search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nalini murugan"

    • 16 ஆண்டுகாலமாக எனது மகளை நான் பார்க்கவில்லை.
    • சாந்தன் இலங்கைக்கு செல்வதாக கூறுகிறார்.

    திருச்சி

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலையான இலங்கையை சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டு மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தனித்தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் முருகனை பார்ப்பதற்காக அவரது மனைவி நளினி நேற்று காலை சென்னையில் இருந்து ரெயில் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் திருச்சி சிறப்பு முகாமிற்கு வந்தார். அவருடன், 3 பெண்கள் மற்றும் வக்கீல்கள் உள்பட 7 பேர் வந்தனர். இவர்கள் அனைவரும் நேற்று காலை 10.20 மணி அளவில் முகாமிற்குள் சென்று முருகனை சந்தித்து பேசினார்கள்.

    இதனை தொடர்ந்து நேற்று மாலை 5.10 மணிஅளவில் நளினி சிறப்பு முகாமில் இருந்து வெளியே வந்தார். மத்திய சிறை வாசலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் கேள்விபட்டபடி, சிறைக்குள் 4 பேரும் உண்ணாவிரதம் இருக்கவில்லை. இத்தனை ஆண்டுகாலம் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் திடீரென மீண்டும் அவர்களை சிறப்பு முகாமில் அடைத்ததால் முதலில் ஒரு நெருக்கடியான சூழல் இருந்தது. இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. மத்திய-மாநில அரசுகள் விரைந்து அவர்களை விருப்பப்படும் நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எனது கணவரை லண்டனுக்கு அனுப்பி விடும்படி கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஏனென்றால் அங்கு எங்கள் மகள் வசிக்கிறார். 16 ஆண்டுகாலமாக எனது மகளை நான் பார்க்கவில்லை. அதனால் நாங்கள் மகளுடன் இருக்க ஆசைப்படுகிறோம். சாந்தன் இலங்கைக்கு செல்வதாக கூறுகிறார். ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் எந்த நாட்டிற்கு செல்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.

    முதல்-அமைச்சரை நேரில் சென்று சந்திக்க வேண்டும் என்று கிடையாது. அவரே அனைத்தையும் பார்த்து கொள்கிறார். எங்களை வெளிநாடு அனுப்புவதற்காக பணிகளை அரசு சார்பில் மும்முரமாக செய்து வருவதாக தான் நினைக்கிறேன். பல ஆண்டுகளாக சிறையில் கழித்து வந்தவர்களை வெளியே அனுப்பாமல் மீண்டும் சிறப்பு முகாமில் அடைத்து வைப்பதை பார்க்கும்போது மனதுக்கு கஷ்டமாக தான் இருக்கிறது.

    அவர்களை வெளியே விட்டால் சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறுவது தவறு. ஏனென்றால் முகாமில் இருப்பவர்களின் குடும்பத்தினர் பலரும் வெளியே வசித்து கொண்டு தானே இருக்கிறார்கள். அவர்களால் சமூகத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை தானே. அதுபோல தானே முகாமில் இருப்பவர்களையும் வெளியே வாழவைக்க வேண்டும்.

    நான் காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர். எனது தாயாருக்கு காந்தி தான் பெயர் வைத்தார். இந்திராகாந்தி இறந்தபோது கூட எங்கள் குடும்பத்தில் யாரும் சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தோம். ராஜீவ்காந்தி இறந்தபோதும் 3 நாட்களாக சமைக்காமல் அழுது கொண்டு தான் இருந்தோம். ஆனால் அவருடைய மரணம் தொடர்பான குற்றத்தில் நான் ஈடுபட்டதாக என் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இது சரியானால் தான் என் மனதுக்கு நிம்மதி.

