search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan Parliament election"

    பாகிஸ்தானில் இன்று 35 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். #PakistanByElection
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள், ஒரு தொகுதியை மட்டும் வைத்துக்கொண்டு எஞ்சிய தொகுதிகளில் ராஜினாமா செய்தனர். அந்த வகையில் அங்கு 11 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 24 மாகாணசபை தொகுதிகள் என மொத்தம் 35 தொகுதிகள் காலியாகின.

    இந்த தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்கின்றனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும்.

    இடைத்தேர்தல் நடைபெறும் 35 தொகுதிகளில் 372 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதிகளில் மொத்தம் 50 லட்சத்துக்கும் மேலான வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 23 லட்சம் பேர் பெண் வாக்காளர்கள், 27 லட்சம் பேர் ஆண் வாக்காளர்கள் ஆவர். பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கைதான் அதிகம்.


    இன்றைய இடைத்தேர்தலுக்காக 5 ஆயிரத்து 193 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 848 வாக்குச்சாவடிகள் மிகுந்த பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  வாக்குப்பதிவு முடிவடைந்த உடனே அந்தந்த வாக்குச்சாவடிகளிலேயே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்பின்னர் ஒட்டுமொத்த முடிவுகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வெளியிடுவார்கள்.

    பாகிஸ்தானில் நடந்த பொதுத்தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்து ஆட்சியைப் பிடித்த நிலையில், சந்திக்கிற முதல் இடைத்தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanByElection
    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பகிரங்கமாக வாக்களித்த விவகாரத்தில் அந்நாட்டின் வருங்கால பிரதமர் இம்ரான் கான் தேர்தல் கமிஷனிடம் இன்று மன்னிப்பு கடிதம் அளித்தார். #ImranKhan #ImranKhanapology
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ- இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

    அதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவரான இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இவர் இஸ்லாமாபாத் எம்.பி. தொகுதி உள்பட 5 தொகுதிகளில் போட்டியிட்டு மூன்றில் வெற்றி பெற்றார்.

    தேர்தல் தினத்தன்று இஸ்லாமாபாத்  தொகுதியில் வாக்களித்த இம்ரான் கான் அனைவரும் பார்க்கும்படி பகிரங்கமாக தனது வாக்கை பதிவு செய்த போட்டோ மற்றும் வீடியோ அனைத்து பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாகிஸ்தான் தேர்தல் கமி‌ஷனில் புகார் செய்யப்பட்டது.

    தேர்தல் கமி‌ஷனின் 4  உயரதிகாரிகள் கொண்ட அமர்விடம் பதில் அளிக்கும்படி இம்ரான் கானுக்கு தலைமை தேர்தல் கமி‌ஷனர் நோட்டீஸ் அனுப்பினார்.

    அதற்கு இம்ரான் கான் சார்பில் அவரது வழக்கறிஞர் பாபர் அவான் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில், இம்ரான்கான் வாக்குப்பதிவு செய்த போட்டோவும், வீடியோவும் அவரது அனுமதியின்றி எடுக்கப்பட்டது.

    இம்ரான்கான் வாக்களித்த போது தொண்டர்களின் கூட்ட நெரிசலால் வாக்கை பதிவு செய்வதை மறைப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த திரை கீழே விழுந்துவிட்டது. எனவே பகிரங்கமாக வாக்களித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என கூறப்பட்டிருந்தது.

    ஆனால், அவரது பதிலை தேர்தல் கமி‌ஷன் ஏற்றுக் கொள்ளவில்லை மாறாக பகிரங்கமாக வாக்களித்தற்காக இம்ரான்கான் மன்னிப்பு கேட்டு தனது கையொப்பத்துடன் பிரமாண பத்திரம்  தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

    இதைதொடர்ந்து, தேர்தல் கமிஷனின் 4 உயரதிகாரிகள் கொண்ட அமர்வின் முன்னர் இம்ரான் கானின் கையொப்பத்துடன் கூடிய பிரமாண பத்திரத்தை அவரது வழக்கறிஞர் இன்று தாக்கல் செய்தார்.

    பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின்படி, வெளிப்படையாக வாக்களிப்பது குற்றமாகும். இதற்கு அதிகபட்சமாக ஆறுமாத சிறை காவல் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இவை இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. #ImranKhan #ImranKhanapology 
    பாகிஸ்தானில் அரசு ஹெலிகாப்டரை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் இம்ரான் கான் 7-ம் தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தெக்ரிக்-இ -இன் சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் வருகிற 11-ந்தேதி அந்நாட்டின் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

    இந்த நிலையில் அவர் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் கைபர்- பக்துன்குவா மாகாணத்தில் இவரது பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி ஆட்சி நடத்தியது.

    அப்போது அவர் அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டரை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மொத்தம் 72 மணி நேரம் உபயோகித்து இருப்பதாகவும் அதற்குரிய வாடகை கட்டணம் ரூ.2 கோடியே 17 லட்சம் செலுத்தவில்லை என்றும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தேசிய பொறுப்புடமை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இம்ரான்கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    தேர்தல் பணியில் இருந்ததால் அவர் ஆஜராகவில்லை. அவரது வக்கீல் ஆஜரானார். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வருகிற 7-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக இம்ரான் கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது அவரிடம் கேள்விகள் கேட்கப்பட உள்ளன.

    கைபர் பக்துன்குவா மாகாண முதல்-மந்திரியாக பெர்வேஷ்கட்டாக் பதவி வகித்தார். அவர் மற்றும் 4 பேர் இந்த வழக்கில் ஏற்கனவே ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். #ImranKhan
    இம்ரான்கானின் வெற்றியை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளாத நிலையில், இந்திய பிரதமர் மோடி அவரது தேர்தல் வெற்றியை வரவேற்று வாழ்த்து தெரிவித்து இருப்பதை பாகிஸ்தான் அரசு வரவேற்றுள்ளது. #ImranKhan #Modi #Pakistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் 118 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தெக்ரீக்-இர்-இன்சாப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் வருகிற 11-ந் தேதி பிரதமராக பதவி ஏற்கிறார்.

    இதைதொடர்ந்து அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது பாகிஸ்தானில் ஜனநாயகம் ஆழமாக வேரூன்றும் என மோடி நம்பிக்கை தெரிவித்தார். பாகிஸ்தானுடன் அமைதி மற்றும் வளர்ச்சியை அண்டை நாடான இந்தியா விரும்புவதாகவும், இரு நாடுகளும் புதிய உறவை தொடங்க விழைவதாகவும் கூறினார்.

    அதற்கு பதில் அளித்த இம்ரான்கான், “இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளை போர்மூலம் தீர்க்க முடியாது. பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ள விரும்புவதாகவும்” தெரிவித்தார். இத்தகவல் மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    கோப்புப்படம்

    இம்ரான்கானின் வெற்றியை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிரதமர் மோடி இம்ரான்கானின் தேர்தல் வெற்றியை வரவேற்று வாழ்த்து தெரிவித்து இருப்பதை பாகிஸ்தான் அரசு வரவேற்றுள்ளது.

    இந்தியாவின் அறிக்கை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாக உள்ளது. இத்தகைய போக்கு மாறாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம் என அதிகாரிகள் தரப்பு கருதுகிறது. #ImranKhan #Modi #Pakistan
    கிரிக்கெட் கேப்டனாக இருந்தபோது செய்ததுபோல் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் துணிச்சலான முடிவுகளை எடுப்பார் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரான அசாருதீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #imrankhan #Azharuddin
    ஐதராபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் ‘தெஹ்ரிக் இ இன்சாப்’ கட்சியின் வெற்றியின் மூலம் அந்நாட்டின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கான் விரைவில் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முஹம்மது அசாருதீன், இம்ரான் கான் மீதான தனது எதிர்பார்ப்பு குறித்து மனம் திறந்துள்ளார். இந்த நிலைக்கு இம்ரான் கான் வளர்ந்து வந்துள்ள அரசியல் பாதை ரோஜாப்பூக்களால் ஆனதல்ல, முட்கள் நிறைந்த கரடுமுரடனான பாதையை அவர் கடந்து வந்துள்ளார் என அசாருதீன் குறிப்பிட்டுள்ளார்.

