வீட்டின் உரிமையாளருக்கும், காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார்.

    தகவலின்படி அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த பேரலில் இருந்த பெண்ணின் பிணத்தை வெளியே எடுத்து பார்த்தனர். அழுகிய நிலையில் இருந்த அந்த பெண் சுமார் 35 வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வாடகைக்கு தங்கிய செந்தில் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று அங்குள்ளவர்களுக்கு தெரியவில்லை.

    விசாரணையில் வாடகைக்கு இருந்தவர் தாராபுரம் சின்னக்காம்பாளையத்தை சேர்ந்த செந்தில் என்பது தெரியவந்தது. அவரை தேடியபோது அவர் தலைமறைவாக உள்ளது தெரியவந்தது. செந்தில் தான் இளம்பெண்ணை கொன்று பேரலுக்குள் திணித்து மண்ணைபோட்டு மூடியிருக்க வேண்டும் என்று போலீசார் முடிவு செய்தனர். அதன்படி செந்திலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    பல்லடம் அருகே மின்வாரிய தொழிலாளரை அடித்து கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள செம்பியன் கோவில் ஏ.டி. காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (39). இவரது தம்பி கஜேந்திரன் (29). இவர்கள் இருவரும் பெருந்தொழுவு மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று மாலை வேலை முடிந்து இருவரும் வீடு திரும்பினார்கள். அப்போது வழியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினார்கள்.

    பின்னர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டிற்கு வந்த பின்னரும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இதனை அவர்களது தந்தை சுப்பிரமணி கண்டித்தார். ஏன் இருவரும் சண்டை போட்டு கொள்கிறீர்கள் என சத்தம் போட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கஜேந்திரன் தனது தந்தையை அடிக்க பாய்ந்தார். இதனை ரமேஷ் தடுத்தார். அப்போது இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த கஜேந்திரன் அங்கிருந்த இரும்பு ராடை எடுத்து தனது அண்ணன் ரமேஷ் தலையில் தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரமேசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அவினாசிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கஜேந்திரனை கைது செய்தனர்.கொலை செய்யப்பட்ட ரமேசுக்கு பூங்கொடி என்ற மனைவியும், சுதாகர் (12) என்ற மகனும் உள்ளனர்.
    ×