    சிறையில் இருந்து வெளியே வந்தபிறகும் எனது கணவரை முகாமில் வைத்துள்ளது எனது மனதை பாதித்துள்ளது. தற்போது எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நாங்கள் வெளிநாட்டுக்கு செல்வதற்காக தூதரகத்துக்கு அலைய வேண்டி உள்ளது. எனது கணவருக்கு தூக்குதண்டனை வந்தபோது, அவர் தூக்கு தண்டனையில் இருந்து விடுதலை பெற வேண்டி கோவில்களில் தீமிதிக்க நேர்த்திக்கடன் இருந்தது. திருப்பதி கோவிலுக்கு நடந்தே செல்வதாக வேண்டுதல் இருந்தது. அதை எல்லாம் நிறைவேற்ற வேண்டும்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் என்று யாரையும் சொல்லமுடியாது. அப்படி எதுவும் எனக்கு தெரியவில்லை. அவ்வாறு காட்டி கொடுக்கும் பழக்கமும் எனக்கு கிடையாது. அப்படி இருந்திருந்தால் 30 ஆண்டுகள் சிறையில் கழித்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகையால் ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகள் யாரென்று எனக்கு தெரியாது. தற்போது இலங்கையில் நெருக்கடியான சூழல் இருப்பதால் அங்கு செல்வது சரியாக இருக்குமா? என தெரியவில்லை.

    சிறையில் பிரியங்கா காந்தி என்னை சந்தித்தபோது, ராஜீவ் கொலை வழக்கு குறித்து என்னிடம் கேட்டார். அப்போது எனக்கு தெரிந்த விஷயங்களை அவரிடம் கூறினேன். அது அவருக்கு திருப்தியாக இருந்ததா? என எனக்கு தெரியாது. அதை அவரிடம் தான் கேட்க வேண்டும். சிறப்பு முகாமில் எனது கணவர் உள்பட 4 பேரை சந்தித்து பேசியது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை சந்தித்த அவர்களுக்கு நிறைய ஆறுதல் தேவைப்பட்டது. அவர்களை விரைந்து வெளியே எடுப்பதற்கான பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நளினி சிறப்பு முகாமிற்கு வருவதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கலெக்டர் பிரதீப்குமார் நேரில் சென்று சிறப்பு முகாமில் ஆய்வு நடத்தினார்.

    • இந்த கொடிய சம்பவம் அரங்கேறி, 31 ஆண்டுகள் கடந்து விட்டன.
    • ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது.

    அது, 1991-ம் ஆண்டு

    மே மாதம் 21-ந் தேதி இரவு 10.10 மணி.

    தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் இந்திய வரலாற்றின் கறுப்பு அத்தியாயம் ஒன்று பதிவாகப்போகிறது என்று யாரேனும் நினைத்துப்பார்த்தது இல்லை.

    அந்த நாளில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அமைதிப்பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது குண்டுவெடிப்பில் சிக்கி பலியானது, உலகையே உலுக்கி விட்டது.

    இந்த கொடிய சம்பவம் அரங்கேறி, 31 ஆண்டுகள் கடந்து விட்டன. இன்றைய தலைமுறை வாசகர்களுக்காக அந்த கருப்பு அத்தியாயத்தின் பக்கங்களில் இருந்து சில துளிகளை தூசு தட்டித்தருகிறோம்.

    ராஜீவ் காந்தி மட்டும் அன்றைய நாளில் இந்த மண்ணில் மரணத்தைத் தழுவிவிடவில்லை. அவரோடு சேர்ந்து தர்மன் (போலீஸ்காரர்), சாந்தனி பேகம் (மகளிர் காங்கிரஸ் தலைவர்), ராஜகுரு (போலீஸ் இன்ஸ்பெக்டர்), சந்திரா (போலீஸ்காரர்), எட்வர்டு ஜோசப் (போலீஸ் இன்ஸ்பெக்டர்), கே.எஸ்.முகமது இக்பால் (போலீஸ் சூப்பிரண்டு), லதா கண்ணன் (மகளிர் காங்கிரஸ் தொண்டர்), கோகிலவாணி (லதா கண்ணனின் 10 வயது மகள்), டேரில் ஜூட் பீட்டர் (கூட்டத்துக்காக சென்றவர்), முனுசாமி (முன்னாள் எம்.எல்.சி), சரோஜா தேவி (கல்லூரி மாணவி), பிரதீப் குப்தா (ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரி), எத்திராஜூ, முருகன் (போலீஸ்காரர்), ரவிச்சந்திரன் (கறுப்பு பூனை கமாண்டோ) என 15 பேர் (மொத்தம் 16 பேர்) உருக்குலைந்து போய் மரணத்தைத் தழுவியது வரலாற்று சோகம்.

