பல்லடத்தில் 3 பேர் கொலை: சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்- அண்ணாமலை

பல்லடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது. இரவு நேரங்களில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
பல்லடத்தில் 3 பேர் கொலை: சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்- அண்ணாமலை
Published on

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் சேமலை கவுண்டன்பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமேலு, மகன் செந்தில்குமார் ஆகியோர் கடந்த 29-ந்தேதி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டனர். இக்கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில் இன்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பல்லடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது. இக்கொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை முதலும் முடிவுமாக இருக்க வேண்டும்.

அப்போது மற்றவர்கள் பயப்படுவார்கள். தமிழ்நாடு காவல் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொலையாளிகளை பிடிக்க 14 தனிப்படை என்பது பிரம்மாண்ட விசாரணை முறை. இருப்பினும் இந்த கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். சி.பி.ஐ., சிறப்பான குற்ற புலனாய்வு அமைப்பு. எனவே அதற்கு தமிழக அரசு அனுமதி தர வேண்டும். போதையால்தான் பெரும்பாலான குற்றச்சம்பவங்கள் நடக்கிறது. எனவே தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை தடுக்க வேண்டும்.

தோட்டத்து பகுதியில் வயதானவர்கள்தான் வசித்து வருகிறார்கள். எனவே இரவு நேரங்களில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உயிரிழந்த செந்தில்குமாரின் மனைவி கவிதா அண்ணாமலையிடம் கூறுகையில், இரவு முழுவதும் கடும் வேதனையுடன் இருந்துள்ளனர். அந்த உயிர் வேதனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும். குற்றம் செய்தவர்களை எத்தனை நாட்கள் ஆனாலும் பிடித்து தண்டிக்க வேண்டும் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com