    பிரபல செய்தி நிறுவனமான பி.டி.ஐ.க்கு அசாருதீன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அவர் எடுத்த முடிவுகள் மிகவும் துணிச்சலாகவும், தனித்தன்மை கொண்டதாகவும், சாதகமானதாகவும் அமைந்திருந்தது. (அவரது நாட்டின் பிரதமரான பிறகும்) இதேபோன்ற முடிவுகளை அவர் எடுக்க வேண்டும்.

    ஆனால், இதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்குவதும் ஒரு நாட்டை தலைமையேற்று வழிநடத்துவதும் முற்றிலுமாக இரு வேறுபட்ட விவகாரம் என்பதால் இதில் அவர் என்ன செய்கிறார்? என்று நாம் பார்க்க வேண்டியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    இம்ரான் கான் பிரதமராக பொறுப்பேற்றால் இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் சாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அசாருதீன், ‘ஒரு கிரிக்கெட் வீரர் ஆட்சியை பிடிப்பது மிகவும் அரிதான காரியம். முதல்கட்டமாக பாகிஸ்தானில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை அவர் தீர்க்க வேண்டியுள்ளது, அதன் பிறகுதான் மற்ற பிரச்சனைகள் தொடர்பாக அவர் திரும்பிப் பார்க்க முடியும்.

    ஆனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே இத்தனை பூசல்களும், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவல்களும் தொடர்ந்துவரும் நிலையில் அமைதி பேச்சுவார்த்தை என்பது மிகவும் சிரமம் என்றே நான் கருதுகிறேன். முதலில் இதெல்லாம் நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் பல்வேறு விவகாரங்களை நேர்படுத்த வேண்டியுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். #imrankhan #Azharuddin
    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமராவார் என்று மு‌ஷரப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Musharraf #ImranKhan #pakistanelection

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் மு‌ஷரப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக்-,இ- இன்சாப் கட்சி தலைவரான இம்ரான்கான் வெற்றி பெறுவார்.

    எனவே இவரது கட்சியில் நிறைய பேர் சேர்ந்துள்ளனர். தேர்தலுக்கு பிறகு வெற்றி பெற்ற பின் மேலும் பலர் இணைவார்கள். ஒருவேளை தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் எனது அகில பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தனது நிலையில் இருந்து மாறி ஆட்சி அமைக்க உதவி செய்யும்.

    என்னை பொறுத்த வரை பிரதமர் பதவிக்கு இம்ரான்கான் தகுதியானவர் ஆவார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் மரியம் நவாஸ் அரசியலில் முதிர்ச்சியற்றவர். இவரால் பிரதமர் பதவியில் இருந்து கொண்டு இம்ரான்கானை விட சிறப்பாக ஆட்சி நடத்த முடியாது.

    இம்ரான்கானிடம் பல நல்ல தகுதிகள் உள்ளன. ஆசிப் சர்தாரி மற்றும் நவாஸ் செரீப்பைவிட இவர் சிறந்தவர் என கருதுகிறேன். பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் ஒரு உண்மையான மனிதர். மிக குறைந்த அளவே ஊழல் குற்றச்சாட்டு இவர் மீது உள்ளது. மேலும் இவர் நிறைய வி‌ஷயங்களை கவனிக்க வேண்டும். பேச்சை குறைக்க வேண்டும்.

    வெளிநாட்டில் இருந்து திரும்புவது குறித்து நான் இன்னும் முடிவு செய்ய வில்லை. பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்க்க காத்திருக்கிறேன். எனவே நாடு (பாகிஸ்தான்) திரும்புவது குறித்து சில நாட்களில் முடிவெடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Musharraf #ImranKhan #pakistanelection

    ×