    அப்போது மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த அன்றைய பிரதமர் சந்திரசேகர் அரசு, மறு நாளிலேயே (22 மே 1991) ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. டி.ஆர்.கார்த்திக்கேயன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து துப்பு துலக்கப்பட்டது.

    ராஜீவ் கொலையை அரங்கேற்றிய சதிகாரி தாணு, ராஜீவ்காந்தியுடனும், மற்றவர்களுடனும், தான் நடத்திய குண்டுவெடிப்பில் பலியானார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கியவர்கள் ஒருவர் இருவரலல்ல, முருகன் என்ற ஸ்ரீஹரன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், பேரறிவாளன் உள்பட மொத்தம் 41 பேர். 15 பேர் விசாரணை காலத்திலேயே இறந்து விட்டனர்.

    எஞ்சிய 26 பேர் மீதான வழக்கை விசாரிக்க சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தடா கோர்ட்டு அமைக்கப்பட்டது. இந்த கோர்ட்டில்தான் 26 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை விதித்து 1998-ம் ஆண்டு, ஜனவரி 28-ந் தேதி தடா கோர்ட்டு நீதிபதி நவனீதம் தீர்ப்பு அளித்தார்.

    இது இந்தியாவில் பெரும் புயலைக்கிளப்பியது.

    இந்த வழக்கின் விசாரணையானது, மூடப்பட்ட கோர்ட்டு அரங்குக்குள் நடத்தப்பட்டதற்கு எதிராக மனித உரிமை குழுக்கள் அப்போது போர்க்குரல் உயர்த்தின.

    தடா கோர்ட்டு தீர்ப்பை பொறுத்தமட்டில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியாது. தண்டனை பெற்றவர்கள் நேராக சுப்ரீம் கோர்ட்டில்தான் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும். அதுதான் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலும் நடந்தது.

    இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் கே.டி.தாமஸ், டி.பி.வாத்வா, எஸ்.எஸ்.எம்.குவாத்ரி ஆகியோரைக்கொண்ட அமர்வு விசாரித்தது. 1999-ம் ஆண்டு மே மாதம் 11-ந் தேதி இதில் தீர்ப்பு வந்தது.

    நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

    ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள், சுபா சுந்தரம், சண்முக வடிவேல், பாக்கியநாதன், பத்மா, கனகசபாபதி, விக்கி என்ற விக்னேஷ்வரன், ஆதிரை, சங்கர், சாந்தி, மகேஷ் என்ற சுசீந்திரன், தனசேகரன், விஜயானந்தன், சிவரூபன், ரங்கநாத், இரும்பொறை, விஜயன், ராஜசூர்யா என்ற ரங்கன், செல்வலட்சுமி, பாஸ்கரன் ஆகியோர் ஆவார்கள்.

    நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேரும் தூக்கு கயிற்றில் இருந்து தப்பிப்பதற்காக இதுவரை யாரும் நடத்தியிராத அளவுக்கு நீண்டதொரு சட்டப்போராட்டம் நடத்தினர்.

    1999-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 8-ந் தேதி நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேரின் தூக்கு தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது தீர்ப்பு வந்தது.

    3 நீதிபதிகள் அமர்வில் 3 பேரும் தனித்தனி தீர்ப்பு அளித்தார்கள். நீதிபதிகள் வாத்வாவும், காதரியும் 4 பேரது மறு ஆய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். நீதிபதி தாமஸ், நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க பரிந்துரைத்தார். ஆனாலும் 3 பேரில் 2 பேர் பெரும்பான்மை தீர்ப்பு உறுதியானது. 4 பேரின் தூக்கும் உறுதியானது.

    1999 நவம்பர் 5-ந் தேதி 4 பேரையும் தூக்கில் போட முதல்முறையாக ஏற்பாடு ஆனது. அதற்கான உத்தரவும் வேலூர் மத்திய சிறைக்கு சென்றது.

