search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan by election"

    பாகிஸ்தானில் இன்று 35 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். #PakistanByElection
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள், ஒரு தொகுதியை மட்டும் வைத்துக்கொண்டு எஞ்சிய தொகுதிகளில் ராஜினாமா செய்தனர். அந்த வகையில் அங்கு 11 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 24 மாகாணசபை தொகுதிகள் என மொத்தம் 35 தொகுதிகள் காலியாகின.

    இந்த தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்கின்றனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும்.

    இடைத்தேர்தல் நடைபெறும் 35 தொகுதிகளில் 372 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதிகளில் மொத்தம் 50 லட்சத்துக்கும் மேலான வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 23 லட்சம் பேர் பெண் வாக்காளர்கள், 27 லட்சம் பேர் ஆண் வாக்காளர்கள் ஆவர். பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கைதான் அதிகம்.


    இன்றைய இடைத்தேர்தலுக்காக 5 ஆயிரத்து 193 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 848 வாக்குச்சாவடிகள் மிகுந்த பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  வாக்குப்பதிவு முடிவடைந்த உடனே அந்தந்த வாக்குச்சாவடிகளிலேயே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்பின்னர் ஒட்டுமொத்த முடிவுகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வெளியிடுவார்கள்.

    பாகிஸ்தானில் நடந்த பொதுத்தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்து ஆட்சியைப் பிடித்த நிலையில், சந்திக்கிற முதல் இடைத்தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanByElection
    ×