    ஆனால் 4 பேரும் கவர்னருக்கு கருணை மனு அனுப்பினர். அப்போதைய கவர்னர் பாத்திமா பீவி, அவர்களது கருணை மனுவை நிராகரித்தார். அதைத் தொடர்ந்து 4 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். இதனால் தூக்கு நிறுத்தப்பட்டது.

    மரண நிழலில் இருந்து சற்றே அவர்கள் அப்போது தப்பித்தனர்.

    மேலும் கவர்னர் தங்கள் கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 4 பேரும் முறையீடு செய்தனர். அதை நீதிபதி கே.கோவிந்தராஜன் விசாரித்து, மாநில அமைச்சரவையின் ஆலோசனையைப் பெறாமல் 4 பேரின் கருணை மனுவை கவர்னர் நிராகரித்தது செல்லாது என 1999 நவம்பர் 5-ந் தேதி தீர்ப்பு அளித்தார்.

    அதைத் தொடர்ந்து அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் தமிழக அமைச்சரவை கூடி விவாதித்து, நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பது என பரிந்துரைக்கப்பட்டது. அதை ஏற்று 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி கவர்னர் பாத்திமா பீவி உத்தரவிட்டார்.

    இதனால் நளினியின் தலை, தூக்குக்கு தப்பியது.

    ஆனாலும் அவர் தன்னை விடுதலை செய்யக்கோரி அப்போது சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதற்கு தமிழக அரசு பரிந்துரைக்காத நிலையில், அவரது மனுவை ஐகோர்ட்டு 2010 ஏப்ரல் 6-ந் தேதி தள்ளுபடி செய்தது.

    முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரது கருணை மனுவை ஜனாதிபதி பிரதிபா பட்டீல் நிராகரித்து விட்டார் என 2011 ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி தகவல் வெளியானது. இதையடுத்து மூவரும் 2011 செப்டம்பர் 9-ந் தேதி வேலூர் சிறையில் தூக்கில் போடப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு ஏற்பாடு நடந்தது. ஆனால் மூவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்க, தூக்கில் போட 8 வாரங்களுக்கு தடை விதித்து நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணா அமர்வு உத்தரவு போட்டது.

    3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வலியுறுத்தி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் 2011 ஆகஸ்டு 30-ந் தேதி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். 3 பேரும் தூக்கில் போடப்படுவதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றி 2012 மே மாதம் 1-ந் தேதி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதைத் தொடர்ந்து அந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் அமர்வு விசாரித்து 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

    3 பேரும் 23 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு, அவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 432, 433 தந்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி முடிவு எடுக்கலாம் எனவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் 3 நாளில் விடுதலை செய்யப்படுவார்கள் என அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி அதிரடியாக அறிவித்தார்.

    ஆனால் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரது விடுதலைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி சுப்ரீம் கோர்ட்டுக்கு மத்திய அரசு சென்றது.

    அதை தலைமை நீதிபதி பி.சதாசிவம் அமர்வு ஏற்று 3 பேர் விடுதலைக்கு தடை விதித்து 2014 பிப்ரவரி 20-ல் உத்தரவிட்டது.

    3 பேரது மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததை எதிர்த்து மத்திய அரசு மறு ஆய்வு மனுவும் தாக்கல் செய்தது. நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்யவும் சுப்ரீம் கோர்ட்டு அடுத்த ஒரு வாரத்தில் (2014 பிப்ரவரி 27) உத்தரவிட்டது.

    3 பேரது மரண தண்டனையை ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் மறுஆய்வு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அதைத் தள்ளுபடி செய்து 2014 ஏப்ரல் 1-ந் தேதி உத்தரவிட்டது. (அதைத் தொடர்ந்து மத்திய அரசு தாக்கல் செய்த நிவாரண மனுவும் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடியானது.)

    7 பேரது விடுதலை தொடர்பாக முடிவு எடுக்க 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்து அதே ஆண்டின் ஏப்ரல் 25-ந் தேதி உத்தரவிட்டது.

    அதில் ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையில் முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பதாக 3 நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். ஆனால் நீதிபதிகள் லலித்தும், சப்ரேயும் மாநில அரசுக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது என தீர்ப்பு கூறினர். பெரும்பான்மை தீர்ப்புபடி, மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு 2015 டிசம்பர் 2-ந் தேதி வந்தது.

    7 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசை தமிழக அரசு நாடியது. ஆனால் மத்திய அரசு மறுத்து விடவே, இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது.

    அதை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு விசாரித்து, இது தொடர்பாக 3 மாதத்தில் முடிவு எடுக்க மத்திய அரசுக்கு 2018 ஜனவரி 23-ல் உத்தரவிட்டது.

    7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து, கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட்டு 2018 செப்டம்பர் 6-ந் தேதி உத்தரவிட்டது.

    அதன்படி அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை 2018 செப்டம்பர் 9-ல் கூடி, 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரைப்பது என முடிவு செய்தது.

    இதற்கு மத்தியில் 7 பேரின் விடுதலைக்கு எதிராக ராஜீவ் காந்தியுடன் பலியான 3 பேரது குடும்பத்தினர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்து சுப்ரீம் கோர்ட்டு 2019 மே 9-ந் தேதி தள்ளுபடி செய்தது.

    7 பேர் விடுதலையில் ஜனாதிபதிக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

    இது 7 பேர் விடுதலையில் சிக்கலாக மாறியது.

    இதற்கிடையே 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு விசாரித்தது.

    அரசியல் சாசனம் பிரிவு 142 வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து கடந்த மே மாதம் 18-ந் தேதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு அளித்தது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பைத் தொடர்ந்து தங்களையும் விடுதலை செய்து உத்தரவிடுமாறு நளினி, ரவிச்சந்திரன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்தனர்.

    அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு, சுப்ரீம் கோர்ட்டுக்கு உள்ள அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஜூன் மாதம் 17-ந் தேதி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் அவர்கள் இருவரும் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா அமர்வு விசாரித்து நளினி, ரவிச்சந்திரன் மட்டுமல்லாது முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் என 6 பேரையும் விடுதலை செய்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பும், பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு பயன்படுத்திய அரசியல் சாசனம் பிரிவு 142-ஐ பயன்படுத்தித்தான் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என பார்க்கப்படுகிறது.

    அதுமட்டுமல்ல, 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைபட்டிருந்த 6 பேரை வெளியே கொண்டு வந்துள்ள சுதந்திர தீர்ப்பு!

    • பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்துள்ளது.
    • நளினி கைதாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    புதுடெல்லி :

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி கைதாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தாயாரின் உடல்நிலை காரணமாக நளினிக்கு தமிழக அரசு பரோல் வழங்கியுள்ளது.

    இதற்கிடையே ராஜீவ் கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி ஐகோர்ட்டில் அவர் மனு செய்தார். இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 'பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்துள்ளது. அந்த சிறப்பு அதிகாரம் ஐகோர்ட்டுக்கு இல்லை. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன' என தெரிவித்தது.

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராகவும், அதற்கு தடை கோரியும் நளினி சார்பில் வக்கீல்கள் ஆனந்த்செல்வம், ஆனந்த் திலீப் லங்க்டே ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளேன். தனிமை சிறையில் அடைக்கப்பட்டு, கொடுமைகளையும், மன உளைச்சல், உடல் சுகவீனம் உள்ளிட்டவற்றையும் அனுபவித்துள்ளேன்.

    வழக்கு நிலுவையில் இருக்கும்போது பேரறிவாளனை ஜாமீனில் விடுவித்தது போல, தன்னையும் ஜாமீனில் விடுவிக்க வேண்டும். அதன்பிறகு தனது மனுவை முழுவதுமாக விசாரித்து விடுதலை செய்ய வேண்டும். முன்கூட்டியே விடுதலை செய்ய பரிந்துரைத்த தமிழக அரசின் பரிந்துரை பேரறிவாளனுக்கு மட்டும் பொருந்தாது. அனைவருக்கும் பொருந்தக்கூடியதே. எனவே அனைவருக்கும் விடுதலை பெறுவதற்கான உரிமை உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதே விவகாரம் தொடர்பாக ரவிச்சந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் மேல்முறையீடு செய்தது நினைவுகூரத்தக்கது.

    தங்களை விடுதலை செய்ய கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த முருகன்-நளினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #nalinimurugan #rajivgandhi #vellorejail

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் உள்ளனர்.

    7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து கவர்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று காலை உணவை தவிர்த்து 8-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அதேபோன்று பெண்கள் சிறையில் இருக்கும் நளினியும் கடந்த 9-ந் தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் இன்று காலை உணவையும் சாப்பிட மறுத்துவிட்டார். தொடர்ந்து 6-வது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்கள். தொடர் உண்ணாவிரதம் காரணமாக 2 பேரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து அவர்கள் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு முருகனுக்கு 2 பாட்டில் குளுகோஸ், நளினிக்கு 2 பாட்டில் குளுகோஸ் ஏற்றப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் முருகன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சிறைகண்காணிப்பாளர் மூலம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் சிறையிலேயே தான் இறந்துவிட்டால், தனது உடலை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்ய முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    வேலூர் ஜெயிலில் பணியாற்றி வந்த பெண் காவலாளி செல்போன் விவகாரத்தில் சிக்கியிருப்பதை தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை கைதி நளினிக்கும் உதவினாரா? என விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    வேலூர்:

    சென்னை புழல் ஜெயிலில் கைதிகள் கு‌ஷன் படுக்கை வசதியுடன் டி.வி., ரேடியோ, செல்போன்கள் என சுக போகமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் போட்டோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    புழல் ஜெயிலை தொடர்ந்து வேலூர் மத்திய ஜெயிலும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. வழக்கமாக ஆண்கள் ஜெயிலில் தான் கைதிகளிடம் செல்போன், கஞ்சா சிகரெட் பாக்கெட்டுகள் சிக்கும். சமீப காலமாக பெண்கள் ஜெயிலில் செல்போன், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியுள்ளன.

    இங்கு, ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி நளினி உள்பட முக்கிய தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என 150க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலுக்குள் காவலர்கள் உள்பட அனைவரும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    2ம் நிலை காவலராக பணியாற்றி வருபவர் திலகவதி (55). இவர், கடந்த சில மாதங்களாக கேன்டீன் பொறுப்பை கவனித்து வந்தார்.

    கடந்த 15-ந் தேதி காலை பணிக்கு வந்த திலகா, காய்கறிகளை வாங்கி கொண்டு கேன்டீனுக்குள் செல்ல முயன்றார். அப்போது, அவரது ஜாக்கெட்டுக்குள் இருந்து மின்சாதன பொருளின் வைபரட் சத்தம் கேட்டது.

    2-வது நுழைவு கேட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த ஜெயில் ஊழியர் விஜயா, திலகாவை சோதனையிட்டார். அப்போது, அவரது ஜாக்கெட்டுக்குள் செல்போன் ஒன்று இருந்தது. செல்போன் வைபரட் மோடில் வைத்துள்ளார். அழைப்பு வந்ததால் திலகா சிக்கி கொண்டார்.

    இதுபற்றி பாகாயம் போலீஸ் நிலையத்தில் திலகா மீது புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து திலகாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் பெண் கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு போன் கொடுத்து உதவியது அம்பலமாகியுள்ளது.

    கடந்த 2010ம் ஆண்டு ஜெயிலில் செல்போன் வைத்திருந்ததாக ராஜீவ்காந்தி கொலை கைதி நளினி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது சிக்கிய பெண் காவலர், எந்தெந்த கைதிகளுக்கு செல்போன் கொடுத்து உதவி வந்தார்.

    அவர்கள் வெளியில் யார் யாரிடம்... என்னென்ன பேசினார்கள் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் களமிறங்கியுள்ளனர். மேலும் நளினிக்கும் செல்போன் கொடுத்து திலகா உதவினாரா? எனவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திலகவதியின் போனில் இருந்த சிம்கார்டில் உள்ள எண்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, சிறைத்துறை விதியை மீறி செல்போன் எடுத்து சென்ற குற்றத்திற்காக காவலர் திலகாவை சஸ்பெண்ட் செய்து டி.ஐ.ஜி. ஜெயபாரதி உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் புழல் ஜெயிலை போல் வேலூர் மத்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயிலிலும் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என அதிரடியாக ஆய்வு நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டு வருகிறது.
    ×